வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. நாடும் நடப்பும்
Written By Webdunia

மதிப்பு கூட்டு வரி : சாதகமும் - சிக்கலும்!

விற்பனை வரி விதிப்பில் மாநிலங்களுக்கு இடையே நிலவிவரும் வேறுபாடுகளைக் களையவும், விற்பனை வரி செலுத்தாமல் நழுவிவரும் மொத்த மற்றும் சில்லரை (Dealers & Retailers) விற்பனை நிறுவனங்களை வரி வளையத்திற்குள் கொண்டுவரவும் ஏப்ரல் 1 முதல் அறிமுகப்படுத்தப்படவிருந்த மதிப்பு கூட்டு வரி (Value Added Tax - VAT) முறை கடும் எதிர்ப்பைச் சந்தித்துள்ளது!

2003 ஏப்ரல் 1 ஆம் தேதியிலிருந்து மதிப்பு கூட்டு வரி விதிப்பு முறை நாடு முழுவதும் நடைமுறைப்படுத்தப்படும் என்று 2003-2004 ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையை சமர்பித்தபோது நிதியமைச்சர் ஜஸ்வந்த் சிங் அறிவித்தார்.

விற்பனை வரி விதிப்பில் மேம்பட்ட ஒரு வரிச் சீர்த்திருத்தமாக கருதப்படும் மதிப்பு கூட்டு வரி விதிப்பு முறை குறித்த அறிவிப்பை ஜஸ்வந்த் சிங் வெளியிட்டபோது, அதனை நாடாளுமன்ற உறுப்பினர்கள் - தெரிந்தோ, தெரியாமலோ - மேஜைகளை தட்டி வரவேற்றனர்.

வெளியிலும் பெரிதாக எந்த எதிர்ப்பும் பெரிதாக எழவில்லை. எப்பொழுதும் போல இதனை விடமாட்டோம், எதிர்ப்போம் என்று வணிக சங்கங்கள் அறிவித்தன. வேறு எந்த அமைப்புக்களும் எதிர்க்கவில்லை.

ஆனால் மதிப்பு கூட்டு வரி நடைமுறைக்கு வரவேண்டிய நாள் நெருங்க, நெருங்க மாநில அரசுகள் ஒவ்வொன்றாக தங்களால் இதனை உடனடியாக நடைமுறைப்படுத்தமுடியாது என்று அறிவித்து பின்வாங்கத் தொடங்கின!

கடைசியாக, தொழில் மற்றும் பெரு வணிக சமூகத்தினர் மிகவும் எதிர்பார்த்த அந்த நடைமுறை நாள் - ஏப்ரல் 1 ஆம் தேதி - வந்தபோது "மதிப்பு கூட்டு வரி முறையை நடைமுறைப்படுத்துவதில் பல்வேறு மாநிலங்கள் எதிர்கொண்டுள்ள சிக்கல்கள் காரணமாக அதனை நடைமுறைப்படுத்துவது தற்காலிகமாக தள்ளி வைக்கப்படுவதாக" நிதி அமைச்சகம் அறிவித்தது.

மதிப்பு கூட்டு வரியை நடைமுறைப்படுத்துவதை எதிர்த்து வணிகர் சங்கங்கள் அனைத்தும் அகில இந்திய அளவில் இரண்டு நாட்கள் கடையடைப்பு போராட்டத்தை நடத்தப் போவதாக அறிவித்து போராட்டத்தில் குதித்தன.

நாம் இதுவரை காண்டிராத இரண்டு நாள் தொடர் கடையடைப்பும், அதனை நடைமுறைப்படுத்தமாட்டோம் என்று மாநில அரசுகளின் பின்வாங்கலும் மதிப்பு கூட்டு வரி விதிப்பு குறித்து மக்கள் மனதில் கேள்வியை தோற்றுவித்தன.

மதிப்பு கூட்டு வரி என்றால் என்ன? இது நமக்கு நன்மை பயப்பதா? பாதகமானதா? என்ற கேள்வி மக்கள் மனதில் எழுந்தது. காரணம், மதிப்பு கூட்டு வரி நடைமுறைப்படுத்தப்பட்டால் பெரும்பாலான பொருட்களின் விலை தாருமாறாக உயரும் என்று போராட்டத்தில் குதித்துள்ள வணிக அமைப்புகள் மக்கள் மனதில் அச்ச விதைகளை விதைத்திருந்தன.

இப்படிப்பட்ட நிலையில் மதிப்பு கூட்டு வரி விதிப்பு முறை குறித்து ஆழமாக பார்க்கவேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.

மதிப்பு கூட்டல் (Value Addition) என்றால்...

மதிப்பு கூட்டு வரி : மாநில அரசுகளின் தயக்கம்!

மத்திய விற்பனை (Central Sales Tax) வரி இழப்பு!

வணிகர் சங்கங்கள் எதிர்ப்பது ஏன்?

சிறு வணிக, சில்லரை கடைகளுக்கு விலக்கு!

உற்பத்தியாளர்கள் வரவேற்கின்றனர்!

டான்ஸ்டியா கோரும் இரட்டை வாட்!

நமக்கு என்ன நன்மை?

வேல்யூ ஆடட் டாக்ஸ் எனும் இந்த மதிப்பு கூட்டு வரி என்பது தற்பொழுதுள்ள விற்பனை வரி விதிப்பிற்கு மாற்றாக மாநில அரசுகளால் அறிமுகப்படுத்தப்படவுள்ள வரி விதிப்பு முறையாகும்.

