1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By
Last Modified: வெள்ளி, 19 ஜூலை 2019 (21:20 IST)

அதிகம் பதப்படுத்தப்பட்ட உணவு உயிருக்கு உலை வைக்கும்

சிக்கன் துண்டுகள், ஐஸ்கிரீம், காலை உணவுக்கான தானியங்கள் போன்ற - அதிகம் பதப்படுத்தப்பட்ட உணவு வகைகளுக்கும் ஆயுள் குறைவதற்கும், ஆரோக்கியக் குறைபாட்டுக்கும் தொடர்பு உள்ளது என்று அறிவியல் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
இதுபோன்ற உணவுகள் சாப்பிடுவது அதிகரித்துள்ளதாக பிரான்ஸ் மற்றும் ஸ்பெயின் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். பாதிப்பு ஏற்படுவதை நிரூபிக்கும் முழுமையான ஆதாரமாக அவர்களுடைய ஆய்வு இல்லை. ஆனால் அல்ட்ரா பதப்படுத்தப்பட்ட உணவுகள், அதிகம் சாப்பிடுதலுக்கு இட்டுச் செல்கின்றன என்று கூறப்படும் ஆய்வுகள் நடைபெறும் சூழ்நிலையில் இந்த ஆய்வு முடிவுகள் வெளியாகியுள்ளன.
 
எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். ஆனால், இன்னும் ஆய்வு நடத்த வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.
 
அல்ட்ராபதப்படுத்தப்பட்ட உணவுகள் எவை?
 
தொழிற்சாலைகளில் எந்த அளவுக்கு அவை பதப்படுத்தப் பட்டிருக்கின்றன என்பதைப் பொருத்து இந்த உணவு வகைப்படுத்தப்பட்டுள்ளது.
 
குறைந்த கலோரி உணவு என்பது ``பதப்படுத்தப்படாத அல்லது குறைந்தபட்ச அளவு பதப்படுத்திய உணவுகள்'',
 
அவற்றில் அடங்குபவை பழங்கள், காய்கறிகள், பால், இறைச்சி, அவரை வகை காய்கறிகள், விதைகள், அரிசி போன்ற உணவு தானியங்கள், முட்டைகள்.
 
``பதப்படுத்திய உணவுகள்'' என்பவை அதிக காலம் கெடாமல் இருக்க அல்லது அதிக சுவை தருவதற்காக மாற்றம் செய்யப்பட்டவை. பொதுவாக உப்பு, எண்ணெய், சர்க்கரை அல்லது நொதித்தல் முறையை பயன்படுத்தியிருப்பார்கள். இந்தப் பிரிவில் அடங்குபவை பாலாடைக் கட்டி, பன்றி இறைச்சி, வீட்டில் தயாரித்த ரொட்டி, டின்களில் அடைக்கப்பட்ட பழங்கள் மற்றும் காய்கறிகள், புகை மூலம் பதப்படுத்திய மீன், பீர் போன்றவை.
 
அடுத்து வருவது ``அல்ட்ரா பதப்படுத்திய உணவுகள்'' தொழிற்சாலைகளில் அதிக பதப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டவை. இவற்றில் அடங்கியுள்ள பொருட்கள் என அவற்றின் பாக்கெட் மீது பெரிய பட்டியல் இருக்கும். கூடுதலாக சேர்க்கப்பட்ட பதப்படுத்தல் பொருட்கள், இனிப்பூட்டிகள் அல்லது நிறமேற்றிகள் என அதில் இருக்கும்.
 
ஐந்துக்கும் மேற்பட்ட பொருட்கள் கலந்திருந்தால், அது அநேகமாக அல்ட்ரா பதப்படுத்திய உணவுப் பொருளாகக் கருதப்படும் என்று நவர்ரா பல்கலைக்கழகப் பேராசிரியர் மைரா பெஸ்-ரஸ்ட்ரோலோ கூறுகிறார்.
 
