வெள்ளி, 29 மார்ச் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Caston
Last Modified: செவ்வாய், 13 ஜூன் 2017 (11:03 IST)

வங்கதேசத்தை வதம் செய்ய காத்திருக்கும் இந்தியா: அரையிறுதியில் நேருக்கு நேர் மோதல்!

வங்கதேசத்தை வதம் செய்ய காத்திருக்கும் இந்தியா: அரையிறுதியில் நேருக்கு நேர் மோதல்!

மினி உலகக்கோப்பை என கூறப்படும் சாம்பியன்ஸ் டிராஃபி கிரிக்கெட் போட்டி இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. லீக் போட்டிகள் முடிந்துள்ள நிலையில் நாளை முதல் அரையிறுதிப்போட்டிகள் தொடங்குகின்றன.


 
 
இந்த தொடரில் மிகவும் பலம் வாய்ந்த அணிகளான ஆஸ்திரேலியா, தென் ஆப்ரிக்கா, நியூஸிலாந்து அணிகள் வெளியேறியுள்ளது கிரிக்கெட் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது.
 
குரூப் ஏ பிரிவில் இருந்து இங்கிலாந்து, வங்கதேசம் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது. குரூப் பி பிரிவில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது. அதன்படி குரூப் பி-இல் முதலிடத்தில் உள்ள இந்தியாவும் குரூப் ஏ-இல் இரண்டாம் இடத்தில் உள்ள வங்க தேசம் அணியும் நாளை மறுதினம் இரண்டாவது அரையிறுதி போட்டியில் மோத உள்ளது.
 
முதலாவது அரையிறுதி போட்டியில் நாளை பாகிஸ்தான், இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன. இந்த அரையிறுதி போட்டிகளுக்கு ஆசியாவை சேர்ந்த 3 அணிகள் முன்னேறியுள்ளது கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
 
சமீப காலமாக நன்றாக விளையாடி வரும் வங்கதேச அணி இந்திய அணிக்கு நிச்சயம் நெருக்கடி கொடுக்கும் என கூறப்படுகிறது. அதே நேரம் இந்தியாவுக்கு எதிரான போட்டி என்றால் வங்கதேச ரசிகர்கள் மிகவும் ஆக்ரோஷமாக இருப்பார்கள். சமீப காலமாக இந்தியா பாகிஸ்தான் போட்டியை போல தான், இந்தியா வங்கதேச போட்டியை பார்க்கிறார்கள் அந்நாட்டு ரசிகர்கள்.
 
ஆனால் இந்த தொடரில் அசுர பலத்துடன் இருக்கும் இந்தியாவிடம் வங்கதேச அணி நிச்சயம் பலத்த அடியை வாங்கும் என கிரிக்கெட் விமர்சகர்கள் கூறி வருகின்றனர். அதுமட்டுமல்லாமல் இந்த தொடரில் இன்னொருமுறை பகிஸ்தான் அணியுடன் இந்திய அணி மோதும் சூழல் வருவதற்கான வாய்ப்புகள் உள்ளது.