வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Updated : வெள்ளி, 27 மார்ச் 2015 (14:26 IST)

”விராட் கோலி ஆட்டம் இழந்ததை பெரிய விஷயமாக்கக்கூடாது” - தோனி

விராட் கோலி ஆட்டம் இழந்ததை பெரிய விஷயமாக்கக்கூடாது என்று இந்திய அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி கூறியுள்ளார்.
 
நேற்று நடைபெற்ற உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியின் அரையிறுதிப் போட்டியில் இந்திய அணி 95 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவிடம் தோல்வியடைந்தது. முக்கியப் போட்டிகள் ஆபாந்தவனாக கை கொடுக்கும் விராட் கோலி 1 ரன்னில் அவுட்டானார்.
 

 
இது குறித்து போட்டி முடிந்த பின் பத்திரிக்கையாளர் சந்ந்திப்பின் போது பேசிய கேப்டன் தோனி, “ஆஸ்திரேலிய வீரர்கள் மிகச்சிறப்பான கிரிக்கெட்டை ஆடியிருக்கிறார்கள். 300 ரன்களுக்கு மேலான ஸ்கோரை துரத்திப்பிடிப்பது வெற்றி பெறுவது, எப்போதும் கடினமானது.
 
நாங்கள் அதிகப்படியான ரன்களை விட்டுக்கொடுத்து விட்டோம். ஆனாலும், அவர்கள் ஒரு கட்டத்தில் 340 முதல் 350 ரன்கள் எடுக்க வாய்ப்பிருந்தது. அந்த வகையில் அவர்களை கொஞ்சம் கட்டுப்படுத்தினோம். ஆனாலும் பந்து வீச்சில் இன்னும் சிறப்பாக செயல்பட்டிருக்க வேண்டும்.
 
விராட்கோலி ஆட்டம் இழந்ததை பெரிய விஷயமாக்கக்கூடாது. அவர் அடித்து ஆடிய ஷாட்டிற்கான பலன் கிடைக்கவில்லை அவ்வளவு தான். ஆனால், கிரிக்கெட்டில் இது போன்று நிறைய பேட்ஸ்மேன்களுக்கு நடப்பது உண்டு. நாங்கள் 4 மாதங்களுக்கு மேலாக ஆஸ்திரேலிய மண்ணில் விளையாடி இருக்கிறோம்.
 
எங்களுக்கு ஆதரவு அளித்த இந்திய மற்றும் ஆஸ்திரேலிய ரசிகர்களுக்கு நன்றி. குறிப்பாக இந்திய அணியின் ஆட்டத்தை காண இந்தியா மற்றும் பல்வேறு நாடுகளில் இருந்து இங்கு வந்திருந்த ரசிகர்களுக்கு இந்த முடிவு ஏமாற்றம் அளித்திருக்கும். அதே சமயம் எந்த ஒரு ஆட்டத்திலும் ஒரு அணி மட்டுமே வெற்றி பெற முடியும்.
 
இறுதி ஆட்டத்தில் யார் ஜெயிப்பார்கள் என்பதை கணிக்க முடியாது. ஆஸ்திரேலியா, நியூசிலாந்து இரு அணிகளுமே இறுதிப்போட்டியில் விளையாட தகுதியான அணிகள் தான். இறுதி ஆட்டத்தை நான் வீட்டில் அமர்ந்து டி.வி.யில் பார்த்து ரசிப்பேன்” என்றார்.