வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By
Last Modified: செவ்வாய், 26 ஜூன் 2018 (18:27 IST)

தோனியை நினைத்தேன் மேட்சை முடித்தேன் - ஜாஸ் பட்லர்

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியை தோனியை மனதில் நினைத்து ஆட்டத்தில் சாதித்ததாக ஜாஸ் பட்லர் தெரிவித்துள்ளார்.
 
ஆஸ்திரேலியா - இங்கிலாந்து மோதிய 5வது ஒருநாள் போட்டி மான்செஸ்டரில் நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் செய்து 205 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து, களமிறங்கிய இங்கிலாந்து அணி துவக்க வீரர்கள் ஜேசன் ராய் மற்றும் ஜானி பேர்ஸ்டோவ் ஆகியோர் வந்த வேகத்தில் நடையை கட்டினர். இதன்பின்னர் களமிறங்கிய ஜோ ரூட் 1 ரன்னிலும், இயான் மார்கன் டக்-அவுட்டும் ஆகினர்.
 
அதைத்தொடர்ந்து களமிறங்கிய ஜாஸ் பட்லர் இங்கிலாந்து அணியை அபாய கட்டத்தில் இருந்து மீட்டெடுத்து அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றார். இந்த இன்னிங்சில் தனி ஒரு வீரனாக நின்று அணியை வெற்றி பெற செய்தார். இவர் 122 பந்துகளில் 110 ரன்கள் அடித்து கடைசிவரையிலும் ஆட்டமிழக்காமல் இருந்தார்.
 
இந்த நெருக்கடியான நிலைமையை எப்படி சமாளித்தீர்கள் என செய்தியாளர்கள் பட்லரிடம் கேள்வி கேட்ட போது. அவர், விக்கெட்டுகள் வேகமாக சரிந்ததால் நெருக்கடியை சமாளிக்க முயற்சித்தேன். அப்போது இப்படிப்பட்ட சூழ்நிலையில் இந்திய அணியின் விக்கெட் கீப்பர் தோனி எப்படி சமாளித்திருப்பார் என யோசித்தேன். அவர் பதற்றத்தை வெளிப்படுத்தாமல் அமைதியாக விளையாடியிருப்பார் என நினைத்தேன். அதையே நானும் செய்தேன் என்றார்.