வியாழன், 28 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: திங்கள், 28 மார்ச் 2016 (21:56 IST)

இனப் படுகொலை என்றால் என்ன?

இனப்படுகொலை என்பது மனித குலத்திற்கு எதிராக மேற்கொள்ளக்கூடிய மிக மோசமான குற்றச்செயலாக பெரும்பாலானவர்களால் கருதப்படுகிறது.
 

 
எந்தெந்தச் செயல்பாடுகள் இனப்படுகொலை எனக் கருதப்படுகிறது?
 
மனிதக் குழு ஒன்றினை முற்றாக ஒழிக்கும் முயற்சியுடன், அவர்களை முற்றாக அழிப்பதை நோக்காக கொண்டு மேற்கொள்ளப்படும் செயல்பாடே இனப்படுகொலை எனப்படுகிறது.
 
`ஜெனோசைட்' என ஆங்கிலத்தில் அழைக்கப்படும் இனப்படுகொலை என்ற சொல் எவ்வாறு நடைமுறைக்கு வந்தது?
 
ஜெனோசைட்டில் வரும் முதல் பாதி சொல்லான `ஜெனொஸ்' என்பது கிரேக்க சொல் ஆகும், அது `இனம்' அல்லது பழங்குடி என்ற பொருள் தருகிறது.
 
`சைட்' எனப்படும் இலத்தின் சொல் `கொல்வதற்கு' என்ற பொருள் தருகிறது, இந்த இரண்டும் சேர்ந்தே `ஜெனொசைட்' என்ற வார்த்தை உருவானது.
 
யூத இனப்படுகொலையின் போது தனது சகோதரன் தவிர குடும்ப உறுப்பினர்கள் அனைவரையும் இழந்த ரஃபேல், இனப்படுகொலை சர்வதேச சட்டத்தின் கீழ் குற்றமாக இனங்காணப்பட வேண்டும் என பிரச்சாரங்களை முன்னெடுத்து வந்தார்.
 

 
இதனை அடுத்து 1948 டிசம்பரில் இனப்படுகொலை குறித்த ஐ.நா தீர்மானத்தில் இது உள்வாங்கப்பட்டு பின்னர் 1951 ஜனவரியில் நடைமுறைக்கு வந்தது.
 
ஒரு இனக் குழுவின் உறுப்பினர்களை கொல்வது குழுவின் உறுப்பினர்களுக்கு உடல் மற்றும் உள ரீதியாக மோசமான தீங்கினை ஏற்படுத்துவது இனப் படுகொலையாகக் கருதப்படுகிறது.
 
அந்த இனக் குழுவில் புதிதாக பிறப்புக்களை தடுக்கும் நோக்கில் செயற்படுவது, குழந்தைகளை வலுக்கட்டாயமாக வேறொரு இனக்குழுவுடன் சேர்ப்பது,
 
ஒரு தேசிய இனத்தை அல்லது சமய குழுவை முழுதாகவோ அல்லது பகுதியாகவோ அழிப்பதை நோக்காக கொண்டு மேற்கொள்ளப்படும் செயற்பாடுகள் இனப்படுகொலை என ஐநா தீர்மானத்தில் வரையறுக்கப்பட்டுள்ளது.
 
ஆனால், இந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட பிறகு இது கடுமையாக விமர்சனத்திற்கு உள்ளானது. இந்தத் தீர்மானம் மிகக் குறுகியதாக உள்ளது என்றும் வேறு சிலர் இது தவறாகப் பயன்படுத்தப்படுவதாகவும் குற்றம்சாட்டிவருகின்றனர்.
 
நாஜிக்களால் மேற்கொள்ளப்பட்ட யூதர்களுக்கு எதிரான நடவடிக்கை மட்டுமே கடந்த நூற்றாண்டில் நடந்த இன அழிப்பு என சிலர் கூறுகின்றனர்.
 
ஆனால், 1948ஆம் ஆண்டுத் தீர்மானத்தின்படி, குறைந்தது மூன்று இன அழிப்பு சம்பவங்களாகவது நடந்திருப்பதாக வேறு சிலர் கணக்கிடுகின்றனர்.
 
முதலாவதாக, 1915க்கும் 1920க்கும் இடையில், ஒட்டோமான் துருக்கியர்களால் ஆர்மீனியர்கள் பெரும் எண்ணிக்கையில் படுகொலைசெய்யப்பட்டது.
 
அதன் பிறகு, நாஜிக்களால் 60 லட்சம் யூதர்கள் கொல்லப்பட்டது.
 
மூன்றாவதாக, ருவாண்டாவில் 1994ல் டுட்ஸி, ஹுடு இனத்தைச் சேர்ந்த 8 லட்சம் பேர் கொல்லப்பட்டது.
 
இவைதவிர, 1995ல் போஸ்னியாவின் ஸ்ரெப்ரெனீட்சாவில் நடந்தது இன அழிப்பு என யுகோஸ்லோவியாவுக்கான சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் கூறியிருக்கிறது.
 
1975ல் கிழக்குத் திமோர் மீது இந்தோனேஷியா எடுத்த படையெடுப்பு, 1970களில் கம்போடியாவில் நடந்த க்மெர் ரூஜ் படுகொலைகளையும் சிலர் இனப்படுகொலையாக முன்வைக்கின்றனர்.