வியாழன், 28 மார்ச் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: புதன், 25 நவம்பர் 2015 (18:54 IST)

சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜுன் அசத்தல் சதம்

16 வயதிற்குட்பட்டோருக்கான பய்யாடே டிராபி கிரிக்கெட் போட்டியில் சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜூன் 106 ரன்கள் குவித்தார்.
 

 
16 வயதிற்குட்பட்டோருக்கான பய்யாடே டிராபி கிரிக்கெட் போட்டி மும்பையில் நடைபெற்றது. இதில், சுனில் கவாஸ்கர் லெவன் அணியும், ரோஹித் சர்மா லெவன் அணியும் மோதின.
 
இதில், சுனில் கவாஸ்கர் லெவன் அணிக்காக களமிறங்கிய டெண்டுல்கரின் மகன் அர்ஜூன் 156 பந்துகளில் [16 பவுண்டரிகள், 2 சிக்ஸர்கள்] 106 ரன்கள் குவித்தார். இதனால் அந்த அணி 218 ரன்கள் குவித்தது.
 
இது குறித்து கூறியுள்ள அந்த அணியின் பயிற்சியாளர் விகாஸ் சதாம், ”நாங்கள் ஆட்டத்தை சிறந்த முறையில் தொடங்கவில்லை. மேலும், மூர்க்கத்தனமாக அடித்து ஆடும் ஒருவரை தேடிக்கொண்டிருந்தோம். அர்ஜூன் இன்று அவருடைய இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
 
அவர் சிறந்த முறையில் அடித்து ஆடினார். ஒருமுறை கூட அவர் அழுத்தத்துடன் விளையாடவில்லை. நாங்கள் ஒருகட்டத்தில் விக்கெட்டுகளை இழந்துவிட்டோம். ஆனால், அர்ஜூன் பொறுப்பை எடுத்துக்கொண்டு சிறப்பாக விளையாடி அணியை மீட்டெடுத்துவிட்டார்” என்றார்.
 
முன்னதாக, கடந்த மே மாதம், அர்ஜூன் மும்பை வான்கடே மைதானத்தில் பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் வாசிம் அக்ரமின் பந்துவீச்சில் வலைப்பயிற்சி மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது. வாசிம் அக்ரம் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக பணி புரிந்து வருகிறார்.