எனது இளைய சகோதரனுக்காக எனது இதயம் இன்றும் துடிக்கிறது - மறைந்த பிலிப் ஹியூக்ஸ் குறித்து மைக்கேக் கிளார்க்
பந்து தாக்கி மரணம் அடைந்த ஆஸ்திரேலிய அணியின் இளம் வீரர் பிலிப் ஹியூக்ஸுக்காக தனது இதயம் இன்றும் துடிப்பதாக ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் கிளார்க் கூறியுள்ளார்.
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 27ஆம் தேதி ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் இளம் பேட்ஸ்மேன் பிலிப் ஹியூக்ஸ் சிட்னியில் நடந்த முதல்தர கிரிக்கெட் போட்டியின் போது பவுன்சராக வந்த பந்து தலையில் தாக்கியதில் காயமடைந்து பின் மரணம் அடைந்தார்.
இந்நிலையில், பிலிப் ஹியூக்ஸின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி வரும் வெள்ளிக்கிழமை அனுசரிக்கப்பட உள்ளது. இதில் ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் கிளார்க் கலந்துகொள்ள உள்ளார்.
இது குறித்து கூறியுள்ள மைக்கேல் கிளார்க், “இன்றும் கூட எனது ’இளைய சகோதரனு’க்காக எனது இதயம் துடித்துக்கொண்டுதான் இருக்கிறது.
ஒவ்வொரு கணமும் அவன் என்னோடு இருப்பதைப் போலவே உணர்கிறேன். இது உண்மையிலேயே ஒரு கடினமான நாளாக இருக்கப்போகிறது. வீரர்களும் இதே கனத்தோடுதான் விளையாடப் போவார்கள் என்று நினக்கிறேன்.
நாம் ஹியூக்ஸின் குடும்பத்தினருக்கு தொடர்ந்து நமது ஆதரவையும், மரியாதையையும் செலுத்த வேண்டும் என்று உண்மையிலேயே நான் நினைக்கிறேன்” என்று கூறியுள்ளார்.