இதற்கான உதாரணங்களாக பின்வருவனவற்றைக் கூறலாம். பதப்படுத்திய இறைச்சி வகைகள், காலை உணவு தானியங்கள், அல்லது தானிய கட்டிகள், உடனடியாக அருந்தும் சூப்கள், சர்க்கரைச் சத்து மிகுந்த குளிர்பானங்கள், சிக்கன் இறைச்சித் துண்டுகள், கேக், சாக்லெட், ஐஸ்கிரீம், அதிக அளவில் தயாரிக்கப்பட்ட ரொட்டி, பீஸ் பிஸா , போன்ற ``சாப்பிடுவதற்குத் தயாராக'' உள்ள உணவுகள், மதிய உணவுக்கு மாற்றான பானங்கள்.
 
கண்டறிந்த விஷயங்கள் எவ்வளவு மோசமானவை?
 
ஸ்பெயினில் உள்ள நவர்ரா பல்கலைக்கழத்தின் சார்பில் நடந்த முதலாவது ஆய்வில், 19,899 பேர் பத்தாண்டு காலம் கவனிக்கப்பட்டு, ஒவ்வோர் ஆண்டும் அவர்களுடைய உணவுப் பழக்கவழக்கங்கள் ஆய்வு செய்யப்பட்டன. ஆய்வுக் காலத்தில் 355 பேர் இறந்துவிட்டனர்.
 
அல்ட்ரா பதப்படுத்திய உணவு சாப்பிடாதவர்களில் 10 பேர் இறந்தால், அதை அதிகம் சாப்பிடுபவர்களில் (தினமும் நான்கு மடங்கிற்கு மேல்) 16 பேர் இறந்துள்ளனர்.
 
பாரிஸ் பல்கலைக்கழகம் நடத்தியுள்ள இரண்டாவது ஆய்வில் 105,159 பேர் ஐந்து ஆண்டுகளாக கவனிக்கப்பட்டு, ஒவ்வோர் ஆண்டும் இரண்டு முறை அவர்களுடைய உணவுப் பழக்கவழக்கங்கள் ஆய்வு செய்யப்பட்டன.
 
அல்ட்ரா பதப்படுத்திய உணவு வகைகளை அதிகம் சாப்பிடுவோருக்கு இருதய ஆரோக்கியம் மோசமாக இருப்பது அதில் கண்டறியப்பட்டது.
 
அல்ட்ரா பதப்படுத்திய உணவுகளை சாப்பிடுவோரில் 100,000 பேரில் 277 பேருக்கு இருதயம் தொடர்பான நோய்கள் வந்தன. இதைக் குறைவாக சாப்பிடுவோரில் 100,000 பேரில் 242 பேருக்கு இந்தப் பாதிப்பு இருந்தது.
 
குறைவாகப் பதப்படுத்திய உணவுகளைவிட, அல்ட்ரா பதப்படுத்திய உணவு அதிகம் சாப்பிடுவதால், ``அடுத்து வரும் தசாப்தங்களில் இருதயம் தொடர்பான நோய்கள் அதிகரிக்கும் நிலை ஏற்படும்'' என்று பாரிஸ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த டாக்டர் மதில்டே டவ்வியர் கூறியுள்ளார்.
 
ஆகவே இந்த உணவுகள் ஆரோக்கியத்தைப் பாதிக்குமா?
 
``இதற்கான ஆதாரங்கள் குவிந்து கொண்டிருக்கின்றன'' என்று டவ்வியர் கூறுகிறார். ``சுதந்திரமான ஆய்வுகள் எண்ணிக்கை அதிகரித்து வருவதை'' அவர் சுட்டிக்காட்டுகிறார். பதப்படுத்திய அல்ட்ரா உணவுகள் ``மிக நிச்சயமாக'' ஆரோக்கியத்துக்குக் கேடு விளைவிப்பவை என்று பேராசிரியர் பெஸ்-ரஸ்ட்ரோலோ கூறுகிறார்.
 