உற்பத்தி செய்யப்படும் ஒவ்வொரு பொருளும் இறுதியாக பயனீட்டாளரை சென்றடையும் வரை ஒவ்வொரு கட்டத்திலும் மத்திய மற்றும் மாநில அரசுகளின் விற்பனை வரி விதிப்புகளுக்கு உள்ளாகின்றன.

தற்பொழுது நடைமுறையில் இருந்துவரும் இந்த விற்பனை வரி விதிப்பில் மாநிலத்திற்கு மாநிலம் வரி விதிப்பு விகிதத்தில் வேறுபாடு உள்ளது.

ஒவ்வொரு மாநிலத்திற்கும் விற்பனை வரி மூலம் கிடைக்கும் வருவாயே மிகப்பெரும் வருவாயாக இருப்பதால், தங்களின் வருவாய்த் தேவையை கருத்தில்கொண்டு, விற்பனை வரி விகிதங்களை மாநில அரசுகள் நிர்ணயித்து வருகின்றன.

விற்பனை வரி மட்டுமின்றி, கூடுதல் விற்பனை வரி என்றும், மிகை வரி (Surcharge) மற்றும் கூடுதல் மிகை (Additional Surcharge) வரியென்றும் விதித்து வருகின்றன.

இவ்வாறான விற்பனை விதிப்பு விகிதாச்சாரத்தில் மாநிலத்திற்கு மாநிலம் உள்ள வேறுபாடுகளின் உடன்விளைவாக, மாநிலங்களுக்கு இடையே வணிக போட்டியும் இருந்து வருகிறது.

அண்டை மாநிலத்திலிருந்து வாடிக்கையாளர்களை கவர்வதற்கு சில குறிப்பிட்ட, அதிக கிராக்கியுள்ள பொருட்களின் மீதான விற்பனை வரியை குறைப்பது, அதன்மூலம் விற்பனையை அதிகப்படுத்துவது என்கின்ற வணிக ரீதியான அணுகுமுறையை பல மாநிலங்கள் கடைபிடித்து வருகின்றன.

உதாரணத்திற்கு, கார் மற்றும் இரு சக்கர வாகனங்கள் மீதான விற்பனை வரி புதுவையில் மிகக் குறைவாக இருந்தபோது, தமிழ்நாட்டில் அந்த வாகனத்தை வாங்காமல், புதுவை சென்று வாங்கி அதன் மூலம் பல ஆயிரம் ரூபாய் பலரும் மிச்சப்படுத்திய கதை நாம் அறியாததல்ல.

இப்படிப்பட்ட தான்தோன்றித்தனமான வரி விதிப்பினால் சம்பந்தப்பட்ட மாநில அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுவது மட்டுமின்றி, அம்மாநிலத்தின் உற்பத்தியாளர்களையும், வணிகர்களையும் கடுமையாக பாதித்தது.

எனவே, விற்பனை வரி விதிப்பில் தற்பொழுது நடைமுறையில் உள்ள சிக்கலான பல்முனை வரி விதிப்பை தவிர்க்கவும், மாநிலங்களுக்கு இடையே விற்பனை வரி விதிப்பில் உள்ள வேறுபாடுகளை களையவும், சம தளம் தேவை என்று பெரும் தொழில் நிறுவனங்கள் முதல் சிறு தொழில் நிறுவனங்கள் வரை கேட்டுக்கொண்டதற்கு இணங்க மதிப்பு கூட்டு வரி விதிப்பு கொண்டுவர முடிவெடுக்கப்பட்டது.

இதன்படி, உற்பத்தியாகும் ஒவ்வொரு பொருளுக்கும் (அல்லது சேவைக்கும்) இத்தனை விழுக்காடு விற்பனை வரி என்று அகில இந்திய அளவில் நிர்ணயிக்கப்பட்டுவிடும். அதே வரி விகிதம் கடைசி விற்பனை வரை தொடரும்.

அதாவது உற்பத்தியாகி விநியோகத்திற்கு அளிக்கப்பட்டு, மொத்த விற்பனைக்கு வந்து பிறகு சில்லரை விற்பனைக்கு வந்து அதை நாம் வாங்கும் வரை ஒரே விற்பனை வரி விகிதமே இருக்கும். இப்பொழுது உள்ளது போல மாநிலத்திற்கு மாநிலம் வேறுபாடு இருக்காது.

அதுமட்டுமின்றி, அந்த பொருள் ஒவ்வொரு முனையிலும் வணிக பரிமாற்றம் செய்யப்படும் பொழுது, அதற்கு என்ன விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளதோ அந்த விலை மீது விற்பனை வரி கணக்கீடு செய்யப்படும். அதாவது பொருளின் (லாபம் சேர்த்து) கூட்டப்பட்ட மதிப்பின் மீது விற்பனை வரி கணக்கிடப்படும்.

உதாரணத்திற்கு, உற்பத்தியான பொருள் ஒன்று ரூ.100/- என்று விலை நிர்ணயிக்கப்பட்டு அது வினியோக நிறுவனத்திற்கு விற்கப்படுகிறது. அந்தப் பொருளுக்கு மதிப்பு கூட்டு வரி 5 விழுக்காடு என்று வைத்துக்கொள்வோம்.

பொருளின் விலை ரூ.100.00
விற்பனை வரி 5 விழுக்காடு ரூ. 5.00
--------
ரூ.105.00 ஆகிறது.
--------

ரூ.105.00-க்கு பொருள் பெற்றுக்கொண்ட வினியோக நிறுவனம் (Distributor) அதனை மொத்த விற்பனை நிறுவனத்திற்கு (Whole Sale Merchant) (ரூ.20 லாபம் வைத்து விற்பனை செய்கிறது.

