1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By
Last Modified: ஞாயிறு, 9 ஜூன் 2019 (18:23 IST)

பாலுறவு கொள்ளாமல் வாழ்பவர்களின் கதை: "மனநலத்தை காக்க பாலுறவைத் தவிர்த்தேன்”

பாலுறவு பற்றி பேசுவது, விவாதிப்பது, பாலியல் படங்களை பார்ப்பது சிலருக்கு அலாதியான பேரின்பமாக இருக்கும். ஆனால், சிலருக்கு பாலுறவு என்றாலே எரிச்சலும், வெறுப்பும் மட்டுமே நினைவுக்கு வரும். யார் இவர்கள்? இவர்கள் பாலுறவை ஏன் வெறுக்கிறார்கள்?
இந்த ஆண்டு தொடக்கத்தில், அமெரிக்காவின் பிரபல பத்திரிக்கையில் வெளியான அட்டைப்பட கட்டுரையில், பாலுறவு தனக்கு பெரும் வலியை ஏற்படுத்தலாம் என நினைப்பதாக பாடகர் ஜஸ்டின் பீபர் குறிப்பிட்டிருந்தார். அதுமட்டுமின்றி, ஹெய்லியை திருமணம் செய்வதற்குமுன், பாலுறவு கொள்ளாமல் இருந்ததாக வெளிப்படுத்தியிருந்தார். மேலும், "சிலநேரங்களில் மனிதர்கள் மகிழ்ச்சியாக இல்லாத போது பாலுறவு வைத்து கொள்கிறார்கள். இது அவர்களுடைய சுய-மதிப்பின்மையை காட்டுகிறது ," என்கிறார்.
 
பாலுறவு கொள்ளாமல் இருக்கும் பிரம்மச்சரிய நிலைக்கு ஆங்கிலத்தில் செலிபஸி என்று பெயர். இளைஞர்கள் குறைவாக பாலுறவு கொள்வதாக அறிக்கைகள் வெளியாகும் நிலையில் இந்த செலிபசி, அதாவது பிரம்மச்சரிய நாட்டம் பேசுபொருளாக்கியுள்ளது.
 
இந்த ஆண்டு தொடக்கத்தில், தி ஜெனரல் சொஸைட்டி சர்வே என்ற ஆய்வு நிறுவனம் ஆயிரக் கணக்கானோரிடம் நடத்திய கணிப்பு, கடந்தாண்டு அமெரிக்காவில் வயது வந்தோரில் 23 சதவீதம் பேர் பாலுறவு வைத்துகொள்ளவில்லை என்கிறது. இது கடந்த 10 ஆண்டுகளோடு ஒப்பிடும்போது, இரட்டிப்பாகி உள்ளது. இதில் அதிர்ச்சித் தரக்கூடிய விஷயம் என்னவெனில், பாலுறவு வைத்துகொள்ளாதோர் பட்டியலில் ஆண்கள்தான் அதிகம்.
 
அதிலும், 30 வயதுக்குள்ளானோரின் சதவீதம் கடந்த 2008ஆம் ஆண்டிலிருந்து ஒப்பிடும்போது, மும்மடங்காக அதிகரித்து 28% அளவுக்கு உயர்ந்துள்ளது. இந்த கணிப்புகள் 1972லிருந்து ஒவ்வொரு இரண்டாண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்பட்டு வருகின்றன.
 
பிரித்தானியர்கள் நிலை என்ன?
 
பிரிட்டிஷ் மெடிக்கல் ஜர்னல் என்ற சஞ்சிகையில், 34 ஆயிரம் வயது வந்தோரிடம் கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது. அதிலும், சமீபத்திய ஆண்டுகளில் பிரித்தானியர்கள் குறைவான அளவே பாலுறவு வைத்து கொள்வதாக சுட்டிக்காட்டியிருக்கிறது. கருத்துக் கணிப்பில் பங்கேற்ற 16 முதல் 44 வயதுக்குட்பட்டவர்களில், சரிபாதிக்கும் குறைவான ஆண்கள் மற்றும் பெண்கள் குறைந்தபட்சம் ஒரு வாரத்துக்கு ஒருமுறை மட்டுமே பாலுறவு வைத்து கொண்டதாக தெரிவித்துள்ளனர்.
 
பாலுறவால் என்னுடைய வாழ்க்கை எவ்வாறு பாதிக்கப்பட்டது? நான் என்ன காரணங்களுக்காக அதை வெறுக்கிறேன் என்று தங்களுடைய தனிப்பட்ட வாழ்க்கையை பிபிசியுடன் பகிர்ந்து கொண்டனர்.
"மனநலத்தை காக்க பாலுறவு தவிர்த்தேன்"
 
பல்கலைக்கழகப் படிப்பு முடித்துவிட்டு வீட்டுக்கு திரும்பியவுடன், சுமார் இரண்டரை ஆண்டுகளாக பாலுறவைவிட்டு ஒதுங்கி நிற்பதாக கூறுகிறார் 23 வயதாகும் சாரா.
 