புற்றுநோய் ஆபத்து அதிகரிப்பு குறித்து கடந்த ஆண்டு ஒரு இணையத் தொடர்பு உருவாக்கப்பட்டது.
 
இந்த சவால் 100 சதவீதம் நிச்சயமானது. அதிகமாகப் பதப்படுத்திய உணவு மற்றும் ஆரோக்கியக் குறைபாட்டுக்கு இடையில் உள்ள தொடர்பு பற்றி ஆய்வுகள் பரிசீலித்துள்ளன. ஆனால் எதனால் என்ன பாதிப்பு, இரண்டில் எந்த விஷயம் இதற்குக் காரணம் என்று நிரூபிக்க முடியவில்லை.
 
அல்ட்ரா பதப்படுத்திய உணவுகளை அதிகம் சாப்பிடுபவர்களுக்கு புகைப்பிடித்தல் போன்ற மற்ற ஆரோக்கியமற்ற பழக்கங்களும் உள்ளன. இதைக் கணக்கிட ஆராய்ச்சியாளர்கள் முயற்சிக்கின்றனர்.
 
ஆனால் பொருத்தமான எல்லா விஷயங்களுமே இதில் கவனிக்கப்பட்டன என்பதற்கான உத்தரவாதம் கிடையாது என்று தி ஓப்பன் பல்கலைக்கழகத்தின் புள்ளியியல் பேராசிரியர் கெவின் மெக்கோன்வே கூறியுள்ளார்.
 
``இந்தச் செயல்பாடுகளின் பின்னணியில் ஏதோ இருக்கிறது என்ற எனது நம்பிக்கையை அதிகரிக்கும் வகையில் இந்த ஆய்வுகள் உள்ளன - ஆனால் இன்னும் நான் உறுதி செய்யும் நிலையில் இல்லை'' என்கிறார் அவர்.
 
அல்ட்ராபதப்படுத்திய உணவுகள் ஏன் கெடுதலானவை?
 
அல்ட்ரா பதப்படுத்திய உணவுகள் பற்றிய முதலாவது ஆய்வில், மக்கள் அதிகம் சாப்பிடுவதால் உடல் எடை அதிகரித்ததாகக் கண்டறியப்பட்டது.
 
ஆய்வில் பங்கேற்ற தன்னார்வர்கள் சாப்பிட்ட ஒவ்வொரு கைப்பிடி உணவையும் அமெரிக்க தேசிய ஆரோக்கிய நிலையங்களின் பேராசிரியர்கள் ஒரு மாத காலத்துக்கு கண்காணித்தனர்.
 
அல்ட்ரா பதப்படுத்திய உணவுகளைத் தந்தபோது, அவர்கள் தினமும் 500 கலோரிகள் அளவுக்கு அதிகமாக சாப்பிட்டனர்.
 
அவை சக்தி அடர்வு மிக்கவை. ஆனால் ஊட்டச் சத்துகளும், நார்ச்சத்துகளும் குறைவு.
உணவில் சேர்க்கப்பட்டுள்ள பொருட்கள் பாதுகாப்பு சோதனைக்கு உட்படுத்தப் பட்டுள்ள நிலையில், வெவ்வேறு உணவுகள் மூலமாக நிறைய சேர்க்கைப் பொருட்களை சாப்பிடுவது ஆரோக்கியக் கேடாக முடியும்.
 
சாப்பிடுவதற்கு எளிதாக இருப்பதால் மக்கள் இதை அதிகம் சாப்பிடுகிறார்கள்.
பழங்கள் மற்றும் காய்கறிகளைப் போன்ற ஆரோக்கியமான உணவுகளை, உணவுப் பட்டியலில் இருந்து தள்ளி வைக்கிறார்கள் - ஐஸ்கிரீம் கிடைக்கும் போது வாழைப்பழத்தை யார் விரும்புவார்கள்?
 
