வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Annakannan
Last Modified: திங்கள், 24 நவம்பர் 2014 (19:52 IST)

பொலிசால் சுடப்பட்ட சிறுவனின் கையில் இருந்தது, விளையாட்டுத் துப்பாக்கி

அமெரிக்காவின் கிளீவ்லண்ட் நகரில், விளையாட்டுத் திடல் ஒன்றில் கையில் துப்பாக்கி வைத்திருந்த 12 வயது கறுப்பினச் சிறுவன் ஒருவனைப் பொலிசார் சுட்டுக் கொன்ற சம்பவத்தில், அச்சிறுவன் கையில் ஏந்தியிருந்தது ஒரு விளையாட்டுத் துப்பாக்கி எனத் தெரிய வந்துள்ளது.
 
பொலிசால் சுடப்பட்ட டாமிர் ரைஸ் பின்னர் மருத்துவமனையில் உயிர்விட்டார்
 
கையை உயர்த்தி நிற்கும்படி பொலிசார் சொன்ன வார்த்தைகளை அச்சிறுவன் கேட்டு நடக்காமல் போகவே, பொலிஸ்காரர் ஒருவர் அச்சிறுவன் மீது இரண்டு தடவை சுட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
 
விளையாட்டுத் திடலில் ஒரு பையன் கையில் துப்பாக்கியை வைத்துக்கொண்டு அனைவரையும் அச்சுறுத்துகிறார், ஆனால் அது நிஜத் துப்பாக்கியா எனத் தெரியவில்லை என ஒருவர் தொலைபேசியில் அழைத்துப் புகார் செய்ய, பொலிசார் அந்த இடத்துக்கு விரைந்திருந்தனர்.
 
இறந்த சிறுவனின் பெயர் டாமிர் ரைஸ் என்று தெரியவந்துள்ளது.
 
தனது இடுப்பில் செருகியிருந்த துப்பாக்கியை இந்தச் சிறுவன் எடுக்க முற்பட்டபோது, அவர் இரண்டு முறை சுடப்பட்டிருப்பதாக கிளீவ்லண்ட் காவல் துறை துணைத் தலைவர் எட் டோம்பா தெரிவித்துள்ளார்.
 
அச்சிறுவன் பொலிஸ்காரர்களை நோக்கித் துப்பாக்கியைக் காட்டிருக்கவில்லை என்றும், வாயால் எவ்வித அச்சுறுத்தலை விடுத்திருக்கவும் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
 
அச்சொட்டாக நிஜத் துப்பாக்கியைப் போலவே தயாரிக்கப்பட்ட விளையாட்டு போலித் துப்பாக்கி அது எனப் பின்னர் தெரிய வந்துள்ளதாக பொலிசார் கூறுகின்றனர்.
 
சம்பந்தப்பட்ட பொலிஸ்காரர்கள் இருவர் மீதும் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக, வாஷிங்டனிலுள்ள பிபிசி செய்தியாளர் கூறுகிறார்.
 
இறந்த சிறுவனின் குடும்பத்தினரும் என்ன நடந்தது என்பதைத் தங்கள் பங்கில் தனியாக விசாரிக்கவுள்ளதாக அவர்கள் சார்பான வழக்குரைஞர் தெரிவித்துள்ளார்.