வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. விளையாட்டு
  2. »
  3. கிரிக்கெட்
  4. »
  5. செய்திகள்
Written By வீரமணி பன்னீர்செல்வம்
Last Updated : திங்கள், 2 ஜூன் 2014 (12:18 IST)

பஞ்சாப்பை 3 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி கொல்கத்தா அணி 2-வது முறையாக ‘சாம்பியன்’

ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் இறுதிப்போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப்பை வீழ்த்தி 2-வது முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.
கடந்த ஏப்ரல் 16-ம் தேதி முதல் நடந்து வரும் 7-வது ஐ.பி.எல். டி20 கிரிக்கெட் தொடரில் சாம்பியன் பட்டத்துக்கான இறுதிப்போட்டி பெங்களூர் சின்னசாமி ஸ்டேடியத்தில் நேற்று இரவு நடந்தது. இதில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
 
ஸ்டேடியத்தில் நிரம்பி வழிந்த ரசிகர்களின் பலத்த கரகோஷத்துக்கு மத்தியில் இரு அணியினரும் சர்வதேச கால்பந்து போட்டிகளை போல் சிறுவர்களுடன் ஒருவர் பின் ஒருவராக அணி வகுத்து வந்து வரிசையாக நின்றனர். தேசிய கீதம் இசைக்கப்பட்டு முடிந்ததும் போட்டி ஆரம்பமானது.
 
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை. கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியில் ஒரே ஒரு மாற்றமாக சந்தீப் ஷர்மா நீக்கப்பட்டு வேகப்பந்து வீச்சாளர் எல்.பாலாஜி சேர்க்கப்பட்டார்.
 
டாஸ் வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி கேப்டன் கம்பீர் பீல்டிங்கை தேர்வு செய்தார். இதன்படி முதலில் பேட்டிங் செய்த கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஷேவாக், மனன்வோரா ஆகியோர் களம் இறங்கினார்கள். பஞ்சாப் அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது. கடந்த ஆட்டத்தில் அதிரடியாக சதம் அடித்ததால் அதிக எதிர்பார்ப்புக்கு ஆளான ஷேவாக் 10 பந்துகளில் ஒரு பவுண்டரியுடன் 7 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்து ஏமாற்றம் அளித்தார். ஷேவாக், உமேஷ்யாதவ் வீசிய பந்தை அடித்து ஆட முயல அது மேல்நோக்கி எழும்பி கேப்டன் கம்பீர் கையில் தஞ்சம் அடைந்தது. அடுத்து களம் இறங்கிய கேப்டன் ஜார்ஜ் பெய்லி (1 ரன்) சுனின் நரின் சுழலில் போல்டு ஆனார். இதனால் பஞ்சாப் 5.1 ஓவர்களில் 30 ரன்களில் 2 விக்கெட்டுகளை இழந்து சுணக்கம் கண்டது.

இதனை அடுத்து விக்கெட் கீப்பர் விருத்திமான் சஹா, மனன்வோராவுடன் ஜோடி சேர்ந்தார். முதலில் இருவரும் நிதானமான ஆட்டத்தை கடைப்பிடித்தனர். முதல் 10 ஓவர்களில் பஞ்சாப் அணி 2 விக்கெட் இழப்புக்கு 58 ரன்கள் எடுத்தது. 10 ஓவருக்கு பிறகு இருவரும் அதிரடி ஆட்டத்தில் பட்டையை கிளப்பினார்கள்.
 
விருத்திமான் சஹா 12-வது ஓவரில் பியுஷ்சாவ்லா பந்து வீச்சில் தொடர்ந்து 2 சிக்சர்களை தூக்கினார். சுனில் நரின் வீசிய 14-வது ஓவரில் ஒரு சிக்சர் மற்றும் 2 பவுண்டரி அடித்து சஹா அரை சதத்தை (29 பந்துகளில்) எட்டினார். அதே ஓவரில் கடைசி பந்தில் மனன்வோரா பவுண்டரி அடித்து தனது அரை சதத்தை (42 பந்துகளில் 4 பவுண்டரி, ஒரு சிக்சருடன்) பூர்த்தி செய்தார். 15-வது ஓவரில் மோர்னே மோர்கல் பந்து வீச்சில் இருவரும் தலா ஒரு சிக்சர் அடிக்க ரன் ஜெட் வேகத்தில் உயர்ந்தது. இருவரும் உமேஷ்யாதவ் பந்து வீச்சையும் விட்டுவைக்கவில்லை.
 
