சேவாக்குக்கு மீண்டும் அணிக்கு திரும்பும் திறன் உள்ளது - பயிற்சியாளர் சஞ்சய் பாங்கர்
டெஸ்ட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட்டில் பல சாதனைகளை நிகழ்த்திய உலக அதிரடி பேட்ஸ்மேன்களில் ஒருவர் வீரேந்திர சேவாக். ஆனால் மோசமான பார்ம் காரணமாக இந்திய அணியில் இருந்து வெளியேற்றப்பட்டார். சேவாக்கிற்கு தற்போது 36 வயதாகிறது.
இந்திய பேட்ஸ்மேன்களிலேயே, டெஸ்ட் போட்டிகளில் ஒரு இன்னிங்சில் 2 முறை 300 ரன்களை கடந்த வீரர் சேவாக் மட்டுமே. மற்றொரு முறை 293 ரன்களில் அவுட் ஆனார். ஒருநாள் போட்டிகளில் இரட்டை சதமும் விளாசியுள்ளார். இதனால் அவருக்கு ரசிகர்களும் அதிகம்.
கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் தலைமை பயிற்சியாளராக இருப்பவர் சஞ்சய் பாங்கர். இவர் இந்திய அணியின் உதவி பயிற்சியாளராகவும் உள்ளார். இவர் இந்திய அணிக்கு உதவி செய்யும் ஊழியர்களில் முக்கியமானவராக உள்ளார். இந்திய அணியின் ஓப்பனராக இருந்த வீரேந்திர சேவாக்குக்கு மீண்டும் தேசிய அணிக்கு மீண்டு திரும்பும் திறன் உள்ளது என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
சேவாக் தேசிய போட்டிகளுக்கு திரும்புவது குறித்து பாங்கரிடம் கேட்டபோது அவர், ஆமாம் நிச்சயமாக அவரால் அது முடியும் என்று கூறினார். சேவாக் கடைசியாக இந்தியாவுக்காக தொடக்க ஆட்டகாரராக மார்ச் 2013 ஆடினார். மேலும் பாங்கர் கூறும் போது சேவாக் மிகவும் உற்சாகபடுத்தக் கூடியவர். அவர் தனது உடல் திறனை மேம்படுத்த அதிக பயிற்சிகள் செய்து வருகிறார் என்று பாங்கர் கூறினார்.