வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Suresh
Last Modified: புதன், 29 அக்டோபர் 2014 (15:21 IST)

வன்மத்தோடு தொடர்பு படும் இரண்டு மரபணுக்கள்: புதிய கண்டுபிடிப்பு

மனிதனின் குறிப்பிட்ட இரண்டு மரபணுக்களுக்கும் அவனுடைய வன்முறைக் குற்றங்களுக்கும் இடையில் தொடர்பு இருப்பதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.


 
ஃபின்லாந்தில் வன்முறை மிக்க குற்றங்களைச் செய்ததாக கண்டறியப்பட்டவர்கள் தொள்ளாயிரம் பேரின் மரபணுக்களை ஆராய்ந்தபோது இந்த விவரம் தெரியவந்துள்ளது.
 
குறிப்பிட்ட இந்த இரண்டு மரபணுக்கள் ஒருவருக்கு இருக்குமாயின், அவர்கள் தமது வாழ்நாளில் திரும்பத் திரும்ப வன்முறையில் ஈடுபட்டிருந்ததற்கான வாய்ப்பு 13 மடங்கு அதிகமாக உள்ளது என விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.
 
MAOA என்ற மரபணுவும், CDH13 என்ற மரபணுவின் குறிப்பிட்ட ஒரு வகையுமே வன்முறையோடு தொடர்புடைய மரபணுக்களாக தெரியவருவதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
 
MAOA மரபணுவானது நமது மூளையில் டோபமைன், செரடோனின் போன்ற அவசியமான இரசாயணங்களை கட்டுக்குள் வைத்திருக்க உதவுகிறது.
 
CDH13 மரபணு, ஒருவர் போதை மருந்துக்கு அடிமையாக ஆகக்கூடியவர்களிடம் காணப்படுகின்ற ஒரு மரபணு என்று ஏற்கனவே கண்டறியப்பட்டிருந்தது. தற்போது அதன் ஒரு குறிப்பிட்ட வடிவம் வன்ம குணாம்சத்துடன் தொடர்புகொண்டிருப்பதாக கூறப்படுகிறது.
 
ஃபின்லாந்தில் நடந்துள்ள வன்முறைமிக்க குற்றங்களில் குறைந்தது 4 முதல் 10 சதவீதம் வரையிலானவற்றை குறிப்பிட்ட இந்த மரபணுக்களை உடையவர்கள்தான் செய்திருக்கிறார்கள் என தெரியவந்துள்ளதாக மாலிக்குலர் சைக்கியாட்ரி என்ற அறிவியல் சஞ்சிகையில் வெளியிடப்பட்டுள்ள ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது.
 
அதேநேரம், இந்த மரபணு ஒருவருக்கு இருப்பதை வைத்து அவர் குற்றம்செய்தவராக இருப்பார் என்றோ, ஒருவருக்கு இந்த மரபணு இல்லை என்பதை வைத்து அவர் குற்றம் செய்திருக்க வாய்ப்பில்லை என்றோ கருத ஆரம்பித்துவிடக்கூடாது ஆரம்பித்துவிடக்கூடாது என்று விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.
 
இந்த இரண்டு மரபணுக்கள்தான் என்றில்லை, வன்முறைக்கும் வேறு பல மரபணுக்களுக்கும் இடையிலும் தொடர்பு இருக்கலாம் என விஞ்ஞானிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.
 
ஒருவர் வன்முறையை நாடுவதற்கு சூழ்நிலையும் பெரிய காரணமாக அமைந்துள்ளது என்பதும் நாம் ஏற்கனவே நிரூபித்துள்ள அறிவியல் உண்மை என்பதையும் அவர்கள் வலியுறுத்துகின்றனர்.
 
விஞ்ஞானிகளின் கருத்து இப்படி இருந்தாலும், குற்றஞ்சாட்டப்பட்டவரின் மரபணு விவரங்களை எடுத்துச் சொல்லி, அவருக்கான தண்டனையை குறைக்க வழக்கறிஞர்கள் நீதிமன்றங்களில் முயன்ற சந்தர்ப்பங்களும் இருக்கவே செய்கின்றன. இத்தாலியிலும், அமெரிக்காவிலும் இதற்கான உதாரணங்கள் உண்டு.