வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. நாடும் நடப்பும்
Written By Sasikala
Last Updated : திங்கள், 9 ஜனவரி 2017 (13:42 IST)

விவசாயிகளுக்கு நிவாரணமில்லை: நடிகர்களுக்கு மட்டும் 50 லட்சம் நிதி?

தமிழகம் இன்று இருபெரும் பிரச்சனைகளை எதிர் நோக்கி உள்ளது. ஒன்று விவசாயிகளின் தொடர் மரணங்கள், மற்றொன்று ஜல்லிக்கட்டு. ஒன்று வாழ்வாதாரம் சார்ந்தது. மற்றொன்று பண்பாடு சார்ந்தது. ஒன்றில் செயல் அற்ற, செயல்படாத மாநில அரசின் கையாலாகாதத்தனத்தினால் தினம் தினம் விவசாயிகள் மரணிக்கின்றன. மற்றொன்றில் சட்டங்களைச் சுட்டிக்காட்டி தமிழனை வஞ்சிக்கிறது மத்திய அரசு.


 
நாடு பார்த்தது உண்டா! இந்த நாடு பார்த்தது உண்டா !  தங்க மணி ரெங்க மணி ரொன்ங்க மணி
 
140 ஆண்டுகளில் இல்லாத ஒரு வறட்சி. தினம் தினம் மரணச் செய்திகள்,  100 பேர் இறந்த பிறகு தாமதமாக ஆய்வுக் கூட்டங்கள். விவசாயி மரணங்கள் முதுமையால், உடல் உபாதையால் ஏற்படுகிறது என்ற ரொன்ங்க மணி போன்ற அமைச்சர்களின் விளக்கங்களை நாடு பார்த்தது உண்டா! இந்த நாடு பார்த்தது உண்டா!
 
விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காத OPS உலக திரைப்பட விழாவுக்கு, நவீன கூத்தாடிகளுக்கு, 50 லட்சங்கள் நன்கொடை வழங்குகிறார். இவரை போல ஒரு முதலமைச்சரை நாடு பார்த்தது உண்டா! இந்த நாடு பார்த்தது உண்டா!
 
விவசாயிகளுடன் பேசாத டிஜிட்டல் பிரதமர் வெளிநாட்டு வாழ் இந்தியர்களிடம் பேசி கொண்டிருக்கிறார். அவரை ஜெயிக்க வைத்தவர்கள் அவர்கள் தானே! இவரை போல ஒரு பிரதமரை நாடு பார்த்தது உண்டா! இந்த நாடு பார்த்தது உண்டா!
 
அழகு அழகு மெரீனா அழகு
 
நான் அண்ணா காசரேவின் ஊழலுக்கு எதிரான இளைஞர்களின் திரளை பார்த்து இருக்கிறேன். அதைவிட பன்மடங்கு வேகமாக பலமாக ஜல்லிக்கட்டுக்காக மெரீனாவிலும், விவசாயிகளுக்காக சேப்பாக்கத்திலும் திரண்ட பெரும் திரள்  இளைஞர்களின்   கூட்டம். பணத்திற்காக திரண்டக் கூட்டம் அல்ல. மதுவிற்க்காக, பிரியாணிக்காக அழைத்து வரப்பட்டக் கூட்டம் அல்ல. முழுக்க முழுக்க இணையத்தள தொடர்பால் திரண்டக் கூட்டம். ஒட்டு மொத்த தமிழ் சமூகத்தின் பிரதிபலிப்பால் திரண்ட உணர்வுகளின்  கூட்டம். அழகு! அழகு! தமிழன் அழகு! வேஷ்டி அழகு!
 
வானத்து நட்சத்திரங்கள்
 
மனிதனின் நன்மை தீமைகளை எழுத வானவர்கள்/தேவதைகள் பூமிக்கு வருவார்கள் என நான் குரானிலும், பைபிளும் நான் படித்து இருக்கிறேன். ஆனால் அதை நான் மெரீனாவில் இன்று நேரில் பார்த்ததை பதிவு செய்கிறேன். ஒட்டு மொத்த உலகத்தையும் காக்க/ரட்சிக்க/ ஒரேஒரு தேவத்தூதன் தான் வருவார் என யார் சொன்னது? இன்று மெரீனாவிலும் தங்களின் உணர்வுகளை பதிவு செய்த அனைவரும் தேவத்தூதனின் சாயல்களே.
 
இது தான் புதிய இந்தியா ரஜினி சார்!
 
ஹிந்தி நடிகர் நானா படேகர் தனது நாம் பௌண்டேசன் மூலம்  மகாராஷ்டிராவின் விதர்பா மற்றும் மர்த்தவாடா பகுதிகளில் 6.5 கோடிகள் நிதி திரட்டி வறட்சி நிவாரண பணிகளை மேற்கொண்டது எல்லாம் பேப்பரில்  நம் கலைக் கூத்தாடிகள் படித்து இருப்பார்கள் என்று நம்புவோம் குறிப்பாக நம் ரஜினி சார்.
 
ரஜினி சார்! நீங்க சொன்ன அதே புதிய இந்தியாவில் தான் விவசாயி செத்துக்கிட்டு இருக்கான்.  உங்களின் ஒவ்வாரு துளி வேர்வைக்கும் ஒரு தங்க காசு தந்த தமிழன் தான் உரிமைக்காக போராடிக் கொண்டிருக்கிறான். இது வரை கலைக் கூத்தாடிகளுக்காக மட்டுமே திரண்ட இளைஞர்கள், மக்கள் பிரச்சனைகளுக்காக திரண்டது தான் புதிய இந்தியா ரஜினி சார்.
 
விஜய் சேதுபதி பாட்டு
 
இந்த கட்டுரை எழுதும் போது ரேடியோவில் விஜய் சேதுபதியின் ஒரு பாட்டு கேட்கிறது அந்த பாட்டு 
மக்கா கலங்குதப்பா 
மடி புடிச்சு இழுக்குத்தப்பா
நாடு  கலங்குதப்பா 
நாட்டு மக்க தவிக்குத்தப்பா 
என்ன பெத்த மகா ராஜா 
நீ இந்த ஊரக் காக்கும் ராஜா 
இதை நம் அன்பு முதலமைச்சரும் பிரியமான பிரதமரும் கேட்க பணிக்கிறேன்.

இரா .காஜா பந்தா நவாஸ் ,
பேராசிரியர் 
[email protected]