1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. நாடும் நடப்பும்
Written By Veeramani
Last Updated : செவ்வாய், 1 ஏப்ரல் 2014 (18:15 IST)

நரேந்திர மோடி ஆட்சியின் முறைகேடுகள் - ஊழல்கள்

நரேந்திர மோடி ஆட்சிக்கு வந்தால் மண்ணை பொன்னாக்கி விடுவார். நாட்டை காக்க வந்த ரட்சகன் மோடி. அவரால்தான் குஜராத் வளர்ச்சி பெற்றது. அப்படிப்பட்டவர் பிரதமரானால் இந்தியாவே ஒளிரும் என்றெல்லாம் மக்களை நம்ப வைக்க விளம்பர உத்திகளை கையாளும் இந்த தருணத்தில் மோடி ஆட்சியின் முறைகேடுகளையும், ஊழல்களையும் அவிழ்க்க வேண்டியது சமூக கடமையாகிறது.

1. டாட்டாவின் நானோ திட்டத்திற்கு ஒரு சதுர மீட்டர் ரூ.10 ஆயிரம் மதிப்புள்ள நிலத்தை வெறும் ரூ.900க்கு தரப்பட்டது. இதனால் டாட்டா குழுமம் அடித்த ஜாக்பாட் ரூ.33,000 கோடி.
 
2. அதானி குழுமத்திற்கு முந்த்ரா துறைமுகம் மற்றும் முந்த்ரா விசேஷ பொருளாதார மண்டலம் உருவாக்கிட நிலம் சதுர அடி / ச.மீ. ஒன்றுக்கு வெறும் ஒரு ரூபாய்க்கு அதாவது வெறும் 10 காசுகளுக்கு தரப்பட்டது. இதனை அதானி குழுமம் பின்னர் சதுர மீட்டர் ரூ.100க்கு விற்று கொழுத்த இலாபம் பார்த்தனர். இந்த விற்பனை சட்ட விரோதமானது.
 
3. கே.ரஹேஜா என்ற ரியல் எஸ்டேட்டுக்கு முக்கிய பகுதியில் ஒரு ச.மீ. ரூ.470 வீதம் 3.76 லட்சம் சதுர மீட்டர் விற்கப்பட்டது. அதற்கு அருகாமையில் விமானப்படை நிலம் கேட்டபொழுது ஒரு சதுர மீட்டர் ரூ.1100 என கூறப்பட்டது.
 
4. நவ்சாரி விவசாயப் பல்கலைக்கழகத்திற்கு சொந்தமான 65,000 ச.மீட்டர் நிலம் சத்ராலா ஓட்டல் குழுமத்திற்கு விடுதிகட்ட தாரை வார்க்கப்பட்டது. பல்கலை நிர்வாகம் எதிர்ப்புத் தெரிவித்தும் அது புறந்தள்ளப்பட்டது. இந்த இடமாற்றம் நேரடியாக நரேந்திர மோடியின் மேற்பார்வையின் கீழ் நடத்தப்பட்டது. இதனால் குஜராத் அரசுக்கு இழப்பு ரூ.426 கோடி.
 
5. அண்டை நாட்டின் எல்லை ஓரத்தில் உள்ள நிலம் அரசின் கைகளில்தான் இருக்க வேண்டும். ஏனெனில் இது தேச பாதுகாப்புடன் தொடர்புடைய அம்சம்.  ஆனால், ஒரு பெரிய பரப்பளவு உள்ள நிலம் உப்பு நிறுவனங்களுக்கு தரப்பட்டது. இந்த நிறுவனங்கள் வெங்கையா நாயுடுவின் உறவினர்களுக்கு சொந்தமானது.

6. எஸ்ஸார் கார்ப்பரேட் குழுமத்திற்கு 2.08 லட்சம் சதுர மீட்டர் நிலம் தரப்பட்டது. இதில் ஒரு பகுதி வனங்கள் நிறைந்தது. நீதிமன்றத்தின் தீர்ப்புப்படி இது சட்டவிரோதமானது.
 
7. அகமதாபாத் நகரின் அருகில் சந்தை நிலவரப்படி விலை உயர்ந்த 25,724 ச.மீ. இடம் பாரத் ஓட்டல் குழுமத்திற்கு தரப்பட்டது. இதற்காக டெண்டர் எதுவும் கோரப்படவில்லை.

