வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. நாடும் நடப்பும்
Written By வீரமணி பன்னீர்செல்வம்
Last Updated : ஞாயிறு, 28 டிசம்பர் 2014 (16:03 IST)

2014 ஆம் ஆண்டில் தமிழகத்தின் முக்கிய நிகழ்வுகள் - ஒரு பார்வை

இயக்குனர் பாலு மகேந்திரா மரணம்

தமிழ்சினிமாவின் மிகச்சிறந்த இயக்குநர்களில் ஒருவரான பாலுமகேந்திரா, உடல்நலக் குறைவால் 13.02.14 அன்று மரணம் அடைந்தார்.

மூடுபனி, மூன்றாம் பிறை, வீடு, சந்தியா ராகம் போன்ற சிறந்த படங்களை இயக்கிய இவர், ஒரு மிகச் சிறந்த ஒளிப்பதிவாளரும் ஆவார். புகழ் பெற்ற இயக்குநர்கள் பாலா, ராம், வெற்றிமாறன் மற்றும் பலர் இவரிடம் உதவி இயக்குநர்களாக இருந்து இருக்கின்றனர்.

ஐந்து முறை தேசிய விருது வென்றவரான பாலு மகேந்திரா, ஒளிப்பதிவாளர்கள் சந்தோஷ் சிவன், ரவி கே. சந்திரன், கே.வி.ஆனந்த் போன்றோருக்கு தூண்டுகோலாக இருந்திருக்கிறார்.

தமிழ் சினிமா வரலாற்றில் மறக்க முடியாத சகாப்தம் பாலு மகேந்திரா.

ராஜீவ் கொலைக் குற்றவாளிகள் தூக்கு ரத்து

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் முருகன், சாந்தன், பேரறிவாளனுக்கு விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்து 18.02.14 அன்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த மூவரின் கருணை மனுக்களை பரிசீலிப்பது தொடர்பாக குடியரசுத் தலைவர் 11 ஆண்டுகள் கால தாமதம் செய்ததன் காரணமாக, பாதிக்கப் பட்டவர்களுக்கு தண்டனை குறைப்பு செய்வதாக நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

இதே போன்ற மற்றொரு வழக்கில் தூக்குத் தண்டனையை ஆயுளாக குறைத்து கடந்த ஜனவரி 21 ஆம் தேதி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதன் அடிப்படையில் முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோர், தங்களுக்கும் தண்டனை குறைப்பு வழங்க வேண்டும் எனக் கோரி மனுத்தாக்கல் செய்திருந்தனர்.

இந்த மனுவை உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி பி.சதாசிவம் உள்ளிட்ட 3 நீதிபதிகள் அடங்கிய அமர்வு விசாரித்தது.

தண்டனை பெற்ற மூவரும், ராஜீவ் காந்தி கொலை தொடர்பான தங்களின் செயலுக்காக சிறிது கூட வருத்தப்படவில்லை. எனவே, அவர்களுக்கு கருணை காட்டத் தேவையில்லை. மூவரும் சிறையில் மகிழ்ச்சியுடன் இருக்கிறார்கள் என்று மத்திய அரசு சார்பில் வாதிடப்பட்டது. இந்த வாதத்தை உச்ச நீதிமன்றம் ஏற்றுக்கொள்ளவில்லை.

முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோரின் கருணை மனுக்களை பரிசீலனை செய்வதில் தேவையற்ற கால தாமதம் செய்யப்பட்டுள்ளதால், அவர்கள் அனைவரின் தூக்குத் தண்டனையையும் ஆயுள் தண்டனையாக குறைப்பதாக உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. மூவரும் 23 ஆண்டுகளாக சிறையில் இருப்பதை கருத்தில் கொண்டு, மாநில அரசு தனக்குள்ள அதிகாரத்தை பயன்படுத்தி அவர்களை விடுவிக்கலாம் என்றும் உச்ச நீதிமன்றம் கருத்து தெரிவித்தது.