பொருளின் (மதிப்பு கூட்டப்பட்ட) விலை ரூ.125.00
விற்பனை வரி 5 விழுக்காடு ரூ. 6.25
--------
131.25
--------

இதேபோல மொத்த விற்பனையாளர் தனது லாபத்தைக் கூட்டி, சில்லரை விற்பனையாளருக்கு விற்கும்போதும் கூட்டப்பட்ட மதிப்பின் மீது அதே 5 விழுக்காடு விற்பனை வரியை கூட்டி விற்கவேண்டும். இறுதியாக அந்த பொருளின் மீது தனது லாபத்தை கூட்டி சில்லரை வியாபாரி நமக்கு விற்கும்போது அந்த விலையின் மீது மீண்டும் 5 விழுக்காடு கூட்டி நமக்கு விற்பார்.

இதுவே மதிப்பு கூட்டு வரி விதிப்பு முறையாகும். இதனை ஏன் மதிப்பு கூட்டு வரி என்று பெயரிட்டுள்ளார்கள். அதற்குக் காரணமிருக்கிறது. அதனை பிறகு பார்ப்போம்.

இப்படி ஒவ்வொரு வணிக மாற்றத்திலும் விதிக்கப்படும் விற்பனை வரியுடனும், அதனையும் சேர்த்த கூடுதல் மதிப்புடனும் (லாபத்துடனும்) விற்கப்படும் பொருட்களின் மீது ஏற்றப்படும் விற்பனை வரிச் சுமையை இறுதியாக சுமக்கப்போவது பயனீட்டாளர்களாகிய நாம்தான் என்றாலும், இந்த மதிப்பு கூட்டு வரி விதிப்பு முறையினால் கீழ்க்கண்ட நண்மைகள் உள்ளதாக கூறப்படுகிறது.

1. ஒவ்வொரு பொருளுக்கும் மாநிலத்திற்கு மாநிலம் விதிக்கப்படும் மாறுபட்ட, அதிகப்படியான விற்பனை வரி விதிப்பினால் ஏற்படும் விலையேற்றம் தவிர்க்கப்படுகிறது. (தவிர்க்கப்படவேண்டும்!)

2. இந்த வரி விதிப்பின் கீழ் அனைத்து வணிகப் பொருட்களையும் ஐந்து பிரிவுகளாகப் பிரித்து மதிப்பு கூட்டு வரி நிர்ணயிக்கப்படுகிறது.

அ. வாழ்க்கை அடிப்படைத் தேவைகளை நிறைவு செய்யும் அத்தியாவசியப் பொருட்களுக்கு மதிப்பு கூட்டு வரி கிடையாது.
(தற்போது அரிசி உட்பட உணவுப் பொருட்களின் மீது - தமிழ்நாடு உட்பட - விற்பனை வரி விதிக்கப்பட்டுள்ளது)

ஆ. 1 விழுக்காடு ம.கூ.வரி : தங்கம் உள்ளிட்ட ஆபரண பொருட்களுக்கும்;

இ. 4 விழுக்காடு ம.கூ.வரி : மருந்துப் பொருட்களில் இருந்து அன்றாட வாழ்வில் அவசியத் தேவை மற்றும் உற்பத்திக்கான மூலப் பொருட்களுக்கும்;

ஈ. 12.5 விழுக்காடு (வருவாய் இழப்பீடு விகிதம் - ஆர்.எல்.ஆர்.) : மிக அதிகப்படியான விற்பனை வரி விதிக்கப்பட்டுள்ள பொருட்களுக்கும்;

உ. மத்திய, மாநில அரசுகளுக்கு அதிகபட்ச வருவாயை ஈட்டித்தரும் பெட்ரோலியப் பொருட்கள் மற்றும் மதுபானங்கள் மதிப்பு கூட்டு வரி விதிப்பின் கீழ் கொண்டுவராமல் மாநில அரசுகளின் விருப்பத்திற்கேற்ற விகிதாச்சார வரிவிதிப்பிற்கு விட்டுவிடுவதென ஒப்புக்கொள்ளப்பட்டது.

மேற்கண்ட பிரிவுகளின் கீழ் மதிப்பு கூட்டு வரி விதிக்கப்படுவதால் பயனீட்டாளர்களான நமக்கு எந்த அளவிற்கு பயனுள்ளதாக இருக்கும் என்பது தெரியவில்லை. காரணம், இதுவரை மத்திய மாநில அரசுகள் இதனை தெளிவுபடுத்தவில்லை.

ஒவ்வொரு பொருளும் உற்பத்தி செய்யப்படுவதிலிருந்து ஒவ்வொரு கட்டமாக கடந்து கடைசியாக பயனிட்டாளருக்கு வந்து சேரும் வரை, ஒவ்வொரு கட்டத்திலும் அதன் மதிப்பீடு ஏதாவது ஒரு வகையில் உயர்த்தப்பட்டு அதற்குரிய விலை கூட்டப்படுவதும், அந்த விலையின் மீது விற்பனை வரி விதிக்கப்பட்டு, பயனீட்டாளர் அளிக்கும் விலைக்கு ஈடான பொருளாக அது கிடைக்கவேண்டும் என்கின்ற அடிப்படையான தத்துவத்தைக் கொண்டதே மதிப்பு கூட்டு வரி விதிப்பாகும். வேல்யஆடட், அதாவது மதிப்பு கூட்டல் என்பது இதன் மையப் பொருளாகும்.

ஆனால் நமது நாட்டைப் பொறுத்தவரை எந்த ஒரு பொருளும் உற்பத்தியாகி வெளிவந்த பின்னர் எந்த விதத்திலும் மதிப்பு கூட்டல் பெறுவது கிடையாது. பெறும் லாபம் மட்டுமே (Profit Addition) ஒவ்வொரு பரிவர்த்தiயிலும் கூட்டப்பட்டு விற்பனை வரியுடன் விற்கப்படுகிறது.