இந்த விஷயங்கள் குறித்து இன்னும் ஆராய்ச்சிகள் நடைபெறுகின்றன.
 
பயனுள்ள ஆலோசனை எதுவும் உண்டா?

 
அல்ட்ரா பதப்படுத்திய உணவு என்ற வார்த்தை புதிதாக இருக்கலாம். ஆரோக்கியத்துக்கான ஆலோசனை மிகவும் பழக்கமானது தான்: மத்திய தரைக்கடல் பகுதி மக்களின் உணவுப் பழக்கத்தை ஏற்றுக் கொள்வது அது.
 
குறைந்தபட்ச அளவுக்கு பதப்படுத்திய உணவுகள் அல்லது பதப்படுத்தாத உணவுகள் இந்த உணவுப் பழக்கத்தில் அடங்கும். இதில் பழங்கள், காய்கறிகள், மீன், கொட்டைகள், விதைகள், பீன்ஸ் வகைகள், அவரை வகைகள் மற்றும் முழு தானியங்களில் இதில் அடங்கும் என்று பிரிட்டன் இருதய அறக்கட்டளையின் மூத்த உணவு ஆலோசகர் விக்டோரியா டெய்லர் கூறுகிறார்.
 
``இந்த உணவுப் பழக்கத்துடன், தொடர்ந்து உடற்பயிற்சி செய்வது, புகை பிடிக்காமல் இருப்பது ஆகியவை இருதயம் மற்றும் ரத்த ஓட்ட நோய்கள் ஏற்படுவதன் ஆபத்தைக் குறைப்பதாகத் தெரிய வந்துள்ளது'' என்கிறார் அவர்.
 
அல்ட்ரா பதப்படுத்திய உணவுகள் மீது வரி விதிப்பது, விற்பனைக்கு கட்டுப்பாடுகள் விதிப்பது போன்ற நடவடிக்கைகளைப் பரிசீலிக்கலாம் என்று பேராசிரியர் பெஸ்-ரஸ்ட்ரோலோ கூறுகிறார். ஆதாரங்களின் அடிப்படையில் அவர் அவ்வாறு கூறியுள்ளார்.
 
அல்ட்ராபதப்படுத்திய உணவு என்ற லேபிள் முட்டாள்தனமானதா?
 
இந்த வகையான பிரெட் சாப்பிடுவதால் ஏதாவது வேடுபாடுகள் தோன்றுகிறதா?
நிச்சயமாக நிறைய விமர்சனங்கள் உள்ளன.
 
உணவுக்கு அல்ட்ரா பதப்படுத்திய உணவு என லேபிள் செய்வது தொடர்ச்சியாக இல்லாமல் போகலாம் என்று ரீடிங் பல்கலைக்கழகத்தில் சத்துணவு மற்றும் ஆரோக்கியத் துறை நிபுணராக இருக்கும் டாக்டர் குண்டர் குன்லே கூறுகிறார்.
 
``அதிக பதப்படுத்தல் செயல்பாடுகள் மற்றும் கூட்டுப் பொருள்கள் சேர்க்கப்படும் பாலாடைக் கட்டி அல்ட்ரா பதப்படுத்திய உணவாகக் கருதப்படாமல், கொறிப்பு உணவை அவ்வாறு கருதுவதற்குக் காரணம் இதுதான். ஆரோக்கியத்தில் ஏற்படுத்தும் தாக்கத்தின் அடிப்படையில் பரவலான உணவு வகைகளை இணைத்து வகைப்படுத்தல் செய்யப்பட்டுள்ளது. எந்த அளவுக்குப் பயன் தரக் கூடியது என்பதை பரிந்துரைகளுக்கான அடிப்படையாக அது கொண்டிருக்கிறது'' என்று அவர் குறிப்பிடுகிறார்.
 
இந்த ஆய்வுகள் பிரிட்டிஷ் மெடிக்கல் ஜர்னலில் வெளியிடப் பட்டுள்ளன.