அரசிதழில் காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பு அரசிதழில் வெளியீடு
 
காவிரி நடுவர் மன்றம் வழங்கிய இறுதித் தீர்ப்பை அரசிதழில் மத்திய அரசு 19.02.14 அன்று வெளியிட்டது. 2007 ஆம் ஆண்டு வெளியான இந்த தீர்ப்பு ஏறக்குறைய 6 ஆண்டுகளுக்குப் பிறகு மத்திய அரசின் அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பாக, 2013 பிப்ரவரி 19 ஆம் தேதியிட்டு மத்திய நீர் வளத்துறை செயலர் கையெழுத்திட்ட அரசாணை இடம்பெற்ற அரசிதழின் நகல், உச்ச நீதிமன்றப் பதிவாளர் அலுவலகத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

அதன் நகல்கள் காவிரி நதிநீர் பங்கீட்டு வழக்கில் தொடர்புடைய தமிழ்நாடு, கர்நாடகம், கேரளம், புதுச்சேரி அரசுகளுக்கு வழங்கப்பட்டன.

"உச்ச நீதிமன்ற உத்தரவின்படியே அரசிதழில் நடுவர் மன்றத் தீர்ப்பு வெளியிடப்படுகிறது. உச்ச நீதிமன்றத்தில், நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பு தொடர்பான வழக்கு விசாரணையை பாதிக்காத வகையில் இது வெளியிடப்படுகிறது'' என்று அரசிதழில் மத்திய அரசு கூறியுள்ளது.

அரசிதழில் நடுவர் மன்றத் தீர்ப்பின் விவரம்: காவிரி நதியில் இருந்து கிடைக்கும் மொத்த நீர் அளவு 740 டிஎம்சி ஆகும். அதில் கேரளத்துக்கு 30 டிஎம்சி, கர்நாடகத்துக்கு 270 டிஎம்சி, தமிழ்நாட்டுக்கு 419 டிஎம்சி, புதுச்சேரிக்கு 7 டிஎம்சி என மொத்தம் 726 டிஎம்சி தண்ணீர் ஒதுக்கப்பட வேண்டும்.

கையிருப்பு நீர் அளவு: சுற்றுச்சூழல் பாதுகாப்புக்காக 10 டிஎம்சியும், கடலில் கலக்கும்போது தவிர்க்க முடியாத வகையில் செல்லும் உபரி நீருக்காக 4 டிஎம்சி நீரும் ஒதுக்க வேண்டும்.

கேரளத்துக்கு ஒதுக்கப்படும் 30 டிஎம்சி நீரில் கபினி துணை ஆற்றில் 21 டிஎம்சி, பவானி துணை ஆற்றில் 6 டிஎம்சி, பம்பாறு துணை ஆற்றில் 3 டிஎம்சி செல்லும் வகையில் தண்ணீர் திறக்கப்பட வேண்டும்.

காவிரி நதியில் இடர்பாடு காலங்களில் நீர்வரத்து குறைவாக இருக்கும் என்பதால், அதற்கேற்ப நீரின் அளவை கேரளம், கர்நாடகம், தமிழ்நாடு, புதுச்சேரி இடையே குறைத்துக் கொள்ளலாம்.

திமுகவிலிருந்து மு.க.அழகிரி நிரந்தர நீக்கம்
 
திமுகவிலிருந்து அக்கட்சியின் தென்மண்டல முன்னாள் அமைப்புச் செயலாளரும், கருணாநிதியின் மகனுமான மு.க.அழகிரி 26.03.14 அன்று நிரந்தரமாக நீக்கப்பட்டார்.

இது தொடர்பாக அறிக்கை வெளியிட்ட திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன், ”திமுகவின் கட்டுப்பாட்டை மீறியும், திமுகவுக்கு அவப்பெயர் ஏற்படும் வகையிலும் செயல்பட்டு வந்ததால், கட்சியிலிருந்து ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு மு.க.அழகிரி தற்காலிகமாக நீக்கப்பட்டார்.

இந்நிலையில் திமுக தலைமையையும், கட்சியின் முன்னோடிகளையும் இழிவுபடுத்தும் வகையில் விமர்சித்து வருவதாலும், திமுகவுக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் தொடர்ந்து செயல்பட்டு வருவதாலும் திமுகவிலிருந்து அறவே நீக்கி வைக்கப்படுகிறார் என்று அதில் கூறப்பட்டுள்ளது. திமுகவிலிருந்து மு.க.அழகிரி ஜனவரி 24ஆம் தேதி தாற்காலிகமாக நீக்கம் செய்யப்பட்டார்.