எனவே, மதிப்பு கூட்டு வரி விதிப்பு முறையை நடைமுறைப்படுத்த நினைக்கும் மத்திய, மாநில அரசுகள், பொருட்களின் மதிப்பு கூட்டை உறுதிசெய்ய - பயனீட்டாளர் அளிக்கும் விலைக்கு ஈடான மதிப்பு கூட்டப்பட்ட பொருளை அளிக்கும் - சட்டப்பூர்வமான விதி முறைகளை வகுத்தளிக்கவேண்டும்.

அவ்வாறு செய்யவில்லையெனில் இந்த மதிப்பு கூட்டு வரிவிதிப்பு என்பது வெறும் மத்திய, மாநில அரசுகளின் கஜானாவை உறுதியாக நிரப்பும் புதிய கருவியாக மட்டுமே இருக்கும்.

மதிப்பு கூட்டு வரி : மாநில அரசுகளின் தயக்கம்!

மதிப்பு கூட்டு வரி விதிப்பு முறையை ஏற்றுக்கொண்ட அனைத்து மாநில அரசுகளும், அதனை நடைமுறைப்படுத்த நாள் குறிக்கப்பட்டதில் இருந்து தயக்கம் காட்டி வருகின்றன.

இதற்கு மூன்று முக்கிய காரணங்கள் கூறப்படுகின்றன.

ஒன்று, மதிப்பு கூட்டு வரி விதிப்பு முறையை எவ்வாறு நடைமுறைப்படுத்துவது என்பதில் மாநில அரசுகளுக்கு உள்ள குழப்பமும், அதனை எவ்வாறு நடைமுறைக்கு கொண்டுவருவது என்பது குறித்த எந்த வழிகாட்டு நெறிமுறைகளையும் உயர் அதிகாரக்குழு வகுத்தளிக்காததே ஆகும்.

தற்பொழுதுள்ள விற்பனை வரி விதிப்பிலிருந்து மதிப்பு கூட்டு வரி விதிப்பு முறைக்கு மாறத் தேவையான நடைமுறை மாற்றங்களை மாநில அரசுகளோ, அல்லது மாநில விற்பனை வரித் துறைகளோ இன்றுவரை மேற்கொள்ளவில்லை.

மேலும், மதிப்பு கூட்டு வரி விதிப்பை நடைமுறைக்கு கொண்டுவரும் சட்ட முன்வரைவிற்கு இதுவரை 6 மாநில அரசுகளே குடியரசுத் தலைவரின் ஒப்புதல் பெற்றுள்ளன. இந்த முன்வரைவுகளை சட்டமன்றத்தில் முன்வைத்து சட்டமாக நிறைவேற்றிய பின்னரே, ம.கூ.வ. நடைமுறைக்கு கொண்டுவர முடியும்.

இரண்டாவதாக, மதிப்பு கூட்டு வரி விதிப்பை நடைமுறைப்படுத்துவதால் தங்களுக்கு ஏற்படும் வருவாய் இழப்பை முழுமையாக ஈடுகட்ட மத்திய அரசு - நிதியமைச்சகம் - உறுதியளிக்கவேண்டும் என்று மாநில அரசுகள் எதிர்பார்க்கின்றன.

மதிப்பு கூட்டு வரி விதிப்பை நடைமுறைப்படுத்துவதன் காரணமாக மாநில அரசுகளுக்கு ஏற்படும் விற்பனை வரி வருவாய் இழப்பை இந்த ஆண்டு முழுமையாக (100ரூ) ஈடுகட்டப்படும் என்றும், அடுத்த நிதியாண்டில் - 2004-2005 - 75 விழுக்காடும், அதற்கு அடுத்த நிதியாண்டில் 50 விழுக்காடும் ஈடுசெய்யப்படும் என்று நிதியமைச்சர் ஜஸ்வந்த் சிங் அறிவித்தார்.

மாநிலங்களுக்கு ஏற்படும் வருவாய் இழப்பை ஈடுகட்ட 700 கோடி ரூபாய் நிதிநிலை அறிக்கையில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் ஜஸ்வந்த் சிங் கூறினார். ஆனால், மதிப்பு கூட்டு வரி விதிப்பு முறைக்கு மாறுவதால் மாநில அரசுகளுக்கு ஏற்படும் இழப்பு - இந்த நிதியாண்டில் மட்டும் - ரூ.6,000 கோடியாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

தொழில் ரீதியாக மிகவும் முன்னேறியுள்ள மாநிலங்களுக்கு வருவாய் இழப்பு அதிகமாக இருக்கும் என்று கூறப்படுகிறது. தென் மாநிலங்களை எடுத்துக்கொண்டால், ஆந்திராவிற்கு ரூ.400 கோடியும், கர்நாடகத்திற்கு ரூ.750 கோடியும், தமிழ்நாட்டிற்கு ரூ.600 கோடியும் வருவாய் இழப்பு ஏற்படும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. அதனால்தான் தங்களுக்கு ஏற்படும் விற்பனை வரி இழப்பை முழுமையாக மத்திய அரசு ஈடுகட்டினால் மட்டுமே மதிப்பு கூட்டு வரி விதிப்பை ஏற்றுக்கொள்வோம் என்று மாநில அரசுகள் - தமிழ்நாடு உட்பட - கூறியுள்ளன.


மத்திய விற்பனை (Central Sales Tax) வரி இழப்பு!

