செவ்வாய், 16 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Annakannan
Last Modified: வியாழன், 30 அக்டோபர் 2014 (20:03 IST)

இலங்கையின் அம்பாரையில் பசுக்களின் தலைகளை வெட்டி 'அச்சுறுத்தல்'

இலங்கையில் அம்பாரை மாவட்டம் திருக்கோவில் பிரதேசத்திலுள்ள வட்டமடு பகுதியில் மேய்ச்சலுக்கு விடப்பட்டிருந்த பசுக்களின் தலைகள் துண்டிக்கப்பட்டு, தங்களுக்கு அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டுள்ளதாக பிரதேச கால்நடை பண்ணையாளர்களினால் கவலை வெளியிடப்பட்டுள்ளது.

பிரதேசத்தில் ஒட்டப்பட்டுள்ள அறிவித்தல்
 
இந்தக் காணிகளின் உரிமை தொடர்பாகச் சில விவசாயிகளுக்கும் கால்நடைப் பண்ணையாளர்களுக்கும் இடையில் நீண்ட காலமாகவே முறுகல் நிலை காணப்படுகின்றது.
 
கடந்த திங்கட்கிழமை, இந்த விவகாரம் பொலிஸாரால் நீதிமன்றத்தின் கவனத்திற்கும் கொண்டு செல்லப்பட்டுள்ளது.
 
2014 நவம்பர் 5ஆம் திகதி வரை இரு சாராருக்கும் அந்த பகுதிக்குள் நுழைய, பொத்துவில் மஜிஸ்திரேட் நீதிமன்றத்தினால் தடையும் விதிக்கப்பட்டுள்ளது. 
 
நீதிமன்றத்தினால் தடை பிறப்பிக்கப்பட்டு 48 மணித்தியாலங்களுக்குள், இரண்டு பசுக்களின் தலைகள் அடையாளம் தெரியாத ஆட்களினால் வெட்டப்பட்டு, பிரதான வீதியொன்றில் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன.
 
இந்தச் சம்பவமானது, தங்களுக்கு அதிர்ச்சியையும் கவலையையும் அளித்துள்ளதாக பிரதேச கால்நடை வளர்ப்போர் சங்கத்தின் செயலாளரான சீனித்தம்பி அண்ணாதுரை கூறுகின்றார்.
 
பசுக்களின் தலைகள் காணப்பட்ட காணிகளிலிருந்து ஏனைய கால்நடைகளை அகற்றாவிட்டால் இதேநிலை தான் பண்ணையாளர்களுக்கும் ஏற்படும் என்ற கருத்துப்பட வாசக அட்டைகளும் அங்கு காணப்பட்டதாகவும் அவர் தெரிவிக்கின்றார்.
 
சம்பவத்துடன் தொடர்புடையவர்களைத் தங்களால் அடையாளம் காண முடியாவிட்டாலும் இந்தச் சம்பவமானது தங்களுக்கும் தங்களது கால்நடைகளுக்கும் பாதுகாப்பு இல்லை என்பதைக் காட்டுவதாகவும் அவரால் சுட்டிக் காட்டப்படுகின்றது.
 
சம்பவம் தொடர்பாக, தலை துண்டிக்கப்பட்ட பசுக்களின் உரிமையாளர்களினால் பொலிஸிலும் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதாக அறிய முடிகின்றது.
 
இது தொடர்பாக பொலிஸ் தரப்பின் கருத்தைப் பெற, பொலிஸ் பேச்சாளரான அஜித் ரோகணவை தொடர்புகொள்ள முயன்ற போதிலும் அவரது தொடர்பைப் பெற முடியவில்லை.