16-வது ஓவரின் 3-வது பந்தில் விருத்திமான் சஹா 60 ரன்னில் இருக்கையில் தூக்கி அடித்து கையில் கொடுத்த எளிதான கேட்ச்சை பந்து வீசிய சுனில் நரின் தவறவிட்டார். அதற்கு அடுத்த பந்தில் மனன்வோரா கிரீசை விட்டு இறங்கி அடித்த பந்தை விக்கெட் கீப்பர் ராபின் உத்தப்பா ஸ்டம்புக்கு முன்னால் வந்து பிடித்து ஸ்டம்பிங் செய்தார். இதில் சர்ச்சை எழுந்ததால் ரீ பிளேயில் பார்த்த நடுவர் அந்த பந்தை நோ-பாலாக அறிவித்தார்.
 
18-வது ஓவரில் பியுஷ்சாவ்லா வீசிய முதல் பந்தில் மனன்வோரா அவரிடமே கேட்ச் கொடுத்து ஆட்டம் இழந்தார். முகத்தில் பட்டு எகிறிய பந்தை ரத்தத்துடன் பியுஷ்சாவ்லா அபாரமாக கேட்ச் செய்தார். மனன்வோரா 52 பந்துகளில் 6 பவுண்டரி, 2 சிக்சருடன் 67 ரன் எடுத்தார். இந்த ஜோடி 3-வது விக்கெட்டுக்கு 73 பந்துகளில் 129 ரன்கள் எடுத்து அணி சவாலான ஸ்கோரை எட்ட உதவினார்கள். இதைத்தொடர்ந்து களம் கண்ட அதிரடி ஆட்டக்காரர் மேக்ஸ்வெல் ‘ரிவர்ஸ் ஸ்விப்’ ஆடி முதல் பந்திலேயே ஆட்டம் இழந்து ஏமாற்றம் அளித்தார். 19-வது ஓவரில் சுனில் நரின் வீசிய பந்தில் விருத்திமான் சஹா ஒரு பவுண்டரி, 2 சிக்சர் அடித்தார். 2-வது சிக்சர் தூக்குகையில் அவர் தனது முதல் சதத்தை பதிவு செய்தார். இந்த ஐ.பி.எல். போட்டியில் அடிக்கப்பட்ட 3-வது சதம் இதுவாகும்.
 
நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 4 விக்கெட் இழப்புக்கு 199 ரன்கள் எடுத்தது. விருத்திமான் சஹா 55 பந்துகளில் 10 பவுண்டரி, 8 சிக்சருடன் 115 ரன்னுடனும், டேவிட் மில்லர் ஒரு பந்தில் ஒரு ரன்னுடனும் ஆட்டம் இழக்காமல் இருந்தனர். கொல்கத்தா அணி தரப்பில் பியுஷ்சாவ்லா 2 விக்கெட்டும், உமேஷ்யாதவ், சுனில் நரின் தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.
 
பின்னர் 200 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் கொல்கத்தா அணி 19.3 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 200 ரன்கள் எடுத்து 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 2-வது முறையாக சாம்பியன் பட்டத்தை தனதாக்கியது. அதிகபட்சமாக மனிஷ்பாண்டே 50 பந்துகளில் 7 பவுண்டரி, 6 சிக்சருடன் 94 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். பஞ்சாப் வீரர் விருத்திமான் சஹாவின் சதம் வீணானது.
 
கொல்கத்தா அணி 2-வது முறையாக ஐ.பி.எல். கோப்பையை வென்றது. ஏற்கனவே 2012-ம் ஆண்டில் வென்று இருந்தது. முதல்முறையாக இறுதிப்போட்டிக்குள் நுழைந்த பஞ்சாப் வெறும் கையுடன் வெளியேறியது.