இதைவிட மேலும் ஒரு பெரும் இழப்பையும் மாநில அரசுகள் எதிர்கொள்ள வேண்டியுள்ளது. மதிப்பு கூட்டு வரி முறையை நடைமுறைப்படுத்தும் பொழுது, தற்பொழுது வசூலிக்கப்பட்டு வரும் மாநிலங்களுக்கு இடையிலான விற்பனைக்கு விதிக்கப்படும் மத்திய விற்பனை வரியை 4-லிருந்து 2 விழுக்காடாக குறைக்கப்படும் என்றும், நாளடைவில் அது முற்றிலுமாக நீக்கப்படும் என்றும் மதிப்பு கூட்டு வரி முறையை நடைமுறைப்படுத்த நியமிக்கப்பட்ட மாநில நிதியமைச்சர்களை உறுப்பினர்களாகக் கொண்ட உயர் அதிகாரக் குழுத் (Empowered Committee) தலைவர் அசிம் தாஸ் குப்தா (மேற்கு வங்க மாநில நிதியமைச்சர்) கூறியுள்ளார்.

மத்திய விற்பனை வரி வாயிலாக கிடைக்கும் வருவாயில் மாநில அரசுகளுக்கு கிடைக்கும் வருவாய்ப் பங்கு மட்டும் ரூ.15,000 கோடியாகும்! மத்திய விற்பனை வரி 2 விழுக்காடு ஆக குறைக்கப்பட்டால் மாநிலங்களின் வருவாய் பங்கு ரூ.7,500 கோடியாக குறையும். இதனால் மஹாராஷ்டிர மாநிலத்திற்கு ரூ.1,800 கோடியும், தமிழ்நாட்டிற்கு ரூ.1,000 கோடியும், மேற்கு வங்கத்திற்கு ரூ.800 கோடியும், ஆந்திராவிற்கு ரூ.700 கோடியும், ஹரியானாவிற்கு ரூ.600 கோடியும் இழப்பு ஏற்படும். இந்த இழப்பை ஈடுகட்டுவோம் என்று நிதியமைச்சர் ஜஸ்வந்த் சிங் உறுதியளித்திருந்தாலும், அதற்கு ஏற்ப போதுமான அளவிற்கு நிதிநிலை அறிக்கையில் நிதி ஒதுக்கீடு செய்யவில்லை. வெறும் 700 கோடி ரூபாய் மட்டுமே ஒதுக்கீடு செய்துள்ளார்.

மதிப்பு கூட்டு வரி முறைக்கு ஒவ்வாதது மத்திய விற்பனை வரி. ஆனால் இதனால் கிடைத்து வந்த வருவாயை ஈடுசெய்ய என்ன வழி?

இதுமட்டுமின்றி, பல மாநில அரசுகள் தங்கள் மாநிலத்தில் விற்கப்படும் பொருட்கள் மீது விற்பனை வரி மட்டுமின்றி, கூடுதல் விற்பனை வரியென ஓரிரு விழுக்காடு விதித்து வசூலிக்கின்றன. பல மாநிலங்களில் விற்பனை வரியுடன் மிகை (ளரசhயசபந) வரியும், கூடுதல் மிகை (ஹனனவiடியேட ளுரசhயசபந) வரியும் விதித்து வருகின்றன.

மக்கள் நலத்திட்டங்கள் சிலவற்றை நிறைவேற்றத் தேவையான நிதி திரட்டவோ அல்லது நிதி பற்றாக்குறையை ஈடுகட்டவோ விற்பனை வரி மீது மிகை வரியும், கூடுதல் மிகை வரியும் வசூலிக்கப்படுகின்றன. (கிருஷ்ணா நீர் திட்டத்திற்கு கூடுதல் மிகை வரி விதித்து தமிழக அரசு நிதி திரட்டியது போல)

மதிப்பு கூட்டு வரி முறை நடைமுறைப்படுத்தப்பட்டால் - இப்படிப்பட்ட மேல் வரி விதிப்புகள் சாத்தியமல்ல. இதற்கு மத்திய அரசின் பதில் என்னவென்றும் மாநில அரசுகள் சில கேள்வி எழுப்புகின்றன.

இப்படிப்பட்ட முக்கிய பிரச்சனைகளுக்கு தீர்வு காணவே வரும் 8 ஆம் தேதி அசிம் தாஸ் குப்தா தலைமையிலான உயர் அதிகாரக் குழு (Empowered Committee on VAT) தலைநகர் டெல்லியில் கூடுகிறது. இந்தக் கூட்டத்தில் ஒருமித்த கருத்து ஏற்பட்டால் மட்டுமே மதிப்பு கூட்டு வரி முறை நடைமுறைக்கு வரும் வாய்ப்பு உள்ளது.

மூன்றாவது முக்கிய காரணம், தங்களுடைய அரசியல் வாழ்விற்கு முதுகெலும்பான நிதி ஆதாரத்தை அள்ளித்தரும் இடை நிலை, கடை நிலை வர்த்தக சமூகத்தை பகைத்துக்கொள்ள பாரதிய ஜனதா உட்பட எந்த அரசியல் கட்சியும் விரும்பவில்லை.

மதிப்பு கூட்டு வரி முறையை இவ்வளவு கடுமையாக மொத்த மற்றும் சில்லரை வியாபாரிகள் எதிர்க்கக் காரணம் என்ன? அதனை தனியாகப் பார்ப்போம்.

வணிகர் சங்கங்கள் எதிர்ப்பது ஏன்?

