வியாழன், 28 மார்ச் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Updated : திங்கள், 24 ஆகஸ்ட் 2015 (13:16 IST)

இந்திய அணி 278 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி; தோல்வியுடன் விடைபெற்றார் சங்ககரா

இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியில், இந்திய அணி 278 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது.
 

 
இந்தியா - இலங்கை அணிகளுக்கிடையேயான 2ஆவது டெஸ்ட் போட்டி கொழும்புவில் உள்ள சாரா ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் 393 ரன்கள் குவித்தது.
 
இந்திய அணியில் அதிகபட்சமாக லோகேஷ் ராகுல் 108 ரன்களும், ரோஹித் சர்மா 79 ரன்களும், விராட் கோலி 78 ரன்களும் குவித்தனர். இலங்கை தரப்பில் ரங்கனா ஹெராத் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
 
பின்னர் தனது முதல் இன்னிங்ஸை தொடங்கிய இலங்கை அணி 306 ரன்களுக்குள் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இலங்கை அணியில் அதிகபட்சமாக ஆஞ்சலோ மேத்யூஸ் 102 ரன்களும், திரிமன்னே 62 ரன்களும், கௌசல் சில்வா 51 ரன்களும் எடுத்தனர். இந்தியா தரப்பில் அமித் மிஸ்ரா 4 விக்கெட்டுகளையும், அஸ்வின், இஷாந்த் சர்மா தலா ஒரு விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
 
வெற்றி இலக்கு 412:
 
முதல் இன்னிங்ஸில் 87 ரன்கள் முன்னிலை பெற்ற நிலையில் 2ஆவது இன்னிங்ஸை இந்திய அணி தொடங்கியது. 2ஆவது இன்னிங்ஸில் இந்திய அணி 8 விக்கெட் இழப்பிற்கு 325 ரன்கள் குவித்ததோடு இன்று தனது இன்னிங்ஸை முடித்துக் கொள்வதாக அறிவித்தது. இதனால், இலங்கை அணிக்கு வெற்றி பெறுவதற்கு 412 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
 
இந்திய அணியில் அதிகபட்சமாக ரஹானே 126 ரன்களும், முரளி விஜய் 82 ரன்களும் குவித்தனர். இலங்கை அணி தரப்பில் தம்மிகா பிரசாத், தரிண்டு கௌசல் ஆகியோர் தலா 4 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
 
விடைபெற்றார் சங்ககரா:
 
பின்னர் தனது இரண்டாவது இன்னிங்ஸை இலங்கை அணியில், தொடக்க ஆட்டக்காரரான கௌசல் சில்வா 1 ரன்னில் வெளியேறினார். பின்னர் பலத்த கரகோஷத்திற்கு இடையில் களமிறங்கினார் சங்ககரா. இது அவரது கடைசி இன்னிங்ஸ் என்பதால், இந்த சதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், எதிர்பாராத விதமாக 18 ரன்களில் அஸ்வினின் சுழலில், முரளி விஜயிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். அப்போது, இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி உள்ளிட்ட அனைத்து வீரர்களும் சங்ககராவிற்கு வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.
 

 
மைதானத்தில் இருந்த ரசிகர்களும் அவருக்கு எழுந்து நின்று மரியாதை செலுத்தினர். நான்காம் நாள் ஆட்டநேர முடிவில் இலங்கை அணி 2 விக்கெட் இழப்பிற்கு 72 ரன்கள் எடுத்திருந்தது.

இலங்கை தோல்வி:
 
இந்நிலையில், இன்று 5ஆவது நாளில் தனது ஆட்டத்தை தொடர்ந்து ஆடிய இலங்கை அணி வீரர்கள் யாரும் நிலைத்து நின்று ஆடவில்லை. கேப்டன் மேத்யூஸ் 23 ரன்களுடனும், சண்டிமால் 15 ரன்களுடனும், திரிமன்னே 11 ரன்களுடனும் வெளியேறினார்.
 
பின்னர் களமிறங்கிய வீரர்கள் யாரும் இரட்டை இலக்கத்தை தொடவில்லை. கடைசியாக களமிறங்கிய 5 வீரர்கள் ஒற்றை இலக்கத்தில் வெளியேறினார். அந்த அணியில் அதிகபட்சமாக கருணரத்னே மட்டும் 46 ரன்கள் எடுத்தார். இறுதியில் இலங்கை அணி 134 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
 
இதனால், இந்திய அணி 278 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்திய அணி தரப்பில் ரவிச்சந்திரன் அஸ்வின் 5 விக்கெட்டுகளையும், அமிஸ் மிஸ்ரா 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினார். ஆட்ட நாயகன் விருது லோகேஷ் ராகுலுக்கு வழங்கப்பட்டுள்ளது.

விராட் கோலி முதல் வெற்றி:
 
இந்த போட்டியுடன் இலங்கை அணியின் குமார் சங்ககரா ஓய்வு பெறுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. வெற்றியுடன் வழி அனுப்புவோம் என்று இலங்கை வீரர்கள் கூறியிருந்தனர். ஆனால், துரதிர்ஷ்டவசமாக அவர் தோல்வியுடன் விடைபெற வேண்டியதாயிற்று.
 
அதே சமயம், இந்திய அணியின் புதிய கேப்டனாக பொறுப்பேற்றுள்ள விராட் கோலி தலைமயிலான அணி பெற்ற முதல் வெற்றி இதுவாகும். இந்த வெற்றி மூலம் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இந்திய அணி 1-1 என்ற கணக்கில் சமன் செய்துள்ளது.