1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Updated : செவ்வாய், 17 பிப்ரவரி 2015 (16:53 IST)

”யுவராஜ் சிங் இந்த ஆண்டு மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவார்” - கவாஸ்கர்

யுவராஜ் சிங் இந்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டியில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவார் என்று முன்னாள் இந்திய அணித் தலைவர் சுனில் கவாஸ்கர் கூறியுள்ளார்.
 
நேற்று [16-02-15] நடைபெற்ற 8ஆவது ஐபிஎல் போட்டிகளின் வீரர்கள் ஏலத்தில், இந்திய அணியின் அதிரடி ஆட்டக்காரரும், ஆல் ரவுண்டருமான யுவராஜ் சிங்கை டெல்லி டேர் டெவில்ஸ் அணி ரூ.16 கோடிக்கு வாங்கியுள்ளது.

 
உலகக்கோப்பை போட்டிக்கான இந்திய அணியில் தேர்வு செய்யப்படாத போதிலும், கடந்த முறை பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்காக 14 கோடிக்கு வாங்கப்பட்டவர், இந்த ஆண்டு ஏலத்தின்போது டெல்லி டேர்டெவில்ஸ் அணி யுவராஜ் சிங்கை ரூ.16 கோடிக்கு ஏலத்திற்கு எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
 
இந்நிலையில், இது குறித்து கருத்து தெரிவித்துள்ள முன்னாள் இந்திய அணித்தலைவர் சுனில் கவாஸ்கர், “யுவராஜ் சிங்கிற்காக டெல்லி அணி செலவிட்டுள்ள ஒவ்வொரு ரூபாய்க்கும் அவர் தகுதியானவர். யுவராஜ் சிங் நிறைய அனுபவத்தை கடந்துவிட்டார்.
 
அவர் மிகச் சிறப்பான வீரர். அவர் இந்த பண மதிப்பிற்கு உரித்தானவர் என்று நான் கருதுகிறேன். யுவராஜ் சிங் இந்த ஆண்டு மிகப்பெரும் தாக்கத்தை ஏற்படுத்த வேண்டியதே டெல்லி அணிக்கு தேவை” என்று கூறியுள்ளார்.
 
மேலும் அவர் கூறுகையில், “ஒரு கதவு மூடப்பட்டால், மற்றொரு பெரிய கதவு திறக்கப்படும் என்பதுபோல் யுவராஜ் சிங்கிற்கு இந்த வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. அவர் உள்ளூர் போட்டிகளில் திறமையை காண்பித்துள்ளார். தேசிய அணிக்கும் திரும்புவதற்கான வாய்ப்பை ஏற்படுத்த முடியும்” என்றார்.