திமுக கூட்டணியில் சேர இருந்த கட்சிக்கு (தேமுதிக) எதிராகப் பேசியதுடன், திமுகவினர் சிலர் மீது, பி.சி.ஆர் எனும் வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்வதற்கும் காரணமாக இருந்ததாகக் கூறி, மு.க.அழகிரி அப்போது சஸ்பெண்ட் செய்யப்பட்டார். ஆனாலும் அழகிரி தொடர்ந்து திமுக தலைமையை கடுமையாக விமர்சித்து வந்தார்.

திமுகவில் பணம் பெற்றுக்கொண்டே மக்களவைத் தேர்தலுக்கான சீட்டுகள் வழங்கப்பட்டன என்றும், திமுகவின் சொத்துகளை ஸ்டாலின் அபகரிக்க முயற்சிக்கிறார் என்றும் அழகிரி குற்றம்சாட்டி வந்தார்.

மேலும் பாஜகவின் தேசிய தலைவர் ராஜ்நாத் சிங், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, நடிகர் ரஜினிகாந்த் உள்ளிட்டவர்களை அழகிரி சந்தித்துப் பேசினார்.

இதில், வைகோ அழகிரியின் இல்லத்துக்கே சென்று பேசியது, திமுக தலைமைக்கு அதிக கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் திமுக தலைவர் கருணாநிதி, பொதுச்செயலாளர் க.அன்பழகன், பொருளாளர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் செவ்வாய்க்கிழமை (மார்ச் 25) அறிவாலயத்தில் ஆலோசனை நடத்தினர். சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேல் இந்த ஆலோசனை நடைபெற்றது. இதில் அழகிரியை நிரந்தரமாக நீக்குவது என முடிவு எடுக்கப்பட்டது” என்றார்.

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் கருணாநிதி கூறியது:- திமுகவிலிருந்து அழகிரி தாற்காலிகமாக நீக்கி வைக்கப்பட்டார். அவர் அதற்கு உரிய விளக்கங்களை அளிக்கவில்லை. ஆனால் தொடர்ந்து திமுகவை விமர்சித்து வருவதுடன், திமுக தலைவர்களைப் பற்றியும் அவதூறு கூறி வருகிறார். இதனையடுத்து க.அன்பழகனும் நானும் கலந்து பேசி அழகிரியை கட்சியிலிருந்து நிரந்தரமாக நீக்கியுள்ளோம் என்று கருணாநிதி கூறினார்.

'தங்க மீன்கள்படத்துக்கு 3 தேசிய விருதுகள்!
 
'தங்க மீன்கள்' படம் 3 தேசிய விருதுகளை வென்றுள்ளது. மறைந்த இயக்குனர் பாலு மகேந்திராவின் 'தலைமுறைகள்', தேசிய ஒருமைப்பாட்டை வலியுறுத்தும் பிரிவில் சிறந்த படமாக தேர்ந்தெடுக்கப்பட்டது.

திரைப்படத் துறைக்கான 61-வது தேசிய விருதுகள் 16.04.14 அன்று மத்திய அரசு அறிவித்தது. அதில், மாநில மொழி பிரிவில், சிறந்த தமிழ்த் திரைப்படமாக, ராம் இயக்கிய 'தங்க மீன்கள்' தேர்வு செய்யப்பட்டது. அந்தத் திரைப்படத்தில் நடித்த சாதானாவுக்கு சிறந்த குழந்தை நட்சத்திரம் விருது கிடைத்தது.

மேலும், தங்க மீன்கள் படத்தில் இடம்பெற்ற 'ஆனந்த யாழை' பாடலுக்காக, சிறந்த பாடலாசிரியருக்கான விருதை நா.முத்துக்குமார் பெற்றார்.

தேசிய ஒருமைப்பாட்டை வலியுறுத்தும் பிரிவில், சிறந்த படமாக பாலு மகேந்திராவின் 'தலைமுறைகள்' தேர்வு செய்யப்பட்டு, நர்கீஸ் தத் விருது வழங்கப்பட்டது.

தமிழின் 'வல்லினம்' படத்துக்கு சிறந்த எடிட்டிங் பிரிவில் சாபு ஜோசப்-புக்கு தேசிய விருது கிடைத்தது.

