வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: செவ்வாய், 4 அக்டோபர் 2016 (20:37 IST)

பிசிசிஐ அதிகாரிகளை நிர்வாணமாக கட்டிவைத்து ‘பின்னால்’ சவுக்கடி கொடுக்க வேண்டும் - கட்ஜூ அதிரடி

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) மேற்கொள்ள வேண்டிய கடுமையான சீர்த்திருத்தங்களுக்கான பரிந்துரை அறிக்கையை முன்னாள் தலைமை நீதிபதி லோதா கமிட்டி உச்ச நீதிமன்றத்தில் சமர்ப்பித்தது.
 

 
இந்தப் பரிந்துரைகள் மற்றும் சீர்திருத்தங்கள் அடங்கிய 159 பக்க அறிக்கையை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. மேலும், அந்த பரிந்துரைகளுக்கு அனைத்தையும் அப்படியே அமல்படுத்த வேண்டும் என்று இந்திய கிரிக்கெட் வாரியத்துக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
 
இதில் பல பரிந்துரைகளை கிரிக்கெட் வாரியம் எதிர்ப்பு தெரிவித்து வந்தது. லோதா கமிட்டி பரிந்துரைகளை அமல்படுத்தாததற்கு உச்சநீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்தது.
 
இதற்கிடையில் லோதா கமிட்டி, இந்திய கிரிக்கெட் வாரியம் கணக்கு வைத்திருக்கும் வங்கிக்கு கடிதம் அனுப்பி இருந்தது. லோதா கமிட்டியின் கடிதத்தை ஏற்று பாங்க் ஆப் மகாராஷ்டிரா வங்கி இந்திய கிரிக்கெட் வாரியத்தின் வங்கி கணக்கை முடக்கி உள்ளது. வங்கி கணக்கை முடக்குவது பற்றி எஸ் வங்கி ஆலோசித்து வருகிறது.
 
தற்போது இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து 3 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இரண்டு போட்டிகள் முடிவடைந்த நிலையில் இன்னும் ஒரு டெஸ்ட் மற்றும் 5 ஒருநாள் போட்டிகளில் விளையாட வேண்டி உள்ளது.
 
இந்நிலையில், இது குறித்து கூறியுள்ள பிசிசிஐ-யின் மூத்த அதிகாரி ஒருவர், “பிசிசிஐ-யின் வங்கி கணக்கை முடக்கிவது என முடிவெடுத்தால், இந்தியா-நியூசிலாந்து தொடரை நடத்துவதற்கான எந்த முகாந்திரமும் எங்களுக்கு இல்லை. நாங்கள், உலகத்திற்கு முன்பாக இந்தியா அவமானப்பட நேரிடுவதை விரும்பவில்லை.
 
ஆனால், நாங்கள் எவ்வாறு செயல்பட முடியும்? எவ்வாறு போட்டிகளை நடத்த முடியும்? யார் பணம் செலுத்துவது? வங்கிக் கணக்கை முடக்குவது என்பது நகைச்சுவையான விஷயம் அல்ல. ஒரு சர்வதேச அணியை கூரான முனைக்கு எதிராக நிறுத்துவது போன்றது” என்று தெரிவித்துள்ளார்.
 
ஆனால், இந்த தகவலை மறுத்துள்ள லோதா கமிட்டி, ’பிசிசிஐ வங்கிக் கணக்குகளை முடக்குமாறு நாங்கள் எந்த உத்தரவும் பிறப்பிக்கவில்லை. பிசிசிஐ வழக்கம் போல தங்கள் பணியைத் தொடரலாம்’ என விளக்கம் அளித்திருந்தது.
 
இந்நிலையில், உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி மார்கண்டேய கட்ஜூ பிசிசிஐ-யை காட்டமாக விமர்சித்துள்ளார். இது குறித்து ட்விட்டரில் தெரிவித்துள்ள அவர், ”இந்த தண்டனை மட்டும் போதாது. லோதா கமிட்டி, பிசிசிஐ அதிகாரிகளை நிர்வாணமாக கம்பத்தில் கட்டிவைத்து, ஒவ்வொருவருக்கும் பின்புறம் 100 கசையடிகள் கொடுக்க வேண்டும்’’ என்று தெரிவித்துள்ளார்.
 
முன்னதாக லோதா கமிட்டியின் பரிந்துரைகள் குறித்து கூறியிருந்த மார்கண்டேய கட்ஜூ, ’லோதா கமிட்டியின் பரிந்துரைகள் சட்டவிரோதமானது. பிசிசிஐ செயல்பாடுகளில் உள்ள குறைபாடுகளைக் கண்டுபிடிக்கவே உச்ச நீதிமன்றம் லோதா கமிட்டியை நியமித்தது.
 
லோதா கமிட்டி தனது அறிக்கையை தாக்கல் செய்தபிறகு அதை நாடாளுமன்றத்திற்குத்தான் அனுப்ப வேண்டும். அமைச்சரவையே இதை ஏற்பதா வேண்டாமா என்பதைத் தீர்மானிக்க வேண்டும்” என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.