வியாழன், 28 மார்ச் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: புதன், 16 மார்ச் 2016 (17:06 IST)

பாகிஸ்தான் அதிரடி ஆட்டம் - வங்கதேசத்துக்கு 201 ரன்கள் இலக்கு

டி 20 உலகக்கோப்பை போட்டியில் வங்கதேசத்திற்கு எதிரான ஆட்டத்தில் முதலில் களமிறங்கிய பாகிஸ்தான் அணி 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 201 ரன்கள் குவித்துள்ளது.
 

 
6ஆவது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் சூப்பர்-10 சுற்றுகள் நடைபெற்று வருகிறது. இதில் இன்று குரூப் ’2’ பிரிவில் இடம்பெற்றுள்ள பாகிஸ்தான், வங்கதேசம் அணிகள் மோதின. டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது.
 
20 ஓவர்கள் முடிவில் பாகிஸ்தான் அணி 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 201 ரன்கள் குவித்துள்ளது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் சர்ஜீல் கான் 18 ரன்களில் அவுட் ஆனார். பின்னர், ஜோடி சேர்ந்த அஹமது ஷெசாத், முஹமது ஹஃபீஸ் இணை வங்கதேச அணியின் பந்துவீச்சை நாலாபுறமும் ஓட விட்டனர்.
 
இருவரும் இணைந்து இரண்டாவது விக்கெட்டுக்கு 95 ரன்கள் குவித்தது குறிப்பிடத்தக்கது. பாகிஸ்தான் அணி 121 ரன்கள் எடுத்திருந்தபோது அஹமது ஷெசாத் 39 பந்துகளில் 8 பவுண்டரிகளுடன் 52 ரன்கள் குவித்தார்.
 
அஃப்ரிடி அதிரடி:
 
இதனை தொடர்ந்து களமிறங்கிய ஷாகித் அஃப்ரிடி வாணவேடிக்கை காட்டினார். 19 பந்துகளை சந்தித்த அவர் 4 பவுண்டரிகள், 4 சிக்ஸர்கள் உட்பட 49 ரன்கள் குவித்தார். இதற்கிடையில் ஹஃபீஸ் 64 ரன்கள் குவித்து வெளியேறினார். வங்கதேச தரப்பில் டஷ்கின் அஹமது, அராஃபத் சன்னி தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.