சினிமா அல்லாத பிரிவில், தமிழில் வெளியான 'தர்மம்' என்ற குறும்படம் சிறப்பு விருதை வென்றது. இதை இயக்கியவர் மடோன் எம்.அஸ்வின். ஒரு குழந்தையின் பார்வையில் சமூகத்தின் ஏழ்மை நிலையையும், கையூட்டுப் பிரச்சினையும் ஒருங்கே பதிவு செய்த படைப்பு இது.

பல்வேறு பிரிவுகளில் அதிக எண்ணிக்கையில் இம்முறை தேசிய விருதுகளை வென்றிருப்பது பெங்காலி மற்றும் மராத்தி மொழி படங்களே என்பது கவனிக்கத்தக்கது.

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் குண்டு வெடிப்பு

01.05.14 அன்று காலை சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் குண்டு வெடித்தது. இதில் ஒருவர் பலியானார். பலர் படுகாயமடைந்தனர்.

பெங்களூருவிலிருந்து சென்னை வழியாக கவுகாத்தி வரை செல்லும் பயணிகள் ரயில் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் 9 ஆவது பிளாட்பாரத்திற்கு வந்த போது ரயிலின் எஸ்.4 மற்றும் எஸ்.5 பெட்டிகளில் 2 குண்டுகள் வெடித்தன.

முதல் கட்ட தகவலின்படி, இந்த குண்டு வெடிப்பில் சுவாதி என்ற 22 வயது இளம்பெண் பலியானார். மேலும் 12 பேர் காயமடைந்தனர்.

தமிழகத்தில் அதிமுக 37 இடங்களில் வெற்றி

2014 மக்களவைத் தேர்தல் முடிவுகள் 16.05.14 அன்று நடைபெற்றது.

தமிழகத்தில் நடந்த 5 முனைப்போட்டியில் அதிமுக 37 இடங்களில் வெற்றி பெற்றது. கன்னியாகுமரியில் பாஜகவும், தர்மபுரியில் பாமகவும் வெற்றி பெற்றன. புதுவையில் என்.ஆர்.காங்கிரஸ் வெற்றி பெற்றது. தமிழகத்தில் இந்த தேர்தலில் ஐந்து முனை போட்டி ஏற்பட்டது. திமுக, பாஜக, கம்யூனிஸ்ட் கட்சிகள் தனித்தனி கூட்டணி அமைத்து போட்டியிட்டன. அதிமுக, காங்கிரஸ் ஆகிய இரண்டும் தனித்து போட்டியிட்டன. அதிமுக கூட்டணியில் இருந்த இரு கம்யூனிஸ்ட் கட்சிகள் மற்றும் சிறு கட்சிகளை அதிமுக கடைசி நேரத்தில் வெளியேற்றி, தனித்துப் போட்டியிடப் போவதாக அறிவித்தன. தமிழகம், புதுவையில் 40 தொகுதிகளிலும் அதிமுக போட்டியிட்டது. திமுக கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகள், புதிய தமிழகம், மனிதநேய மக்கள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகள் இடம்பெற்றன. அதில் திமுக 35 தொகுதிகளில் போட்டியிட்டது. விடுதலை சிறுத்தைகள் 2, புதிய தமிழகம், மமக, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகள் தலா ஒரு தொகுதியில் போட்டியிட்டன.

பாஜக கூட்டணியில் தேமுதிக 14 தொகுதிகளிலும், பாமக, பாஜக தலா 8 தொகுதிகள், மதிமுக 7 தொகுதி, கொங்கு, ஐஜேகே ஆகிய கட்சிகள் தலா ஒரு தொகுதிகளில் போட்டியிட்டன. புதுவையில் மட்டும் பாஜக கூட்டணியில் இடம்பெற்ற என்.ஆர்.காங்கிரசும், பாமகவும் போட்டியிட்டன. அதில் என்.ஆர்.காங்கிரசுக்கு பாஜவும், பாமகவுக்கு தேமுதிக, மதிமுக ஆகிய கட்சிகளும் ஆதரவு தெரிவித்தன. காங்கிரஸ் 40 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிட்டன. கம்யூனிஸ்ட் கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் தலா 9 தொகுதிகளில் போட்டியிட்டனர். இந்தக் கூட்டணியில் மாநில தலைவர்கள் யாரும் போட்டியிடவில்லை. தற்போதைய எம்பிக்கள் மற்றும் முன்னாள் எம்பி, எம்எல்ஏக்கள் போட்டியிட்டனர்.

