செவ்வாய், 16 ஏப்ரல் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Updated : திங்கள், 24 ஆகஸ்ட் 2015 (10:50 IST)

வெற்றியுடன் விடைபெற்றார் கிளார்க்; ஆஸ்திரேலியா இன்னிங்ஸ் வெற்றி - தொடரை கைப்பற்றியது இங்கிலாந்து

ஆஷஸ் தொடரின் 5ஆவது போட்டியில் ஆஸ்திரேலியா அணி இன்னிங்ஸ் மற்றும்  46 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆனாலும், தொடரை இங்கிலாந்து அணி 3-2 என்ற கணக்கில் கைப்பற்றியது.
 
இங்கிலாந்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடி வந்தது. முதல் 4 போட்டிகளில் மூன்றில் இங்கிலாந்து அணியும், ஒன்றில் ஆஸ்திரேலியா அணியும் வெற்றி பெற்றிருந்தன.
 

 
இந்நிலையில் ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி லண்டனில் உள்ள ஓவல் மைதானத்தில் நடைபெற்றது. இதில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா அணி 481 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக ஸ்டீவன் ஸ்மித் 143 ரன்களும், வார்னர் 85 ரன்களும், ஆடம் வோக்ஸ் 76 ரன்களும் குவித்தனர்.
 
இங்கிலாந்து தரப்பில், ஸ்டோக்ஸ், ஸ்டீவன் ஃபின், மொய்ன் அலி ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
 
பின்னர் ஆடிய இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்ஸில், 149 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. பந்துவீச்சாளர் மொய்ன் அலி எடுத்த 30 ரன்களே அந்த அணியில் அதிகபட்சமாகும். அவருக்கு அடுத்தப்படியாக மார்க் வுட் 24 எடுத்தார்.
 
ஆஸ்திரேலியா தரப்பில் மிட்செல் ஜான்சன், மிட்செல் மார்ஷ் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
 
இதனால், இங்கிலாந்து அணி ஃபாலோ ஆன் பெற்றது. மேற்கொண்டு 332 ரன்கள் எடுத்தால் மட்டுமே, ஆஸ்திரேலியா அணி முதல் இன்னிங்ஸில் எடுத்த ரன்களை சமன் செய்ய முடியும் என்ற நிலையில், இங்கிலாந்து அணி தனது 2ஆவது இன்னிங்ஸை தொடங்கியது.
 
ஆனாலும், இங்கிலாந்து வீரர்கள் அடுத்தடுத்து வெளியேற இன்னிங்ஸ் மற்றும் 46 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இரண்டாவது இன்னிங்ஸில் அதிகபட்சமாக கேப்டன் அலைஸ்டர் குக் 85 ரன்களும், பட்லர் 42 ரன்களும் எடுத்தனர்.
 

 
ஆஸ்திரேலியா தரப்பில் பீட்டர் சிடில் 4 விக்கெட்டுகளையும், மிட்செல் மார்ஷ், நாதன் லயன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். ஆனாலும், தொடரை இங்கிலாந்து அணி 3-2 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது.
 
ஆட்டநாயகன் விருது ஸ்டீவன் ஸ்மித்துக்கும், தொடர் நாயகன் விருது கிறிஸ் ரோஜர்ஸ் மற்றும் ஜோ ரூட் இருவருக்கும் வழங்கப்பட்டது. இந்த போட்டியோடு ஆஸ்திரேலியா அணி கேப்டன் மைக்கேல் கிளார்க் மற்றும் ரோஜர்ஸ் இருவரும் ஓய்வு பெறுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.