ஐபிஎல் 7: ரெய்னாவின் அதிரடி ஆட்டத்திற்கு பிறகும் தோற்ற சென்னை அணி
இறுதிக்கட்டத்தை அடைந்துள்ள ஐபிஎல் 7 தொடரில், விறுவிறுப்பான சூழலில் நடைபெற்ற இறுதி போட்டிக்கான தகுதி போட்டியில் பஞ்சாப் அணி சென்னை அணியை வீழ்த்தி இறுதிக்கு தகுதி பெற்றது.
துவக்கம் முதலே அதிரடியாக விளையாடிய கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் சேவாக் 58 பந்தில் 122 ரன்கள் குவித்து சதம் அடித்தார். இந்த சதத்தில் 12 பவுண்டரிகளும், 8 சிக்சர்களும் அடக்கம். பெரிய எதிர்ப்பார்ப்புக்கு இடையே களத்திற்குள் நுழைந்த மேக்ஸ்வெல் சொற்ப ரன்களில் அவுட் ஆனார்.
20 ஓவர்கள் முடிவின் பஞ்சாப் அணி 6 விக்கெட் இழப்புக்கு 226 ரன் குவித்தது. 227 ரன்கள் குவித்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் களத்திற்கு வந்த சென்னை அணியின் டூப் லேசிஸ் ஆட்டத்தின் துவக்கத்திலேயே அவுட் ஆனார்.
ஸ்மித், மெக்கலம், ஹஸ்சி போன்றோரும் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தாத நிலையில், ரெய்னாவின் அதிரடியான ஆட்டத்தால் சென்னை 6 ஓவரில் 100 ரன்னை குவித்தது. ரெய்னா 25 பந்தில் 12 பவுண்டரி, 6 சிக்சருடன் 87 ரன் எடுத்தார். ஆனால், ரெய்னா அவுட் ஆன பிறகு சென்னையின் ரன் குவிப்பு குறைய துவங்கியது.
இதனால் சென்னை அணியால் 7 விக்கெட் இழப்புக்கு 202 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது. இதனால் சென்னை அணி 24 ரன்னில் தோற்று இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும் வாய்ப்பை இழந்தது.