மதிப்பு கூட்டு வரி முறையை நடைமுறைப்படுத்துவதற்கு வணிகர் சங்கங்களே கடும் எதிர்ப்பு காட்டி வருகின்றன. பாரத் உத்யோக் வியாபார் மண்டல் எனும் அகில இந்திய கூட்டமைப்பு, அகில இந்திய வணிகர் சங்கங்களின் கூட்டமைப்பு ஆகிய இரண்டும் இணைந்து அகில இந்திய அளவில் இரண்டு நாள் கடையடைப்பு நடத்தி மதிப்பு கூட்டு வரி முறைக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

இதில் பாரத் உத்யோக் வியாபார் மண்டல் பாரதிய ஜனதா கட்சியின் ஆதரவு பெற்ற வணிகர் அமைப்பு என்பது குறிப்பிடத்தக்கது.

மதிப்பு கூட்டு வரி முறையினால் இவர்களுக்கு என்ன பாதிப்பு?

இந்த வரி விதிப்பு முறையின் முக்கிய அம்சம், ஒவ்வொரு விற்பனையிலும் வரி விதிக்கப்படுவதால், வணிக நிறுவனங்கள் அனைத்தும் - மொத்த வணிக நிறுவங்களில் இருந்து சில்லரை விற்பனை கடை வரை - விற்பனை பட்டியல் (Sales Bill / Cash Bill) வைத்தே விற்பனை செய்யவேண்டும் என்பது கட்டாயமாகும்.

மதிப்பு கூட்டு வரி முறையை நடைமுறைப்படுத்துவதன் மிக முக்கிய நோக்கு, விற்பனை வரி ஏய்ப்பை முழுமையாக தடுத்து, வரி வருவாயை பெருக்குவதுதான்.

விற்பனை பட்டியல் இல்லாமல்தானே நமது நாட்டில் பெரும்பாலான பொருட்கள் விற்கப்பட்டு வருகின்றன? முறையான விற்பனை பட்டியல் இன்றி செய்யப்படும் வணிகத்தால் ஆண்டு ஒன்றிற்கு ரூ.70,000 கோடி விற்பனை வரி ஏய்ப்பு நடந்து வருவதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

தலைநகர் டெல்லியில் மட்டும் இவ்வாறு பட்டியல் இன்றி செய்யப்படும் வணிகத்தால் ஏற்படும் விற்பனை வரி ஏய்ப்பு எவ்வளவு தெரியுமா? ரூ.4,000 கோடியாம்!

சிறு வணிக, சில்லரை கடைகளுக்கு விலக்கு!

மதிப்பு கூட்டு வரி விதிப்பிலிருந்து ஆண்டிற்கு ரூபாய் 5 லட்சம் வரை வணிகம் செய்யும் நிறுவனங்களுக்கும், கடைகளுக்கும் விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாக கூறிய உயர் அதிகாரக் குழுத் தலைவர் அசிம் தாஸ் குப்தா, இந்த கடையடைப்பில் சில்லரை விற்பனையாளர்களும், சிறு வணிகர்களும் கலந்துகொண்டுள்ளது தனக்கு வியப்பளிக்கின்றது என்று கூறியுள்ளார்.

விற்பனை வரி வசூல் செய்துவிட்டு அதனை கணக்குக் காட்டாமல் வரி ஏய்ப்பு செய்துவரும் வணிகர்களே இந்த கடையடைப்பு பின்னணியில் இருப்பதாக குற்றம் சாட்டிய அசிம் தாஸ் குப்தா, மதிப்பு கூட்டு வரி முறையின் கீழ் வரி ஏய்ப்பு செய்வது இயலாத காரியம் என்று கூறியுள்ளார்.

ஆனால், சில்லரை விற்பனை கடைகள் உட்பட அனைத்து வணிக நிறுவனங்களும் விற்பனை பட்டியல் வைத்து வியாபாரம் செய்யவேண்டும் என்பதை கட்டாயமாக்குவது முடியாத காரியம் என்பது பொதுவான கருத்தாகும்.

மேலும் வணிகர்கள் - குறிப்பாக சிறு வணிகர்கள் மீது அதீத கட்டுப்பாடுகள் கொண்டுவரும் இம்முடிவினால் ஊழல் பெருகவும், விற்பனை வரி துறையினரின் கெடுபிடி அதிகரிக்கவும் வழியுள்ளதாக வணிகர்கள் தரப்பில் கூறப்படுகிறது.

சிறு கடையோ, மொத்த வியாபாரமோ எதுவாயினும் நமது நாட்டிலுள்ள அனைத்து வணிக நிறுவனங்களையும் விற்பனை வரி வளையத்திற்குள் கொண்டுவருவதே மதிப்பு கூட்டு வரி விதிப்பு முறையின் முக்கிய நோக்கமாகும்.

இந்த வளையத்திற்குள் வர விரும்பாத சிறு, பெரு வணிக நிறுவனங்களும் அவர்களின் சங்கங்களுமே மதிப்பு கூட்டு வரி முறைக்கு எதிர்ப்பு காட்டி வருவதாக விற்பனை வரித்துறை குற்றம் சாட்டுகிறது.

உற்பத்தியாளர்கள் வரவேற்கின்றனர்!

மதிப்பு கூட்டு வரியை மொத்த மற்றும் சில்லரை வியாபாரிகளும், வியாபார சங்கங்களும் எந்த அளவிற்கு எதிர்க்கின்றனவோ அதற்கு நேர் மாறாகத் தொழில் நிறுவனங்கள் அனைத்தும் பெரிதும் வரவேற்கின்றன.

நாடு முழுவதும் ஒரே அளவிலான விற்பனை வரி விகிதம் நிர்ணயிக்கப்படுவதால் தங்களுக்கு சரி சமமான வணிக வாய்ப்புகள் கிடைக்க வழியேற்பட்டுள்ளதென உற்பத்தியாளர்கள் கூறுகின்றனர்.

