வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Updated : புதன், 2 செப்டம்பர் 2015 (18:35 IST)

ஆஸ்திரேலிய வீரர் கில்கிறிஸ்ட் இந்தியாவிற்கான கல்வி தூதராக நியமிப்பு

ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் அதிரடி வீரர் ஆடம் கில்கிறிஸ்ட் இந்தியாவிற்கான ஆஸ்திரேலிய கல்வி தூதராக நியமிக்கப்பட்டுள்ளார்.
 

 
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா நாடுகளுக்கு இடையே வலுவான கல்விப் பிணைப்பை ஏற்படுத்துவதற்காக முன்னாள் வீரர் ஆடம் கில்கிறிஸ்டை கல்விக்கான தூதராக நியமித்துள்ளதாக ஆஸ்திரேலிய அரசாங்கம் தெரிவித்துள்ளது.
 
கடந்த ஆகஸ்ட் 24ஆம் தேதி புதுடெல்லியில், இந்திய - ஆஸ்திரேலிய கல்வி கல்வி குழு கூட்டத்தின் வருடாந்த அமைச்சர்களுக்கான உரையாடல் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கில்கிறிஸ்டை தூதராக தேர்ந்தெடுப்பது குறித்து முடிவு எடுக்கப்பட்டது.
 
இது குறித்து ஆடம் கில்கிறிஸ்ட் கூறுகையில், தனது புதிய பங்களிப்பு குறித்து மிகவும் உற்சாகமாக இருப்பதாக கூறியுள்ளார். மேலும் அவர், ”இரு நாடுகளுக்கு இடையே கல்விப் பிணைப்பில் முக்கிய பங்களிப்பை செலுத்துவதற்காக தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளது பெருமை அளிக்கிறது.
 
எனது கிரிக்கெட் வாழ்க்கையின் பெரும்பகுதியை இந்தியாவில் செலவழித்திருக்கிறேன். இந்தியாவுடன் ஆஸ்திரேலியா முக்கிய பிணைப்பில் உள்ளதையும் நான் புரிந்து வைத்திருக்கிறேன். இந்தியாவிற்கான முதல் ஆஸ்திரேலியா கல்வி தூதராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதை மிகப்பெரிய வாய்ப்பாக கருதுகிறேன்” என்றார்.
 
இது குறித்து ஆஸ்திரேலிய கல்வித்துறை அமைச்சர் கிறிஸ்டோபர் பைன் கூறுகையில், “இந்தியா - ஆஸ்திரேலியா நாடுகளின் முதல் கல்வி தூதராக ஆடம் கில்கிறிஸ்ட் நியமிக்கப்பட்டதிற்கு நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். இரு தரப்பு கல்வி உறவில் வளர்ச்சியை ஏற்படுத்துவதற்கு கில்கிறிஸ்ட் மிகப்பெரிய பங்களிப்பை செலுத்துவார்” என்று கூறினார்.