8. 38 மிகப்பெரிய ஏரிகளில் மீன் பிடிக்கும் உரிமை டெண்டர்கள் கோரப்படாமலேயே ஒரு சிலருக்கு தரப்பட்டது.
 
9. ஹாசிரா எனும் இடத்தில் எல்&டி நிறுவனத்திற்கு 80 ஹெக்டேர் அளவுள்ள நிலம் சதுர மீட்டர் ஒன்றுக்கு வெறும் ரூ.1 அதாவது சதுர அடி வெறும் 10 காசுக்கு தாரை வார்க்கப்பட்டது.
 
10. Vibrant குஜராத் விழாக்களில் பங்கேற்ற தொழில் அதிபர்களுக்கு நகரின் பல முக்கிய இடங்களில் சந்தையில் விலை உயர்ந்த இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டன.
 
11. கறுப்பு பட்டியலில் வைக்கப்பட்ட ஒரு நிறுவனத்திடமிருந்து ஒரு கிலோ ரூ.48க்கு கால்நடை தீவனங்கள் வாங்கப்பட்டன. ஆனால் வெளிச்சந்தையில் இத்தீவனம் ரூ.24க்கு கிடைக்கிறது.
 
12. அங்கன்வாடி மையங்களுக்கு உணவுப் பொருட்கள் வாங்கியதில் இரு நிறுவனங்களுக்கு மட்டுமே அனுமதி. இதன் காரணமாக இழப்பு ரூ.92 கோடி.

13. GSPC எனும் நிறுவனம் தொடங்கிட குஜராத் அரசாங்கம் ரூ.4993.50 கோடி முதலீடு செய்தது. இதுவரை வருமானம் ரூ.290 கோடி மட்டுமே. ஆண்டிற்கு பல கோடிகள் இழப்பு ஏற்பட்டுக் கொண்டுள்ளது.
 
14. Sujalam Sufalam Yojana எனும் திட்டத்திற்கு 2003 ஆம் ஆண்டு ரூ.6237.33 கோடி ஒதுக்கப்பட்டது. 2005 ஆம் ஆண்டு இத்திட்டம் பூர்த்தி அடைந்திருக்க வேண்டும். இதுவரை பூர்த்தியாகவில்லை. குஜராத் சட்டமன்றத்தின் பொதுக் கணக்குக்குழு (Public Accounts committee) இதனை ஆய்வு செய்த பொழுது ரூ.500 கோடி ஊழல் நடந்திருப்பது கண்டு பிடிக்கப்பட்டது. இந்தக் குழுவில் பா.ஜ.க. உறுப்பினர்களும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த அறிக்கை சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்படவில்லை.
 
15. நரேந்திர மோடி விமானத்தில் பயணிக்கும் பொழுது குஜராத் அரசாங்கத்தின் விமானத்தையோ அல்லது ஹெலிகாப்டரையோ பயன்படுத்துவது இல்லை.  ஏர்-இந்தியா, ஜெட் ஏர்வேஸ் போன்ற மக்கள் பயன்படுத்தும் விமானங்களிலும் பயணிப்பது இல்லை. மிகவும் சொகுசான தனியார் முதலாளிகளுக்கு சொந்தமான விமானங்களில்தான் அவர் பயணிப்பார். அதன் செலவு தொழில் அதிபர்கள் ஏற்றுக் கொள்வர். அண்மையில் திருச்சிக்கு வந்தபோதும் இதே போன்று தனி விமானத்தில்தான் வந்தார். அக்டோபர் 18 அன்று சென்னைக்கும் தனி விமானத்தில்தான் வந்தார்.
 
16. இண்டிகோல்டு எனும் நிறுவனம் சட்டத்தை மீறி 36.25 ஏக்கர் பண்ணை நிலத்தை வாங்கி அதிக விலைக்கு விற்று கொழுத்த லாபம் அடைந்தது. இதுவரை இந்த நிறுவனம் மீது நடவடிக்கை இல்லை.
 
17. குஜராத் அரசுக்கு சொந்தமான பிப் பவர் மின்நிலையத்தின் 49 சதவீதப் பங்குகள் ஸ்வான் எனர்ஜி எனும் நிறுவனத்திற்கு விற்கப்பட்டது. இதற்காக எந்த டெண்டரும் கோரப்படவில்லை.

இதுதான் குஜராத்தின் வளர்ச்சி. இவ்வாறுதான் இந்தியா ஒளிர வேண்டுமா?