வெள்ளி, 29 மார்ச் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Bala
Last Updated : புதன், 22 ஜூன் 2016 (20:21 IST)

ஜிம்பாப்வேவை வீழ்த்தி தொடரை கைப்பற்றியது இந்தியா

ஜிம்பாப்வே சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட டி 20 தொடரில் விளையாடியது. முதல் இரண்டு போட்டிகள் முறையே ஜிம்பாப்வே, இந்திய அணிகள் தலா ஒரு போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளன.

 
கோப்பையை யார் வெல்வது என தீர்மானிக்கும் 3ஆவது மற்றும் கடைசி டி 20 இன்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது. அதன்படி முதலில் களமிறங்கிய இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 138 ரன்கள் எடுத்துள்ளது.

அதிகபட்சமாக கேதார் ஜாதவ் 58 ரன்களும் [42 பந்துகள், 7 பவுண்டரிகள், 1 சிக்ஸர்], தொடக்க ஆட்டக்காரர் கே.எல். ராகுல் 22 ரன்களும், அம்பதி ராயுடு மற்றும் அக்‌ஷர் பட்டேல் ஆகியோர் தலா 20 ரன்களும் எடுத்தனர். கேப்டன் தோனி 9 ரன்கள் மட்டுமே எடுத்து ஏமாற்றினார்.

ஜிம்பாப்வே அணியின் டொனால்ட் திரிபானோ அபாரமாக பந்துவீசினார். 4 ஓவர்கள் வீசி 20 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

இதையடுத்து 139 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய ஜிம்பாப்வே அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 135 ரன்கள் எடுத்தது. இதன் மூலம்  3 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது.

இந்த வெற்றியை அடுத்து 2-1 என்ற கணக்கில் தொடரையும் இந்திய அணி கைப்பற்றியது.