1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Updated : சனி, 17 ஜனவரி 2015 (17:53 IST)

இந்திய அணி உலகக்கோப்பையைத் தக்க வைக்கும் - சவுரவ் கங்குலி

இந்திய கிரிக்கெட் அணி உலகக் கோப்பையைத் தக்க வைக்கும் என்று முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.
 
11ஆவது உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி வருகின்ற பிப்ரவரி மாதம் 14ஆம் தேதி முதல் மார்ச் 29ஆம் தேதி வரை ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து ஆகிய நாடுகளில் நடைபெற உள்ளது. இந்நிலையில் உலகக்கோப்பையை இந்திய அணி தக்கவைத்துக் கொள்ளும் என்று கங்குலி நம்பிக்கைத் தெரிவித்துள்ளார்.
 
கொல்கத்தாவில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டபோது பேசிய சவுரவ் கங்குலி, “இந்தியா உலகக் கோப்பையை வெல்ல வாய்ப்புள்ளது. விளம்பரத்துக்காக இதைச் சொல்லவில்லை.
 
ஒருநாள் தொடர் என்று வந்து விட்டால் இந்தியாவுக்கு வெற்றி வாய்ப்பு என்பது உறுதி. இந்திய அணி வலுவான பேட்டிங் வரிசையைப் பெற்றுள்ளது. அதோடு, டெஸ்ட் தொடருக்கும், ஒரு நாள் தொடருக்கும் வித்தியாசம் உள்ளது.
 
டெஸ்ட் போட்டிகளை விட ஒரு நாள் ஆட்டங்களில் பந்து வீச்சாளர்களின் பணிச்சுமை குறைவு. ஏற்கெனவே சொன்னதைப் போல, தற்போதைய இந்திய அணி உலகக் கோப்பையை வெல்ல வாய்ப்புள்ளது” என்று தெரிவித்துள்ளார்.