செவ்வாய், 16 ஏப்ரல் 2024
  1. ஆன்மிகம்
  2. ஆன்மிகம்
  3. ‌கி‌றி‌ஸ்ம‌ஸ்
Written By

இறைவனின் ஒரே மகன் இயேசு!

இவ்வுலகில் ஒரு சிறு குழந்தையாகப் பிறந்தார் என்பது கிறிஸ்து பிறப்பு விழாவின் மையமாக உள்ளது. உண்மையில் இயேசு பிறந்த நாளை யாராலும் சரியாக குறிப்பிட்டு கூறமுடியவில்லை. நாம் இப்போது கொண்டாடும் பிறந்த நாள், இயேசுவின்  இறப்புக்கு பின் 350 ஆண்டுகள் கழித்து போப் ஜூலியஸ் என்பவரால் டிசம்பர் 25 என்று அறிவிப்பு செய்யபட்டது.
மனிதன் முழு மனிதனாக வாழ விரும்பிய இறைவன் தன் ஒரே மகனை மக்களின் எல்லா வித பசியையும் போக்கும் உணவாக  இவ்வுலகுக்கு அனுப்பினார். “கடவுள் தரும் உணவு வானிலிருந்து இறங்கி வந்து உலகுக்கு வாழ்வு அளிக்கிறது”  (யோவா6-33).”வாழ்வு தரும் உணவு நானே. என்னிடம் வருபவருக்குப் பசியே இராது; என்னிடம் நம்பிக்கை கொண்டிருப்பவருக்கு  என்றுமே தாகம் இராது”(யோவா6-35).
 
தன் வாழ்வின் இறுதி நாளில் மானிடர் அனைவருக்கும் வாழ்வு தர, தன்னுடலைக் கல்வாரியில் துறந்து  இனிய முடிவில்லா வாழ்வு தரும் உணவாகக் கொடுக்க மானிட உடல்தாங்கி மனிதனாக இன்று பிறந்துள்ளார். அவர் பிறந்தது பெத்லகேம்.  பெத்லகேம் என்றால் “அப்பத்தின் வீடு’ என்று பொருள். ஆக இயேசு பிறந்த ஊரின் பெயர் “அப்பத்தின் வீடு’. பிறந்த பாலன் இயேசுவை உணவு உண்ணும் பாத்திரத்தில் வைத்துள்ளனர். “பிள்ளையைத் துணிகளில் பொதிந்து தீவனத் தொட்டியில்  கிடத்தினார்” (லூக் 2’7). அன்றே அவர் மனிதர்களின் பாவ பசியை போக்கி மனிதனுக்கு அமைதியும், மகிழ்ச்சியும்,  நிலையான வாழ்க்கையும் தரும் உணவாக போகிறார் என்று உணர்த்தாமல் உணர்த்தி விட்டார்.