வெள்ளி, 29 மார்ச் 2024
  1. விளையாட்டு
  2. »
  3. கிரிக்கெட்
  4. »
  5. செய்திகள்
Written By Webdunia

ஐபிஎல் சூதாட்ட விசாரணை அறிக்கை உச்சநீதிமன்றத்தில் தாக்கல்

ஐபிஎல் ஸ்பாட் பிக்சிங் சூதாட்ட 170 பக்க விசாரணை அறிக்கையை முகுல் முத்கல் கமிட்டி உச்சநீதிமன்றத்தில் இன்று தாக்கல் செய்தது.
FILE


கடந்த ஆண்டு நடந்த 6-வது ஐபிஎல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் நடைபெற்ற ஸ்பாட்பிக்சிங் சூதாட்டம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை சேர்ந்த ஸ்ரீசாந்த், அங்கீத் சவான், சண்டிலா ஆகிய 3 வீரர்கள் சிக்கினார்கள். இவர்கள் மீது கிரிக்கெட் வாரிய நடவடிக்கை எடுத்தது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கவுரவ உறுப்பினர் குருநாத் மெய்யப்பன், ராஜஸ்தான் அணியின் உரிமையாளர்களில் ஒரு வரான ராஜ்குந்த்ரா ஆகியோருக்கும் ஸ்பாட் பிக்சிங் சூதாட்டத்தில் தொடர்பு இருப்பதாக கூறப்பட்டது. கிரிக்கெட் வாரியம் சார்பில் விசாரணை நடத்திய முன்னாள் நீதிபதிகள் ஜெயராம் சவுதா, பாலசுப்பிரமணியன் ஆகியோர் இருவருக்கும் ஸ்பாட் பிக்சிங் சூதாட்டத்தில் தொடர்பு இல்லை என்று தனது அறிக்கையில் தெரிவித்தனர்.

இதைத்தொடர்ந்து பீகார் கிரிக்கெட் சங்கம் சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. ஐபிஎல் ஸ்பாட் பிக்சிங் சூதாட்டம் குறித்து விசாரணை நடத்த பஞ்சாப் மற்றும் அரியானா உயர்நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி முகுலை உச்சநீதிமன்றம் நியமித்தது.
FILE


கடந்த 4 மாதங்களாக நீதிபதி முகுல் கமிட்டி பல்வேறு இடங்களுக்கு சென்று விசாரணை நடத்தியது. வீரர்கள், பத்திரிகையாளர்கள், ஐபிஎல் அணி உரிமையாளர்கள், போலீசார் ஆகியோரிடம் விவரங்களை கேட்டு இருத்தனர்.

ஐபிஎல் ஸ்பாட் பிக்சிங் சூதாட்ட அறிக்கை உச்சநீதிமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்பட்டது. முகுல் முத்கல் கமிட்டியின் இந்த விசாரணை அறிக்கை 170 பக்கங்களில் இருந்தது. ஐபிஎல் ஏலம் நாளை மறுதினம் நடைபெற உள்ள நிலையில் சூதாட்ட விசாரணை அறிக்கை தாக்கல் செய்து இருப்பது முக்கியத்துவம் பெற்றது.