வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: ஞாயிறு, 26 ஜூன் 2016 (14:36 IST)

’பதவி கிடைக்காதது ஏமாற்றம் அளிக்கிறது’ - ரவி சாஸ்திரி

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளராக, தான் தேர்ந்தெடுக்கப்படாதது, பெரும் ஏமாற்றம் அளிப்பதாக முன்னாள் இயக்குநர் ரவி சாஸ்திரி கூறியுள்ளார்.
 

 
சச்சின் டெண்டுல்கர், சவுரவ் கங்குலி, விவிஎஸ். லட்சுமணன் ஆகிய மூவரின் ஆலோசனையை ஏற்று முன்னாள் சுழற்பந்து ஜாம்பவான் அனில் கும்ப்ளே இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக தேர்ந்தெடுக்கப்படுவதாகவும், கும்ப்ளே ஓராண்டு இப்பதவியில் நீடிப்பார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பந்தயத்தில் ரவி சாஸ்திரியும் இருந்தது குறிப்பிடத்தக்கது.
 
இதுகுறித்து ஆங்கில நாளிதழுக்கு அளித்த நேர்காணலில் ரவி சாஸ்திரி கூறியிருப்பதாவது: நான் உண்மையில் கடுமையாக ஏமாற்றமடைந்துள்ளேன். ஏனெனில் கடந்த 18 மாதங்களாக கடுமையாக உழைத்தோம். நானும் உதவிப் பயிற்சியாளர்களும் பொறுப்பை எடுத்துக் கொண்ட போது அணி இருந்த நிலைமையை ஒப்பிட்டால், தற்போது பெரும் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.
 
இது எனக்கு பெருமை அளிக்கிறது. அணி எழுச்சியுற்று, பல இடர் பாடுகளுக்கிடையே சவாலாகத் திகழ்ந்து டெஸ்ட் கிரிக்கெட், டி20-யில் நம்பர் 1, ஒருநாள் போட்டிகளில் 2-ம் இடங்களை அணி பெற்றது. இதற்கு மேல் என்ன வேண்டும்? இந்த இளம் அணியினரிடம் நானே இத்தகைய முன்னேற்றத்தை எதிர்பார்க்கவில்லை. உண்மையில் எனக்குப் பெருமை யாகவே உள்ளது.
 
நான் நேர்மையாக, கடின மாக உழைத்தேன். வீரர்களும் அருமையானவர்கள். இந்த காலக்கட்டங்களில் நீதிமன்றத்திலும் ஊடகங்களிலும் பிசிசிஐ-மீது கடும் விமர்சனங்கள், தாக்குதல்கள் எழுந்தன. ஆனால் கிரிக்கெட் பிரகாசித்தது. இந்திய அணி விளையாடும் விதத்தை பார்ப்பதற்காக மக்கள் ஆவலுடன் கூடினர்.
 
ஸ்கைப் மூலம் லஷ்மண், சஞ்சய் ஜக்தாலே, சச்சின் ஆகியோர் என்னிடம் அருமையான கேள்விகளைக் கேட்டனர். நேர்காணல் அபாரமாக அமைந்தது. அனைத்து வடிவங்களுக்கும் எனது திட்டம் என்ன? வேகப்பந்து வீச்சாளர்களை நாம் எப்படி கையாள வேண்டும் என்ற கேள்விகளை எழுப்பினர். நான் எனது திட்டங்களைக் கூறினேன். சவுரவ் கங்குலி எனது நேர்காணலின் போது இல்லை.
 
பயிற்சியாளரான பின் கும்ப்ளே என்னை அழைத்தார். அவருக்கு நான் வாழ்த்துக்கள் தெரிவித்தேன். அணி தற்போது 3 வடிவங்களிலும் சரியான நிலையில் உள்ளது. அதனை இன்னும் ஒரு படி மேலே உயர்த்த வேண்டும்” என்று தெரிவித்ததாக குறிப்பிட்டார்.