செவ்வாய், 16 ஏப்ரல் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Updated : திங்கள், 24 ஆகஸ்ட் 2015 (10:17 IST)

விடைபெற்றார் சங்ககரா; தோல்வியிலிருந்து தப்புமா இலங்கை?

சங்ககரா தனது இறுதி இன்னிங்ஸில் விளையாடி முடித்தார். இந்தியாவை வெல்ல இலங்கை அணிக்கு இன்னும் 341 ரன்கள் தேவைப்படுகிறது.
 
இந்தியா - இலங்கை அணிகளுக்கிடையேயான 2ஆவது டெஸ்ட் போட்டி கொழும்புவில் உள்ள சாரா ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் 393 ரன்கள் குவித்தது.
 

 
இந்திய அணியில் அதிகபட்சமாக லோகேஷ் ராகுல் 108 ரன்களும், ரோஹித் சர்மா 79 ரன்களும், விராட் கோலி 78 ரன்களும் குவித்தனர். இலங்கை தரப்பில் ரங்கனா ஹெராத் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
 
பின்னர் தனது முதல் இன்னிங்ஸை தொடங்கிய இலங்கை அணி 306 ரன்களுக்குள் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இலங்கை அணியில் அதிகபட்சமாக ஆஞ்சலோ மேத்யூஸ் 102 ரன்களும், திரிமன்னே 62 ரன்களும், கௌசல் சில்வா 51 ரன்களும் எடுத்தனர். இந்தியா தரப்பில் அமித் மிஸ்ரா 4 விக்கெட்டுகளையும், அஸ்வின், இஷாந்த் சர்மா தலா ஒரு விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
 
வெற்றி இலக்கு 412:
 
முதல் இன்னிங்ஸில் 87 ரன்கள் முன்னிலை பெற்ற நிலையில் 2ஆவது இன்னிங்ஸை இந்திய அணி தொடங்கியது. 2ஆவது இன்னிங்ஸில் இந்திய அணி 8 விக்கெட் இழப்பிற்கு 325 ரன்கள் குவித்ததோடு இன்று தனது இன்னிங்ஸை முடித்துக் கொள்வதாக அறிவித்தது. இதனால், இலங்கை அணிக்கு வெற்றி பெறுவதற்கு 412 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
 
இந்திய அணியில் அதிகபட்சமாக ரஹானே 126 ரன்களும், முரளி விஜய் 82 ரன்களும் குவித்தனர். இலங்கை அணி தரப்பில் தம்மிகா பிரசாத், தரிண்டு கௌசல் ஆகியோர் தலா 4 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
 
விடைபெற்றார் சங்ககரா:
 

சங்ககராவிற்கு ஆதரவளிக்கும் ரசிகர்கள்
பின்னர் தனது இரண்டாவது இன்னிங்ஸை இலங்கை அணியில், தொடக்க ஆட்டக்காரரான கௌசல் சில்வா 1 ரன்னில் வெளியேறினார். பின்னர் பலத்த கரகோஷத்திற்கு இடையில் களமிறங்கினார் சங்ககரா. இது அவரது கடைசி இன்னிங்ஸ் என்பதால், இந்த சதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
 
ஆனால், எதிர்பாராத விதமாக 18 ரன்களில் அஸ்வினின் சுழலில், முரளி விஜயிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். அப்போது, இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி உள்ளிட்ட அனைத்து வீரர்களும் சங்ககராவிற்கு வாழ்த்துக்கள் தெரிவித்தனர். மைதானத்தில் இருந்த ரசிகர்களும் அவருக்கு எழுந்து நின்று மரியாதை செலுத்தினர்.
 
நான்காம் நாள் ஆட்டநேர முடிவில் இலங்கை அணி 2 விக்கெட் இழப்பிற்கு 72 ரன்கள் எடுத்துள்ளது. அந்த அணி வெற்றபெற இன்னும் 341 ரன்கள் தேவைப்படுகிறது. இதனால், சங்ககரா தனது இறுதிப் போட்டியில் வெற்றியுடன் வழியனுப்பப்படுவாரா என்பது கேள்விக்குறியாக உள்ளது.