வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Updated : சனி, 27 டிசம்பர் 2014 (17:25 IST)

3ஆவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா அபாரம் - முதல் இன்னிங்ஸில் 530 ரன்கள் குவிப்பு

மெல்போர்னில் நடைபெற்றுவரும் இந்தியா– ஆஸ்திரேலியா அணிகள் மோதும் பாக்சிங் டே டெஸ்ட் போட்டியில் (3ஆவது டெஸ்ட்) அபாரமாக ஆடிய ஆஸ்திரேலியா அணி முதல் இன்னிங்ஸில் 530 ரன்கள் குவித்துள்ளது.
 
நேற்று முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியா அணி முதல் நாள் ஆட்டத்தின் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 259 ரன் எடுத்தது. கேப்டன் ஸ்டீவன் ஸ்மித் 72 ரன்னும், விக்கெட் கீப்பர் ஹாடின் 23 ரன்னும் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தனர்.
 
இன்று தொடர்ந்து ஆடிய ஆஸ்திரேலியா 2–வது நாள் ஆட்டம் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 530 ரன்கள் குவித்தது. சிறப்பாக விளையாடிய ஹாடின், தனது 18ஆவது அரை சதத்தை பதிவு செய்தார்.

 
அபாரமாக விளையாடிய கேப்டன் ஸ்மித் 191 பந்துகளில் 9 பவுண்டரி, 1 சிக்சர் உட்பட 100 ரன்களை எடுத்தார். அவர் தொடர்ந்து 3ஆவது சதத்தை பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
 
கடைசிக் கட்டத்தில் வேகப்பந்து வீச்சாளரான ஹாரிஸ் 75 பந்துகளில் 7 பவுண்டரியுடன் 50 ரன்னை எடுத்தார். இதேபோல ஸ்மித் அதிரடியாக விளையாடி 150 ரன்னை குவித்தார். அவர் 273 பந்துகளில் 10 பவுண்டரி, 1 சிக்சருடன் 150 ரன்களைக் குவித்தார்.
 
இரட்டை சதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட கேப்டன் ஸ்மித் . 192 ரன் குவித்திருந்த நிலையில் ஆட்டம் இழந்தார். 305 பந்துகளில் 15 பவுண்டரி, 2 சிக்சர் உட்பட அவர் இந்த ரன்னை எடுத்தார்.
 

 
இறுதியாக ஆஸ்திரேலியா அணி தனது இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 142.3 ஓவரில் 530 ரன் குவித்தது. இந்தியா தரப்பில், முகமது ஷமி 4 விக்கெட்டுகளையும், உமேஷ் யாதவ், அஸ்வின் தலா 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினார்கள்.
 
பின்னர் முதல் இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணியில் ஷிகார் தவான் 51 பந்துகளில் 28 ரன்கள் எடுத்திருந்த நிலையில் வெளியேறினார். முரளி விஜய் 55 ரன்களிலும் புஜாரா 25 ரன்களிலும் தொடர்ந்து களத்தில் உள்ளனர்.
 
இந்திய அணி இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில், தனது முதல் இன்னிங்ஸில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 108 ரன்கள் எடுத்துள்ளது.