உற்பத்தியாளர்கள் உளம் மகிழும் மற்றொரு அம்சமும் இம்முறையில் உள்ளது.

உற்பத்திக்கு தாங்கள் வாங்கும் மூலப்பொருட்களுக்கு மதிப்பு கூட்டு வரி முறையின் கீழ் இவர்கள் செலுத்தும் விற்பனை வரி, பொருள் உற்பத்தி செய்து அதனை விற்கும் பொழுது வசூலிக்கும் விற்பனை வரியிலிருந்து கழித்துக்கொண்டு செலுத்தும் இன்புட் டாக்ஸ் கிரெடிட் வசதி அளிக்கப்படுகிறது. இது உற்பத்தியாளர்களை மிகவும் மகிழ்வித்துள்ளது.

மோட்வாட் போல மதிப்பு கூட்டு வரி முறையை முழுமையாக ஏற்றுக்கொண்டு வரவேற்பதாக் கூறும் நீரஜ் ரப்பர் இன்டஸ்ட்ரீஸ் நிறுவனர் கே.டி.ஏ. சர்மா, இது அனைத்து உற்பத்தியாளர்களுக்கும் இந்தியா முழுவதும் ஒரு சரி சமமான வணிக வாய்ப்பைப் பெற்றுத்தருவதாக உள்ளது என்று கூறினார்.

ஆயினும், இதனை நடைமுறைப்படுத்த நமது அரசியல்வாதிகள் அனுமதிப்பார்களா என்பது சந்தேகமே என்றும் சர்மா கூறினார்.

இதனை மிகச் சிறந்த விற்பனை வரி விதிப்பு முறை என்று வர்ணித்த தமிழ்நாடு சிறு மற்றும் குறு தொழில் சங்கத்தின் பொருளாளரான ஜி.வி. பார்த்தசாரதி, வெள்ளைப் பணத்தில் தொழில் - வணிகங்களை செய்து வருவோருக்கு இம்முறை பயன்தருவதாகவும், கறுப்புப் பண வியாபாரிகளுக்கு நெருக்கடியைத் தருவதாகவும் இருக்கும் என்றார்.

மதிப்பு வரி விதிப்பு முறையின் கீழ் அனைத்துப் பொருட்களும் 0, 1, 4, 12.5 (ஆர்.எல்.ஆர்.) விழுக்காடு என விகிதாச்சார வரி விதிப்பு செய்வதனால் அரசுக்கும், தொழிலுக்கும் மிகச் சாதகமானதாக இருக்கும் என்று பார்த்தசாரதி கூறுகிறார்.

மதிப்பு கூட்டு வரி முறையை மிகவும் வரவேற்கத்தக்க விற்பனை வரி விதிப்பு முறை என்று கூறிய சிட்கோ மின்னணு வளாக உரிமையாளர்கள் சங்கத் தலைவர் கோ. கிருஷ்ணமூர்த்தி, இதனை நடைமுறைப்படுத்துவதற்கு முன் மேற்கொண்டிருக்க வேண்டிய ஆயத்தப்பணிகளை மத்திய, மாநில அரசுகளோ அல்லது விற்பனை வரித்துறையோ செய்யாதது பெரும் தடையாகிவுள்ளது என்று வருத்தத்துடன் குறிப்பிட்டார்.

நமது நாட்டின் தொழில் வளர்ச்சிக்கு மதிப்பு கூட்டு வரி முறையை நடைமுறைப்படுத்துவது இன்றியமையாதது என்றும் கிருஷ்ணமூர்த்தி கூறினார்.

டான்ஸ்டியா கோரும் இரட்டை வாட்!

மதிப்பு கூட்டு வரி முறை நடைமுறைப்படுத்தப்படுவதை முழுமையாக வரவேற்கும் தமிழ்நாடு சிறு மற்றும் குறு தொழில்கள் சங்கம், அதனை துல்லியமாக திட்டமிடாமல், அவசர கதியில் மத்திய, மாநில அரசுகள் நடைமுறைப்படுத்த முயற்சிப்பதாகக் கூறுகிறது.

எடுத்தவுடனேயே தொழில் - உற்பத்தி முனையிலிருந்து சில்லரை வியாபார நிறுவனங்கள் வரை அனைத்து மட்டத்திலும் ஒரே நேரத்தில் மதிப்பு கூட்டு வரியை நடைமுறைப்படுத்துவது குழப்பத்தையும், எதிர் விளைவுகளையுமே ஏற்படுத்தும என்று கூறுகிறார் டான்ஸ்டியா தலைவர் கே.வி. கனகாம்பரம்.

"இதனை உற்பத்தி - தொழிற்சாலை அளவில் முதலில் நடைமுறைப்படுத்தவேண்டும். அதனால் கிடைக்கும் அனுபவங்களை நன்கு பரிசீலித்து அடுத்தடுத்து மட்டங்களுக்கு நடைமுறைப்படுத்த அரசுகள் முன்வரவேண்டும். இப்பொழுது ஏற்பட்டுள்ள தடைகளையும், குழப்பங்களையும் களைய இதுவே வழி" என்ற கனகாம்பரம் கூறுகிறார்.

விற்பனை வரிச்சட்டம் உற்பத்தியாளரையும், ஒரு வியாபாரி என்கின்ற கண்ணோட்டத்துடனேயே பாவித்து வருகிறது. துவக்கம் முதல் இருந்து வரும் இப்படிப்பட்ட அடிப்படைத் தவறை இப்பொழுதாவது திருத்தியிருக்க வேண்டும். ஆனால் அதைச் செய்யவில்லை. இதற்குப் பிறகாவது அதனை செய்ய வேண்டும் என்று கூறுகிறார் டான்ஸ்டியா பொதுச் செயலர் ஆர். கண்ணன்.