இந்த 5 முனை போட்டியில், அதிமுக 37 இடங்களில் வெற்றி பெற்றது. கன்னியாகுமரியில் பாஜக மாநில தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன், தர்மபுரியில் பாமக இளைஞர் அணி தலைவர் அன்புமணி, புதுவையில் என்.ஆர்.காங்கிரஸ் ராதாகிருஷ்ணன் ஆகியோர் வெற்றி பெற்றனர். தமிழகத்தில் தனித்துப் போட்டியிட்டு 37 இடங்களில் வெற்றி பெற்ற அதிமுக, தேசிய அளவில் 3வது பெரிய கட்சியாகவும், எதிர்கட்சிகளில் 2வது பெரிய கட்சியாகவும் உருவெடுத்தது.

கும்பகோணம் பள்ளித் தீ விபத்து வழக்கில் தீர்ப்பு

கும்பகோணம் தீ விபத்து வழக்கில், பள்ளி உரிமையாளர் பழனிச்சாமிக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், பள்ளியின் தாளாளர் சரஸ்வதி உள்ளிட்ட 9 பேருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

94 குழந்தைகளை காவு வாங்கிய கும்பகோணம் ஸ்ரீ கிருஷ்ணா பள்ளி தீ விபத்து தொடர்பான வழக்கில் தஞ்சை மாவட்ட அமர்வு நீதிமன்றம் 30.07.14 அன்று வழங்கிய தீர்ப்பில் பள்ளி உரிமையாளர் பழனிச்சாமிக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், பள்ளியின் தாளாளர் சரஸ்வதி உள்ளிட்ட 9 பேருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதித்துள்ளது.

குற்றம்சாற்றப்பட்ட 24 பேரில் 3 பேரை ஏற்கனவே வழக்கில் தொடர்பில்லாதவர்கள் என நீதிமன்றம் வழக்கிலிருந்து விடுவித்தது. மீதம் உள்ள 21 பேர் மீதான வழக்கு விசாரணை முடிவடைந்து இன்று தீர்ப்பு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்ட்டிருந்தது.

நாடே எதிர்பார்த்துக் காத்திருந்த இந்த வழக்கில், மொத்தம் உள்ள 21 பேரில் 11 பேரை நீதிபதி முகமது அலி இன்று காலை விடுதலை செய்தார். இது பாதிக்கப்பட்ட பெற்றோருக்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது.

காமன்வெல்த் போட்டியில் பதக்கம் வென்ற தமிழக வீரர்களுக்கு முதல்வர் பரிசு
 
ஸ்காட்லாந்து நாட்டின், கிளாஸ்கோ நகரில் நடைபெற்ற 20-வது காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் தமிழகத்தைச் சேர்ந்த எஸ்.சதீஷ்குமார், ஜோஷ்னா சின்னப்பா, தீபிகா பல்லிகல் ஆகியோர் தங்கப் பதக்கம் வென்றனர். அச்சந்தா ஷரத் கமல், அந்தோணி அமல்ராஜ், ரூபிந்தர் பால் சிங், ஸ்ரீஜேஷ் பரட்டு ரவீந்திரன் ஆகியோர் வெள்ளிப் பதக்கம் வென்றனர்.

காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் தங்கம் மற்றும் வெள்ளிப் பதக்கங்களை வென்ற தமிழகத்தைச் சேர்ந்த வீரர்கள், வீராங்கனைகளுக்கு முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பரிசு வழங்கினார்.

ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டு சிறைத் தண்டனை; ரூ.100 கோடி அபராதம்: பெங்களூர் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு
 
கடந்த 18 ஆண்டுகளாக நடந்து வந்த சொத்துக் குவிப்பு வழக்கில் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.100 கோடி அபராதமும் விதித்து பெங்களூர் சிறப்பு நீதிமன்றம் 27.09.14 அன்று தீர்ப்பளித்தது.

இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட சசிகலா, வி.என்.சுதாகரன் மற்றும் இளவரசி ஆகியோருக்கு 4 ஆண்டுகள் சிறைத் தண்டனையுடன் தலா ரூ.10 கோடி அபராதம் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.

மேலும், சொத்துக் குவிப்பு வழக்கில் இணைக்கப்பட்டுள்ள அனைத்து அசையும் மற்றும் அசையா சொத்துக்களையும், 32 தனியார் நிறுவனங்களையும் உடனடியாக முடக்கவும் நீதிபதி உத்தரவு பிறப்பித்தார்.

