வெள்ளி, 29 மார்ச் 2024
  1. இதர வாசிப்பு
  2. »
  3. குழந்தைகள் உலகம்
  4. »
  5. கதைகள்
Written By Webdunia
Last Modified: வெள்ளி, 24 ஜனவரி 2014 (17:25 IST)

டாமியால் கற்ற பாடம்

குழந்தைகளுக்கான சிறுகதை

நாலாவது படிக்கும் மாதங்கிக்கு விளையாட்டுல ஆர்வம் அதிகம். நல்லா பாட்டும் பாடுவா. ஆனா அவ மக்கு மாதிரி நடந்துப்பா. பாடம் படிக்க சொன்னா ரொம்ப கஷ்டப்படுவா. மதிப்பெண்ணும் கம்மியா வாங்குவா. படிக்க சொல்லி அவளோட அப்பா, அம்மா பலமுறை சொல்லிட்டாங்க. ஆனா அவ கேட்கல. படிக்க உட்காரவே மாட்டா.

அவளுக்கு அவங்க வீட்டு நாய் டாமி மேல ரொம்ப இஷ்டம். அதோடதான் எப்பவும் சுத்திக்கிட்டு இருப்பா. ஸ்கூல் நேரம் தவிர மத்த நேரத்துல அது கூடதான் இருப்பா. எங்க வெளையாட போனாலும் அத கூட்டிட்டு போயிடுவா. டாமிக்கும் மாதங்கி மேல ரொம்ப பிரியம். மாதங்கி படிக்கலேன்னு அதுக்கும் கவலை. ஆனா அதுக்கு பேச முடியாதே. என்ன பண்றதுன்னு புரியாம இருந்துச்சு.

ஒரு ஞாயிற்றுக்கிழமை வந்துச்சு. அன்னிக்கு லீவு. அதனால மாதங்கி டாமிய அழைச்சிட்டு ஊர் ஓரமா இருக்கற ஆத்தங்கரைக்கு போனா. அம்மா கிட்ட சொன்னா அனுப்ப மாட்டாங்க. அடி விழும். அதனால யாருக்கும் சொல்லாம டாமிய கூட்டிக்கிட்டு கிளம்பிட்டா.

டாமிக்கு இன்னைக்காவது மாதங்கிக்கு படிப்பு பத்தி புரியணும்னு ஆசை. ஆனால் என்ன பண்றது? சாமிய மட்டும் வேண்டிச்சு. ரெண்டு பேரும் ஆத்தங்கரை ஓரமா நின்னாங்க. மாதங்கிக்கு தெரியும். இந்த ஆறு ஆழம்னு. அப்பா சொல்லியிருக்காரு. அதனால டாமியோட ஓரமா நின்னு ஆத்த வேடிக்கை பார்த்துக்கிட்டிருந்தா.

தூரத்துல எதிர்முனையில அவ கூட படிக்கற பாபு வர்றது தெரிந்துச்சு. அவன் ஆத்துக்குள்ள போறத மாதங்கி பார்த்துட்டா. ‘அய்யோ... அவனுக்கு நீச்சல் தெரியாதே’ன்னு நினைச்சா. “பாபு... பாபு...” அப்படின்னு கத்தினா. அவன் காதுல வாங்கல. ஆத்துல போய் நீச்சல் அடிக்கறாப்புல உட்கார்ந்தான். ஒரு அலை வந்துச்சு. அவன் உள்ளே இழுத்துச்சு. இன்னும் வேகமா கத்தினா.

டாமியும் பாபுவ கவனிச்சது. வேகமா எதிர்பக்கம் போய் பாபு பக்கத்துல நின்னு குரைச்சது. டாமி குரைச்சத அந்த பக்கம் வந்த ஒரு மீனவர் பார்த்தார். உடனே அது அவர் பக்கத்துல போய் அவரோட சட்டைய இழுத்துச்சு. யாருக்கோ ஆபத்துன்னு அவருக்குப் புரிந்து போச்சு. டாமி போன வழிலயே வந்தார். ஆத்துல பாபு மூழ்கிக்கொண்டிருந்ததைப் பார்த்தார். உடனே ஆத்துல குதிச்சு, பாபுவ காப்பாத்தினாரு.

பாபு கண்ணு முழிச்சு பார்க்கும் போது அவன் முன்னாடி டாமி, மாதங்கி, மீனவர் எல்லாம் இருந்தாங்க. அவன் கண்ணைத் தொறந்ததால மீனவர் சந்தோஷப்பட்டார். “பாருப்பா... நீ தேங்கஸ் சொல்ல வேண்டியது இந்த நாய்க்குதான். அது வந்து என் சட்டைய இழுத்ததாலதான் நீ இப்ப உயிரோட இருக்க” அப்படின்னார்.

பாபு நன்றிப்பெருக்கோட டாமிய பார்த்தான். மாதங்கியையும் பார்த்தான். நாய்கிட்ட பேச முடியாதே. மாதங்கி கிட்ட எக்கச்சக்கமா தேங்க்ஸ் சொன்னான்.

மாதங்கி யோசிச்சு பார்த்தா. டாமியோட சமயோஜித புத்தியால அவளுக்கும் மரியாதை கிடைச்சுது. ‘அதே போல தான நாம படிச்சா, நமக்கும் டீச்சர்ஸ் கிட்ட நல்ல பேரு கிடைக்கும். அப்பா, அம்மாவுக்கும் மரியாதை கிடைக்குன்’னு நெனைச்சா. இனிமேல் நல்லா படிக்கணும்னு தீர்மானிச்சா.

டாமிக்கு மாதங்கி என்ன நெனைக்கறான்னு புரிந்துச்சு. எப்படி அவ மாறிட்டான்னு சாமிக்கு தேங்க்ஸ் சொல்லிச்சு.