வியாழன், 28 மார்ச் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Caston
Last Updated : திங்கள், 28 நவம்பர் 2016 (16:13 IST)

இந்திய வீரர்களை தகாத வார்த்தைகளால் திட்டிய இங்கிலாந்து வீரர்!

இந்திய வீரர்களை தகாத வார்த்தைகளால் திட்டிய இங்கிலாந்து வீரர்!

இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடந்து வரும் மூன்றாவது டெஸ்ட் போட்டியின் போது இங்கிலாந்து வீரர் பென் ஸ்டோக்ஸ் இந்திய வீரர்களை நோக்கி தகாத வார்த்தைகளால் திட்டியதால் அவரை ஐசிசி கடுமையாக கண்டித்துள்ளது.


 
 
இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் வந்துள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் போட்டி சமனிலும், இரண்டாவது போட்டியில் இந்திய அணி வெற்றியும் பெற்ற நிலையில் மூன்றாவது டெஸ்ட் போட்டி மொகாலியில் நேற்று முன்தினம் தொடங்கியது.
 
இதில் முதல் நாள் ஆட்டத்தின் போது இங்கிலாந்து வீரர் பென் ஸ்டோக்ஸ் ஜடேஜா வீசிய பந்தில் விக்கெட் கீப்பர் பார்த்திவ் பட்டேலால் ஸ்டம்பிங் செய்யப்பட்டு விக்கெட்டை இழந்தார். இந்த விக்கெட்டை இந்திய வீரர்கள் துள்ளிக்குதித்து கொண்டாடினர்.
 
இந்திய வீரர்கள் கொண்டாடியதை பார்த்து கோபமடைந்த ஸ்டோக்ஸ் இந்திய வீரர்களை நோக்கி தகாத வார்த்தைகளால் திட்டிக்கொண்டே வெளியேறினார். இது குறித்து இந்திய வீரர்கள் நடுவரிடம் புகார் அளித்தனர்.
 
இதன் பேரில் ஐசிசி நடத்திய விசாரணையில் பென் ஸ்டோக்ஸ் வீரர்களின் நன்னடத்தை விதியை மீறியது தெரியவந்தது. இதனையடுத்து பென் ஸ்டோக்ஸ் தனது தவறை ஒப்புக்கொண்டதால் அவர் மீது ஐசிசி நடவடிக்கை ஏதும் எடுக்காமல் கடுமையாக எச்சரித்துள்ளது.