வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Suresh
Last Updated : செவ்வாய், 11 நவம்பர் 2014 (15:32 IST)

மூன்றாவது முறை போட்டி: உச்ச நீதிமன்றத்தின் ஆலோசனை ஜனாதிபதிக்கு அனுப்பப்பட்டது

மூன்றாவது முறையாகவும் ஜனாதிபதி தேர்தலில் தான் போட்டியிடுவது தொடர்பில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கேட்டிருந்த ஆலோசனைக்கான தமது பதிலை இலங்கை உச்சநீதிமன்றம் தனிப்பட்ட முறையில் ஜனாதிபதிக்கு அனுப்பிவைத்துவிட்டதாக உச்ச நீதிமன்ற வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
 
இந்நிலையில், ஆலோசனை கோரிய ஜனாதிபதியின் மனுவை திறந்த நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளச்சொல்லி தாம் முன்வைத்த கோரிக்கையை உச்ச நீதிமன்றம் நிராகரித்தது தொடர்பில் தமது நிறைவேற்று குழுவை அழைத்து ஆராயவுள்ளதாக இலங்கை வழக்கறிஞர்கள் சங்கம் கூறுகிறது.
 
பரந்துபட்ட அளவில் கருத்துகளைத் தெரிவிக்க வழக்கறிஞர்கள் சங்கம் தயாராக இருந்த நிலையில், திறந்த வெளி நீதிமன்றத்தில் வைத்து இவ்விவகாரத்தை ஆராய உச்ச நீதிமன்றம் தவறிவிட்டது என்றும் தமது அடுத்த கட்ட நடவடிக்கை நிறைவேற்றுக் குழுவில் தீர்மானிக்கப்படும் என்றும் வழக்கறிஞர்கள் சங்கத்தின் செயலாளர் அஜித் பத்திரன தெரிவித்துள்ளார்.