வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Updated : திங்கள், 15 டிசம்பர் 2014 (13:26 IST)

விராட் கோலி கேப்டனாக பொறுபேற்க இதுவே சரியான தருணம் - இயான் சேப்பல் கருத்து

விராட் கோலி கேப்டனாக பொறுப்பேற்க இதுவே சரியான தருணம் என்று முன்னாள் ஆஸ்திரேலியா கேப்டன் இயான் சேப்பல் கூறியுள்ளார்.
 
அடிலெய்டில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்தாலும் கேப்டனாக சிறப்பாக செயல்பட்டார். அதோடு, கேப்டன் பொறுப்பேற்ற முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டு இன்னிங்ஸிலும் (115, 141) சதம் அடித்த முதல் இந்திய வீரர் என்ற பெருமையைப் பெற்றார்.
 

 
மேலும் பல சாதனைகளை அந்த ஆட்டத்தில் அவர் படைத்திருந்தார். இந்நிலையில் முன்னாள் ஆஸ்திரேலியா கேப்டன் இயான் சேப்பல் விராட் கோலி கேப்டனாக பொறுப்பேற்க இதுவே சரியான தருணம் என்று கூறியுள்ளார்.
 
இது குறித்து இயான் சேப்பல் கூறுகையில், “ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அடிலெய்டில் நடந்த முதலாவது டெஸ்டில் மூன்றரை நாட்கள் விராட் கோலி செயல்பட்ட விதம், அவர் இந்திய அணியின் முழுநேர டெஸ்ட் கேப்டனாக பதவி உயர்வு பெறுவதற்கு இதுவே சரியான நேரம் என்பதை இந்திய தேர்வாளர்களுக்கு உணர்த்தியிருக்கும். 

 
டோனியும் தனது நாட்களில் சிறந்த டெஸ்ட் கேப்டன் தான். எனினும் அணியின் டெஸ்ட் கேப்டன்ஷிப் மாற்றத்திற்கு இதுவே உகந்த நேரமாக தோன்றுகிறது. இந்த போட்டியில் கோலி இந்திய அணியின் தற்காலிக கேப்டன் தான். ஆனால் முழு நேர கேப்டனுக்குரிய திறமையை பார்க்க முடிந்தது” என்றார்.