வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By
Last Modified: சனி, 2 மே 2015 (05:50 IST)

வட இலங்கையில் அதிகரிக்கும் ரயில் விபத்துக்கள்

இலங்கையின் வடக்கே ரயில்வே கடவைப் பகுதிகளில் விபத்துக்கள் அதிகரித்து வருவது குறித்து கவலைகள் எழுந்துள்ளன.


 
வட பகுதியில் புதிதாக ரயில் பாதைகள் அமைக்கப்பட்டிருந்தாலும் பாதுகாப்பு தொடர்பில் போதிய கவனம் செலுத்தப்படவில்லை என்று பல்துறையினர் குற்றஞ்சாட்டுகின்றனர்.
 
ரயில்வே கடவைகளில் பாதுகாப்புகள் ஏற்பாடுகள் உடனடியாக மேம்பாடு செய்யப்படாவிட்டால் விபத்துக்கள் தொடரும் அபாயங்கள் உள்ளன என்று பணியாளர்கள் மட்டுமன்றி பொதுமக்களும் அச்சம் வெளியிட்டுள்ளனர்.
 
அண்மையில் அடுத்தடுத்து இடம்பெற்ற விபத்துக்களில் பலர் உயிரிழந்திருப்பதாகக் காவல்துறை தகவல்கள் தெரிவிக்கின்றன.
 
சிலதினங்களுக்கு முன்னர் கிளிநொச்சி அறிவியல் நகர் பகுதியில் கார் ஒன்று ரயில்வே கடவையைக் கடந்தபோது விரைவு ரயில் ஒன்று மோதியதில் 4 பேர் அந்த இடத்திலேயே மரணமடைந்தனர்.


 
உரிய முறையில் திட்டமிடப்படாததன் காரணமாகவே இந்த விபத்துக்கள் நிகழ்ந்திருப்பதாக உள்ளூர்வாசிகளும் கடவைகளில் பணியாற்றுபவர்களும் கூறுகிறார்கள்.
 
அதேவேளை ரயில்வே கடவைகளில் பணியாற்றுகின்ற ஊழியர்கள் தற்காலிக ஊழியர்களாகவே கடமையாற்றி வருகின்றனர்.
 
வவுனியா மாவட்டத்தில் மாத்திரம் இவ்வாறு 75 ஊழியர்கள் பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் கடமையாற்றி வருவதாகவும், இவர்களுக்குக் காவல்துறையினரே நியமனம் வழங்கி நாட்கூலி அடிப்படையில் சம்பளம் வழங்கி வருவதாகவும் இந்த ஊழியர்களுக்கான சங்கத்தின் தலைவர் ரொகான் ராஜ்குமார் பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார்.
 
ரயல்வே கடவை காப்பாளர்கள் தங்களுக்கு விளக்குகள் கூட வழங்கப்படவில்லை என்று கூறுகிறார்கள். அதேபோல தங்குவதற்கு கூட போதிய இடமில்லை என்றும் அவர்களில் சிலர் பிபிசியிடம் தெரிவித்தனர்.