1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: செவ்வாய், 22 நவம்பர் 2016 (18:33 IST)

’மாட்டிக்கொண்டாயா’ - ஆண்டர்சனையும் விட்டு வைக்காத சேவாக்

இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான போட்டியில் ஜேம்ஸ் ஆண்டர்சன் இரண்டு இன்னிங்ஸிலும் டக் அவுட் ஆனதை இந்திய வீரர் வீரேந்திர சேவாக் கிண்டல் அடித்துள்ளார்.


 

விசாகப்பட்டினம் ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டி மைதானத்தில் நடைபெற்ற இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 2ஆவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி, இங்கிலாந்து அணியை 246 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடையச் செய்தது.

இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால், இரண்டு இன்னிங்ஸிலும் இங்கிலாந்து வீரர் ஜேம்ஸ் ஆண்டர்சன் கோல்டன் டக் (சந்திக்கும் முதல் பந்திலேயே வெளியேறுவது) முறையில் அவுட் ஆனார்.

இவ்வாறு இரண்டு இன்னிங்ஸிலும் கோல்டன் டக் முறையில் வெளியேறுவதற்கு கிங் பைர் [King Pair] என்று பெயர். நடந்து முடிந்த இரண்டாவது போட்டியில் இரண்டு இன்னிங்ஸிலும் வெளியேறியதை சேவாக் கிண்டல் செய்துள்ளார்.

இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், ”2011ஆம் ஆண்டு என்னை ‘கிங் பைர்’ ஆக்கிய ஜேம்ஸ் ஆண்டர்சன், இப்போதும் தானும் கிங் பைர் ஆகியுள்ளார்” என்று கிண்டல் செய்துள்ளார்.

அதாவது, 2011ஆம் ஆண்டு இங்கிலாந்திற்கு இந்திய அணி சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தபோது, வீரேந்திர சேவாக், ஜேம்ஸ் ஆண்டர்சன் பந்திலேயே இரண்டு இன்னிங்ஸிலும் கோல்டன் டக் அவுட் ஆகி கிங் பைர் ஆனார். இதை குறிப்பிட்டே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.