வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Updated : திங்கள், 8 டிசம்பர் 2014 (12:16 IST)

’நாங்கள் அனுபவித்த வலியை இந்திய அணியினர்கள் இங்கே உணருவார்கள்’ - ஷேன் வாட்சன்

இந்திய மண்ணில் நாங்கள் அனுபவித்த வலியை இந்திய அணியினர்கள் இங்கே உணருவார்கள் என்று ஆஸ்திரேலிய அணியின் ஆல் ரவுண்டர் ஷேன் வாட்சன் தெரிவித்துள்ளார்.
 
நாளை, (09-12-14) செவ்வாய் கிழமை அன்று இந்தியா, ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணிகள் இடையிலான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் முதலாவது டெஸ்ட் போட்டி அடிலெய்டில் தொடங்குகிறது. இந்த போட்டி இந்திய நேரப்படி அதிகாலை 5.30 மணிக்கு போட்டி தொடங்கவிருக்கிறது.
 
இதையொட்டி ஷேன் வாட்சன் அளித்துள்ள பேட்டியில், “நாங்கள் ஆக்ரோஷமாக விளையாடும் போது எங்களது மிகச்சிறந்த ஆட்டம் வெளிப்பட்டு இருக்கிறது. ஆஸ்திரேலிய அணிக்காக விளையாடி வரும் காலத்தில் இருந்தே இதை நான் பார்த்து வருகிறேன். அந்த அணுகுமுறையில் மாற்றம் இருக்கப்போவதில்லை.
 
இந்தியாவுக்கு எதிராக களத்தில் என்ன செய்ய வேண்டும் என்பது எங்களுக்கு தெரியும். கடந்த ஆண்டு நாங்கள் இந்திய மண்ணில் விளையாடிய போது, அவர்கள் எங்களை 4–0 என்ற கணக்கில் தோற்கடித்தார்கள். அந்த வலியும் வேதனையும் இன்னும் மனதில் இருக்கிறது.
 
அதற்கு நாங்கள் எங்களது சொந்த மண்ணில் பதிலடி கொடுக்க வேண்டும். அதற்கு தொடரை சிறப்பாக தொடங்க வேண்டியது அவசியம். தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தும் போது, இந்திய மண்ணில் நாங்கள் அனுபவித்த வலியை அவர்களும் (இந்தியர்கள்) இங்கே உணருவார்கள். அதை நாங்கள் செய்தாக வேண்டும்.
 
சக வீரர் பிலிப் ஹியூக்சின் மரணத்தை தொடர்ந்து, அந்த பாதிப்பில் இருந்து மனரீதியாக நான் மெதுவாகத்தான் மீண்டு வருகிறேன். ஆனால் உடல்ரீதியாக போட்டிக்கு தயாராக இருக்கிறேன். எனது வாழ்க்கையில் சமீபத்திய தினங்கள் மிகவும் கடினமான நாட்கள் என்பதில் சந்தேகமில்லை” என்று கூறியுள்ளார்.