கடந்த 1991-96 காலக்கட்டத்தில் தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா, தனது வருமானத்துக்கு அதிகமாக ரூ.66 கோடியே 65 லட்சத்து 20 ஆயிரத்து 395 அளவுக்கு சொத்து குவித்ததாக வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் சசிகலா, இளவரசி, வி.என்.சுதாகரன் ஆகியோரும் சேர்க்கப்பட்டிருந்தனர். சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் நடந்துவந்த இந்த வழக்கு, உச்ச நீதிமன்ற உத்தரவின்படி 2003 ஆம் ஆண்டு நவம்பர் 18-ல் பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது.

கடந்த 18 ஆண்டுகளாக நடந்துவந்த இந்த வழக்கில் 27.09.14 அன்று தீர்ப்பு கூறப்பட்டது.

தமிழக முதல்வராக ஓ.பன்னீர்செல்வம் பதவியேற்பு
 
தமிழகத்தின் புதிய முதல்வராக ஓ.பன்னீர்செல்வம் 29.09.14 அன்று பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு, தமிழக ஆளுநர் ரோசய்யா பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

ஆளுநர் மாளிகையில், எளிமையான முறையில் பதவியேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. ஓ.பன்னீர்செல்வத்துடன் 30 அமைச்சர்களும் பதவியேற்றனர். பதவியேற்பு விழாவிற்கு அரசியல் கட்சித் தலைவர்களுக்கோ, முக்கியப் பிரமுகர்களுக்கோ அழைப்பு விடுக்கப்படவில்லை. அமைச்சரவை இலாகாக்களில் மாற்றம் ஏதும் இல்லை என அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஆளுநர் மாளிகையில் நடந்த எளிமையான நிகழ்ச்சியில் தமிழக முதல்வராக ஓ.பன்னீர்செல்வம் பதவியேற்றுக் கொண்டார். முதல்வராக பதவியேற்ற ஓ.பன்னீர்செல்வம், பதவியேற்பு நிகழ்ச்சியில் உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கினார். தொடர்ந்து அவர் அழுத வண்ணமே இருக்கையில் அமர்ந்திருந்தார்.

பதவிப் பிரமாணம் செய்து வைக்கப்படடு உறுதிமொழியை ஏற்ற பின்னர் பதவியேற்புப் பத்திரத்தில் கையெழுத்திடும்போது பன்னீர்செல்வம் கண்ணீர் சிந்தினார். மீண்டும் அமைச்சர்களாக பதவியேற்றுக் கொண்ட அமைச்சர்கள் பலரும் கண்ணீர் சிந்தினர்.

சென்னையில் நோக்கியா நிறுவனம் மூடப்பட்டது
 
01.11.14 அன்று சென்னை அருகேயுள்ள ஸ்ரீபெரும்புதூரில் செயல்பட்டு வந்த நோக்கியா ஆலை மூடப்பட்டது. நோக்கியா ஆலை மூடப்பட்டதை தொடர்ந்து பணிக்கு வந்த தொழிலாளர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர்.

முன்னதாக நோக்கியா நிறுவனத்தை மைக்ரோசாஃப்ட் நிறுவனம் 720 கோடி டாலர் கொடுத்து வாங்கியிருந்தது. அதன்பின் வரி பிரச்சினை காரணமாக ஸ்ரீபெரும்புதூரில் செயல்பட்டு வந்த நோக்கியா ஆலை மைக்ரோசாப்ட் ஒப்பந்தத்தில் சேர்க்கப்படவில்லை. இந்நிலையில், நவம்பர் 1 ஆம் தேதி முதல் சென்னை ஸ்ரீபெரும்புதூர் நோக்கியா நிறுவனத்துடனான ஒப்பந்தத்தை முறித்துக் கொள்வதாக மைக்ரோசாஃப்ட் அறிவித்திருந்தது.

கடந்த மார்ச் மாதம் தமிழ்நாடு அரசு 2 ஆயிரத்து 400 கோடி ரூபாய் வரி பாக்கி தொடர்பாக நோக்கியா நிறுவனத்துக்கு நோட்டீஸ் அனுப்பியிருந்தது. மேலும், மற்றொரு வழக்கில் உச்சநீதிமன்றம் 3 ஆயிரத்து 500 கோடி ரூபாயை கொடுக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டிருந்தது.

