செவ்வாய், 23 ஏப்ரல் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Caston
Last Modified: திங்கள், 8 பிப்ரவரி 2016 (18:45 IST)

தோனி சூதாட்டத்தில் ஈடுபட்டார்: டெல்லி கிரிக்கெட் சங்க செயலாளர் குற்றச்சாட்டு

இங்கிலாந்தில் கடந்த 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய கேப்டன் தோனி சூதாட்டத்தில் ஈடுபட்டார் என முன்னாள் இந்திய அணியின் மேலாளரும், தற்போதைய டெல்லி கிரிக்கெட் சங்க செயலாளருமான சுனில் தேவ் குற்றம் சாட்டியுள்ளார்.


 
 
பத்திரிக்கை ஒன்றுக்கு பேட்டியளித்த சுனில் தேவ் கடந்த 2014 ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியின் போது சூதாட்டத்தில் ஈடுபட்டது 100 சதவீதம் உண்மை என தெரிவித்தார். அந்த போட்டி தொடங்குவதற்கு இரண்டு நாட்களுக்கு முன் மழை பெய்ததால், அந்த பிட்ச் பந்து வீச்சுக்கு சாதகமாக இருந்தது.
 
டாஸ் வென்றால் பந்து வீச்சை தேர்வு செய்யலாம் என டிரெஸ்சிங் ரூமில் கூறிய தோனி, டாஸ் வென்ற பின்பு பேட்டிங்கை தேர்வு செய்தது சக வீரர்களுக்கே அதிர்ச்சியாக இருந்தது. அந்த போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 54 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.
 
அப்போதைய இந்திய கிரிக்கெட் சங்க தலைவர் ஸ்ரீநிவாசனிடம் தான் இது குறித்து கூறியதாகவும், அவர்கள் யாரும் அதை நம்புவதற்கு தயாராக இல்லை எனவும் சுனில் தேவ் பேட்டியின் போது தெரிவித்தார்.
 
தோனி 100 சதவீதம் சூதாட்டத்தில் ஈடுபட்டது உண்மை என கூறிய சுனில் தேவ் தற்போது அந்த குற்றச்சாட்டை மறுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.