1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: புதன், 9 நவம்பர் 2016 (16:57 IST)

3 கேட்சுகளால் மோசம் போன இந்தியா - வலுவான நிலையில் இங்கிலாந்து

ராஜ்கோட்டில் நடைபெற்று இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியில், முதல்நாள் முடிவில் இங்கிலாந்து அணி 4 விக்கெட் இழப்பிற்கு 311 ரன்கள் எடுத்துள்ளது.


 

இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதன் முதல் டெஸ்ட் போட்டி குஜராத்தில் உள்ள ராஜ்கோட் மைதனாத்தில் நடைபெற்று வருகிறது.

இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் அலைஸ்டர் குக் முதலில் பேட்டிங்கை தேர்ந்தெடுத்தார். அதன்படி, இங்கிலாந்து அணி முதல் நாள் ஆட்ட முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 311 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் அதிகப்பட்சமாக ஜோ ரூட் 124 ரன்கள் [11 பவுண்டரிகள், 1 சிக்ஸர்] குவித்தார். மேலும், மொயின் அலி 99 ரன்களுடன் களத்தில் உள்ளார்.

இதற்கிடையில் இந்திய வீரர்கள் மூன்று வாய்ப்புகளை வீணடித்தனர். இங்கிலாந்து அணியின் 2 தொடக்க வீரர்களது கேட்சை இந்திய வீரர்கள் தவறவிட்டனர்.


மொகமது ஷமி வீசிய முதல் ஓவரின் மூன்றாவது பந்தை, இங்கிலாந்து கேப்டன் அலைஸ்டர் குக் எதிர்கொண்டார். அந்த பந்து பேட்டின் விளிம்பில் பட்டு சென்றது. ரஹானே கைக்கு வந்த கேட்சை தட்டித் தட்டி கீழே நழுவ விட்டார்.

அடுத்து 2ஆவது ஓவரின் இரண்டாவது பந்தை உமேஷ் யாதவ் வீசினார். இதனையும் அலைஸ்டர் குக் எதிர்கொண்டார். இந்த பந்து 2வது ஸ்லிப்பில் நின்ற இந்திய கேப்டன் விராட் கோலிக்கு சென்றது. ஆனால், இந்த கேட்சை விராட் கோலி நழுவ விட்டார்.

மீண்டும் 6ஆவது ஓவரை மீண்டும் உமேஷ் யாதவ் வீசினார். இந்த ஓவரின் 5ஆவது பந்தை ஹசீப் ஹமீத் எதிர்கொண்டார். இந்த பந்தை ஹமீத் பேட்டின் விளிம்பில் பட்டு முதல் ஸ்லிப்பில் நின்ற விஜய் கைக்கு சென்றது. ஆனால், இந்த அருமையான வாய்ப்பையும் முரளி விஜய் நழுவ விட்டார்.

இதனால், முதலிலேயே நிலைகுழைந்து நிற்க வேண்டிய இங்கிலாந்து அணி நிலைத்து நின்று விட்டது.