பின்லாந்து நாட்டை சேர்ந்த இந்த தொழிற்சாலை 50 கோடி டாலர் முதலீட்டில் 2006ஆம் ஆண்டு அமைக்கப்பட்டது. இந்த  தொழிற்சாலையில் 8 ஆயிரம் பேர் நேரடியாகவும், 12 ஆயிரம் பேர்  மறைமுகமாகவும் பணிபுரிந்து வந்தனர்.

தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் 5 பேர் விடுதலை

போதைப்பொருள் கடத்தியதாக தொடரப்பட்ட வழக்கில், தமிழக மீனவர்கள் எமர்சன், பிரசாத், லாங்லெட், அகஸ்டஸ், வில்சன் ஆகியோருக்கு அக்டோபர் 30ஆம் தேதி கொழும்பு உயர்நீதிமன்றம் தூக்கு தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.

இதற்கு தமிழகம் முழுவதும் கடும் எதிர்ப்பு எழுந்தது. மேலும் மீனவர்களை உடனடியாக விடுவிக்க வலியுறுத்தி தொடர்போராட்டங்கள் நடைபெற்றன.

இதனையடுத்து இந்த விவகாரத்தில் உறுதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய அரசு உத்தரவாதம் அளித்தது. அதன்படி இந்திய அரசு சார்பில், அந்நாட்டு  நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. அதேநேரம் இலங்கை அரசிடம் மீனவர்களை விடுவிக்கவேண்டும் என்று  மத்திய அரசு தொடர்ந்து வலியுறுத்தியது. கடந்த வாரம் அந்நாட்டு அதிபர் ராஜபட்சவிடம் , பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசியில் மீனவர்கள் விடுதலை குறித்துப் பேசினார்.

இதனைத்தொடர்ந்து இலங்கை அரசு மீனவர்களின் தூக்கு தண்டனையை ரத்து செய்வது குறித்தும், மீனவர்களை விடுவிப்பது குறித்து பரிசீலித்தது. அதற்கு ஏதுவாக இந்தியா சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல் முறையீட்டு மனு வாபஸ் பெறப்பட்டது.

இந்நிலையில் 5 மீனவர்கள் 19.11.14 அன்று விடுதலை செய்யப்பட்டனர்.

142 அடியை எட்டியது முல்லைப் பெரியாறு


முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் 21.11.14 அன்று 142 அடியை எட்டியது. இதன்மூலம், அணையில் இந்த உயரத்துக்கு நீரைத் தேக்க உச்ச நீதிமன்றம் அளித்திருந்த அனுமதியின்படி தமிழகத்தின் உரிமை நிலைநாட்டப்பட்டுள்ளது.

குஷ்பு காங்கிரசில் சேர்ந்தார்
 
திமுகவில் இருந்து சமீபத்தில் விலகிய நடிகை குஷ்பு காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார். 26.11.14 அன்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை டெல்லியில் சந்தித்த அவர் கட்சியில் இணைந்தார்.

திமுகவில் சமீப காலம் வரை நட்சத்திரப் பேச்சாளராக இருந்த நடிகை குஷ்பு , திமுகவில் ஏற்பட்ட பிரச்சனைகள் காரணமாக சமீபத்தில் கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.

டெல்லியில் காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி முன்னிலையில் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார். அப்போது தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனும் உடனிருந்தார்.

டெல்லியில் சோனியா காந்தியை சந்தித்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், காங்கிரஸ் கட்சியில் இணைவது தனக்கு தன் வீடு திரும்புவது போன்ற ஒரு அமைதி மற்றும் நிம்மதி கிடைத்திருப்பதாகத் தெரிவித்தார். அவர் பாரதீய ஜனதா கட்சியில் சேரவிருக்கிறார் என்று வந்த தகவல்களை மறுத்த அவர், அது செய்தி ஊடகங்கள் வெளியிட்ட தவறான செய்தி என்று தெரிவித்தார்.
 
திருச்சி பொதுக் கூட்டத்தில் புதிய கட்சியின் பெயரை அறிவித்தார் ஜி.கே.வாசன்
 
மாநில உரிமைகளுக்கு காங்கிரஸ் தலைமை மதிப்பளிப்பதில்லை என்று கட்சியிலிருந்து விலகிய ஜி.கே.வாசன், திருச்சியில் 28.11.14 அன்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் புதிய கட்சியின் பெயர் தமிழ் மாநில காங்கிரஸ் (மூப்பனார்) என்று அறிவித்தார்.

