செவ்வாய், 23 ஏப்ரல் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: சனி, 23 மே 2015 (16:14 IST)

தேசத்திற்காக ஆடுவது முக்கியமா? அல்லது ஐபிஎல் போட்டி முக்கியமா? - முன்னாள் வீரர் காட்டம்

வீரர்கள் தேசத்திற்காக விளையாட வேண்டுமா? அல்லது ஐ.பி.எல். போட்டிக்கு செல்ல வேண்டுமா? என்பதை முடிவு செய்ய வேண்டும் என்று வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் வீரர் கார்ட்லி அம்புரோஸ் தெரிவித்துள்ளார்.
 

 
வெஸ்ட் இண்டீஸ் அணியின் முக்கிய வீரர்களான கிறிஸ் கெய்ல், பிராவோ, ஸ்மித், டேரன் சமி, பொல்லார்ட், சுனில் நரைன் போன்ற வீரர்கள் இந்தியாவில் நடைபெற்று வரும் 8ஆவது ஐபிஎல் போட்டிகளில் விளையாடி வருகின்றனர். தற்போது வெஸ்ட் இண்டீஸ் அணி டெஸ்ட் போட்டிகளில் விளையாடவுள்ளது.
 
இந்நிலையில், வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் கார்ட்லி அம்புரோஸ் அங்குள்ள பத்திரிக்கையாளர்களுக்கு அளித்துள்ள போட்டியில், ஐபிஎல் போட்டிகளில் விளையாடும் வீரர்கள் டெஸ்ட் அணிக்கு திரும்புவது குறித்து கேட்கப்பட்டது.
 
அதற்கு பதிலளித்து பேசிய அம்புரோஸ், ”என்னைப் பொறுத்தவரை நான் அப்படி ஏதும் நினைக்கவில்லை. ஐபிஎல் போட்டியில் விளையாடுவதற்கு சென்றிருக்கும் வீரர்கள் அவமதித்திருப்பதாக கருதவில்லை.
 
ஆனால், அவர்கள் வெளியேறுவார்களா அல்லது அணிக்கு திரும்புவார்களா என்பதை குறித்து முடிவெடுப்பது உங்களால் முடியாது. என்னைப் பொறுத்தவரை இது கவலை தரும் விஷயம்தான். எப்பொழுதும் வலுவான அணியை களம் இறக்க வேண்டும் என்று தான் நாம் முயற்சிக்கிறோம்.
 
துரதிர்ஷ்டவசமாக நமது முக்கிய வீரர்கள் சிலர் தற்போது ஐ.பி.எல். போட்டியில் விளையாடி வருகிறார்கள். அவர்கள் தான் வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக விளையாட வேண்டுமா? அல்லது ஐ.பி.எல். போட்டிக்கு செல்ல வேண்டுமா? என்பதை முடிவு செய்ய வேண்டும்” என்று காட்டமாகத் தெரிவித்துள்ளார்.