செவ்வாய், 23 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Suresh
Last Updated : புதன், 23 ஜூலை 2014 (11:55 IST)

மலேசிய விமானத் தாக்குதல்: தொடரும் தேடல்களும், சர்ச்சைகளும்

உக்ரைன் வான்பரப்பில் மலேசிய விமானம் ஒன்று சுட்டு வீழ்த்தப்பட்ட சம்பவம் தொடர்பிலான, சர்ச்சைகள், வாதப் பிரதிவாதங்கள் அரசியல் மோதல்கள் ஆகியவை தொடர்ந்து கொண்டே இருக்கின்றன.

இந்த விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதற்கு கிழக்கு உக்ரைனிலிருந்து செயல்படும் ரஷ்ய ஆதரவு கிளர்ச்சியாளர்களே காரணம் என்று உக்ரைன் கூறுகிறது. ஆனால் அதை அவர்களும் ரஷ்யாவும் மறுக்கிறார்கள்.

இதனிடையே அந்த விமானம் நொறுங்கி விழுந்த பகுதிக்கு மூன்று சர்வதேச வல்லுநர் குழு சென்றடைந்துள்ளனர். அந்த விமானத்தின் சிதிலங்கள் எட்டு கிலோமீட்டர் பரப்பளவில் வீசி எறியப்பட்டுள்ளன.

விமானம் வீழ்த்தப்பட்ட பகுதி அடங்கிய பிரதேசத்தில், உக்ரைன் படையினருக்கும், கிளர்ச்சியாளர்களுக்கும் மோதல் நிறுத்தம் ஒன்று நடைமுறையில் இருந்தாலும், விமானம் எப்படி சுட்டு வீழ்த்தப்பட்டது, என்பது தொடர்பிலான முழுமையான விசாரணைத் தொடங்க வேண்டும் என்று ஐரோப்பிய நாடுகளுக்கு இடையேயான பாதுகாப்பு அமைப்பான ஓஎஸ்சிஈயின் கண்காணிப்பளர்கள் கோரியுள்ளனர்.

இதனிடையே இச்சம்பவத்தில் பலியான சிலரின் சலடங்களை உக்ரைனிய அரசால், டச்சு தடயவில் அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

அவை புதன்கிழமை (23.7.14) நெதர்லாந்துக்கு எடுத்துச் செல்லப்பட்டு, அடையாளம் காணும் நடவடிக்கைகள் தொடங்கும் என டச்சுப் பிரதமர் அறிவித்துள்ளார்.

சுட்டு வீழ்த்தப்பட்ட விமானத்தின் ஒலிக் குறிப்புகள் அடங்கிய இரண்டு கறுப்புப் பெட்டிகளை ரஷ்ய ஆதரவு பிரிவினைவாதிகள் அரச தரப்பிடம் ஒப்படைத்துள்ளனர்.

அந்த விமானம் விழுத்நு நொறுங்கியப் பகுதிகளில் சில மாறுதல்களை காண முடிகிறது எனும் குற்றச்சாட்டுக்களை ஓஎஸ்சிஈ வைத்துள்ளது.

சிதிலங்களை திருத்தும் பித்தலாட்டங்கள் நடைபெற்றுள்ளன என்று அந்த அமைப்பு கூறுகிறது.

இதனிடையே விமானம் சுட்டு வீழ்த்தப்பட்ட இடத்துக்கு, எவ்விதத் தடையுமின்றி, சர்வதேச ஆய்வாளர்கள் சென்று வருவதற்கு அனுமதிக்க வேண்டும் எனும் ஒரு தீர்மானம், ஐ நாவின் பாதுகாப்பு கவுன்சிலில் நிறைவேறியுள்ளது.

அந்த விமானத்தின் பயணக் குறிப்புகளை பதிவு செய்யும் கருவி பிரிட்டனில் ஆய்வு செய்யப்படும் என்று பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கேமரன் தெரிவித்துள்ளார்.