ஹெர்பல் ஸ்பெஷாலிட்டி பிராக்கட் எனும் நிறுவனத்தை நடத்திவரும் கண்ணன், உற்பத்தியாளரையும், விற்பனையாளர்களையும் இனம் பிரித்து மதிப்பு கூட்டு வரியை நடைமுறைப்படுத்துவதே சரியாக இருக்கும் என்று கண்ணன் கூறுகிறார்.

"இரண்டு விதமான மதிப்பு கூட்டு வரிமுறை நடைமுறைப்படுத்தவேண்டும். உற்பத்தியாளர்களுக்குத் (ஆயரேகயரவரசநசள) தனியாகவும், விற்பனையாளர்களுக்குத் (னுளைவiரெவடிசள & னுநயடநசள) தனியாகவும் இருக்கவேண்டும். இதனை உயர் அதிகாரக் குழு பரிசீலனை செய்து நடைமுறைப் படுத்தவேண்டும்" என்று நிதியமைச்சருக்கு அளித்துள்ள பரிந்துரையில் டான்ஸ்டியா கூறியுள்ளது.

நாளை நடைபெறவுள்ள உயர் அதிகாரக் குழுக் கூட்டத்தில் டான்ஸ்டியாவின் பரிந்துரைகளை கவனத்தில்கொண்டு தெளிவான, நிதானமான, இரட்டை வாட் வரி விதிப்பு முறையை நடைமுறைப்படுத்தினால் மட்டுமே தற்பொழுது நிலவும் பிரச்சனைகளுக்கும், குழப்பங்களுக்கும் தீர்வுகாண முடியும் என்று தெரிகிறது.

நமக்கு என்ன நன்மை?

பெரும் கூச்சலுடனும், குழப்பத்துடனும் நடைமுறைக்கு வரத்துடிக்கும் இந்த மதிப்பு கூட்டு வரியினால் பயனீட்டாளர்களான நமக்கு என்ன நன்மை?

"நன்மையா? அப்படி ஏதும் தெரியலைப்பா" என்றுதான் பதில் சொல்லத் தோன்றுகிறது.

வாட் குறித்து பேசும் அனைவரிடமும் எங்களுக்கு றhயவ நன்மை? என்று கேட்டால் புத்தர் பாணியில் அமைதியாக சிரிக்கிறார்கள், அவ்வளவுதான்.

மதிப்பு கூட்டு வரியை நடைமுறைப்படுத்துவதனால் தங்களுக்கு கூடுதல் வருவாய் கிடைக்கும் என்று கணக்கு போட்டுவிட்ட மாநில அரசுகள் புன்னகையுடன் வரவேற்கின்றன.

இதனால் தங்களுக்கு வருவாய் இழப்பு ஏற்படும் என்று கருதும் அரசுகள், (தமிழ்நாடு அரசு போல) வருவாய் இழப்பு ஈடுகட்டப்பட்டால், மதிப்பு கூட்டு வரியை நடைமுறைப்படுத்துவோம் என்கின்றன.

இன்புட் டாக்ஸ் கிரெடிட், இந்தியா முழுவதும் சமமான வணிக வாய்ப்பு கிடைப்பதால் தொழில் - உற்பத்தி நிறுவனங்கள் வரவேற்கின்றன.

தங்களை விற்பனை வரி வளையத்திற்குள் வளைத்துப் போடும் இம்முறையை மொத்த வணிகம் முதல் சில்லரை கடைகள் வரை எதிர்க்கின்றன.

ஆனால் நமக்கு என்ன கிடைக்கப்போகிறது? சில மாநிலங்களின் நிதியமைச்சர்கள் பேசியதை வைத்து பார்க்கும்போது இதுதான் தெரிகிறது :

1. பெட்ரோலியப் பொருட்கள், மதுபான விலைகள் உயரும்.

2. ஜவுளிகள், சர்க்கரை, புகையிலை விலைகள் உயரும்.

3. 12.5 விழுக்காடு வருவாய் இழப்பீடு விகிதாச்சார வரி விதிப்பின் கீழ் வருவதால் காப்பி, தேநீர், மருந்துப் பொருட்களின் விலை உயரும் (நன்றி : விஜயராமராவ் - ஆந்திர விற்பனை வரித்துறை அமைச்சர்)

4. வாகன டயர், சமைக்கப்பட்ட உணவுகள், ரொட்டி தவிர மற்ற அடுமண் உணவுப் பொருட்கள், சிமெண்ட் கூரைகள், மேசை - நாற்காலிகள், பால் உணவுகள், துகள் உணவுகள், ஹார்லிக்ஸ், வீவா, வாகன உபரி பாகங்கள், பயண பெட்டிகள், அறுவை சிகிச்சை உபகரணங்கள் ஆகியவற்றின் விலை உயரும்.

5. கோழி, முட்டை, மீன், கால்நடைத் தீவனம், தண்ணீர் பம்ப், காகிதம், பத்திரிக்கை காகிதம், தையல் இயந்திரம், மண்ணெண்ணெய், தொலை பிரதி இயந்திரம், கம்பியில்லா தொடர்பு கருவிகள், சுவர் வண்ணங்கள், வாகனங்கள், சிமெண்ட், சாக்லெட், பிஸ்கட், பேட்டரிகள், குளிர்ப்பதன பெட்டி, எழில் சாதனங்கள் ஆகியவற்றின் விலை குறையும்.

அவ்வளவுதானப்பா வாட