பல ஆண்டுகளுக்கு முன்பு, மறைந்த மூப்பனாரால் உருவாக்கப்பட்டது தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி. இது மூப்பனாரின் மறைவுக்குப் பிறகு காங்கிரஸ் கட்சியோடு இணைந்ததால் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி என்ற பெயர் மறைந்து போனது.

தற்போது, அதே பெயரை மூப்பனாரின் மகன் ஜி.கே.வாசன் தனது புதிய கட்சிக்கு சூட்டியுள்ளார்.

மத்திய முன்னாள் அமைச்சர் ஜி.கே.வாசன், தான் தொடங்கியுள்ள புதிய கட்சியின் பெயர் மற்றும் கொள்கைகளை திருச்சியில் வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்ற தொடக்க விழா பொதுக்கூட்டத்தில் அறிவித்தார். கூட்டத்துக்கு 20 ஆயிரத்துக்கும் மேலான மக்கள் வந்திருந்தனர்.

மேடையின் வலதுபுறத்தில் வளமான தமிழகம் என்ற வாசகத்துடன் புனித ஜார்ஜ் கோட்டை படமும், இடதுபுறத்தில் வலிமையான இந்தியா என்ற வாசகத்துடன் செங்கோட்டை படமும் வைக்கப்பட்டது.

இயக்குநர் இமயம்’ கே.பாலச்சந்தர் மரணம்

உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த முதுபெரும் திரைப்பட இயக்குநர் ’இயக்குநர் இமயம்’ கே.பாலச்சந்தர் சென்னையில் 23.12.14 அன்று மரணமடைந்தார்.

கே.பாலச்சந்தர் என்று எல்லோராலும் அழைக்கப்படும் கைலாசம் பாலச்சந்தர் முதன்முதலாக 1965ஆம் ஆண்டு, மறைந்த நகைச்சுவை நடிகர் நாகேஷ் அவர்களை வைத்து இயக்கிய ‘நீர்க் குமிழி’ முதல் 2006ஆம் ஆண்டு உதய்கிரண், விமலா நடிப்பில் வெளியான ‘பொய்’ வரையில் பல்வேறு திரைப்படங்களை இயக்கியியுள்ளார்.

நீர்க் குமிழி, எதிர் நீச்சல், சிந்து பைரவி, அபூர்வ ராகங்கள், புதுப்புது அர்த்தங்கள், வறுமையின் நிறம் சிவப்பு, வெள்ளி விழா, அரங்கேற்றம், அவள் ஒரு தொடர்கதை, அவர்கள், நிழல் நிஜமாகிறது என்று எத்தனையோ புதுமையான கதாப்பாத்திரங்களை திரையில் நிஜமாக்கியவர் கே.பி.

தண்ணீர் தண்ணீர், அச்சமில்லை அச்சமில்லை, உன்னால் முடியும் தம்பி, ஒரு வீடு இரு வாசல், கல்கி என்று எத்தனையோ சமுக அக்கறையுள்ள கதைகளை திரைத்துறையில் புகுத்தியவர் கே.பி.

ஸ்ரீ பிரியா, விஜயகுமார், படாபட் விஜயலெட்சுமி, சரத்பாபு, ஸ்ரீ தேவி, ஜெயப்பிரதா, ஸ்ரீ வித்யா முதல் ராதாரவி, சுஜாதா, விவேக், பிரகாஷ்ராஜ், பிரியாமணி வரை ஏராளமான நடிகர், நடிகைகளை சினிமா துறைக்கு அறிமுகப்படுத்தியவர் கே.பி.

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகேயுள்ள நல்லமாங்குடியில் பிறந்து, மாநில அரசு விருது, தேசிய விருது, கலைமாமணி, ஃபிலிம்பேர் விருது முதல் பத்ம ஸ்ரீ, தாதா சாகேப் பால்கே விருது வரை எண்ணற்ற விருதுகளை பெற்றவர் இயக்குநர் கே.பாலச்சந்தர்.

இத்தகைய பாலச்சந்தர் உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில்  தனது திரைக்கதையை எழுதி முடித்துச் சென்றுவிட்டார்.