"நான் நிறைய மனநலம் சார்ந்த பிரச்சனைகளை எதிர்கொண்டிருந்தேன். அச்சூழலை நான் மேலும் மோசமாக்கிக் கொள்ள விரும்பவில்லை. நான் பாலுறவு வைத்துகொள்வதை முழுமையாக நிறுத்திவிட்டேன். ஆனால், சில நேரங்களில் சுய இன்பம் காணும் பழக்கம் மட்டும் இருந்தது. காரணம், அப்பழக்கத்துக்கு இன்னொருவர் தேவையில்லை," என்கிறார் சாரா.
 
பாலுறவைத் தவிர்த்ததால் சுய கட்டுப்பாடு மற்றும் மிகப்பெரியளவிலான விழிப்புணர்வை தான் பெற்றதாக கூறும் சாரா, நண்பர்களுடன் பரஸ்பர புரிதலோடு பாலுறவு கொண்டாலோ அல்லது காதல் அற்ற உறவுகளில் சாதாரணமாக போகிற போக்கில் பாலுறவு கொண்டிருந்தாலோ அது தனது வாழ்க்கையை பெரும் சிக்கலுக்குள் இட்டு சென்றிருக்கும் என்கிறார்.
 
தற்போது, தனது வாழ்க்கை சிறப்பாக இருப்பதாகவும், எந்தவொரு விஷயத்திலும் சிந்தனையை ஒருநிலைப்படுத்த முடிவதாகவும் இதனால் தனது வாழ்க்கையில் எதையும் இழக்கவில்லை என்றும் தீர்க்கமாக கூறுகிறார் சாரா.
 
"பாலுறவு தனிச்சிறப்புமிக்கது அதை கொண்டாட வேண்டும்"
 
மனம் மற்றும் மனம் சார்ந்த ஆரோக்கியத்தை பாதுகாக்கும் பொருட்டு திருமணத்துக்குமுன், பாலுறவு வைத்துக்கொள்ள கூடாது என்பதை தான் சிறுவயதிலிருக்கும்போதே முடிவு செய்துவிட்டதாக கூறுகிறார் 31 வயதாகும் அனைஸ். இதுவரை தன்னுடைய வாழ்க்கையில் ஒரு முழுமையான நீடித்திருக்கக்கூடிய உறவு தனக்கு வாய்க்கவில்லை என்கிறார் அவர்.
 
"நான் 30 வயதை எட்டிய போது என் நண்பர்கள் பலர் திருமணம் செய்துள்ளதைப் பார்த்து, பாலுறவு வைத்து கொள்ளாததாலோ திருமணம் செய்யாததாலோ என்னுடைய வாழ்க்கையில் எதையாவது தவறவிட்டுள்ளேனா என்று நினைத்து பார்த்தேன். ஆனால், என்னுடைய வாழ்க்கையில் பாலுறவு தேவையில்லை என்று நான் முடிவெடுத்ததை நினைவூட்டிக்கொண்டபோது, அந்த உணர்வுகள் வெறும் சில வாரங்களே நீடித்தன."
 
"எனக்கு தெரிந்த பலர் தங்களுடைய படுக்கையில் தங்கள் இன்னாள் மற்றும் முன்னாள் காதலர்கள் எப்படி என்பதைத் தொடர்ந்து ஒப்பிட்டு பேசுகிறார்கள். ஆனால், நான் இதுபோன்று பேச வேண்டிய தேவையில்லை. எதிர்காலத்தில்கூட ஓர் உறவில் நுழையும்போதுகூட இந்த சுமையை நான் தூக்கிக் கொண்டு செல்லத் தேவையில்லை." என்கிறார் அனைஸ்.
 
பாலுறவு என்பது தனிச்சிறப்புமிக்கது என்று கூறும் அனைஸ், அதை கொண்டாட வேண்டும் என்றும், அது வெறும் உடல் சார்ந்த செயல்மட்டுமின்றி இருவருடைய மனம் சார்ந்த விஷயம் என்றும் கூறுகிறார் அனைஸ்.
 
"என் சக்தி முழுவதையும் தொழிலுக்காக அர்ப்பணித்தேன்"
 
பாலுறவு வேண்டாமென்று முடிவெடுப்பதற்கு முன், சிறுவயதில் தன்னுடைய வாழ்க்கையின் நோக்கத்தை உணராமல் பெண்களுடன் பாலுறவு கொள்வதற்காக பல செயலிகளை பயன்படுத்தியதாக கூறுகிறார் 29 வயதாகும் டேன்.
 
"என்னுடைய வாழ்க்கையில் பாலுறவு என்கிற ஒரு விஷயத்தை திசைத்திருப்ப பெண்களுடன் மேலோட்டமாக பழக ஆரம்பித்தேன். என்னுடைய சொந்த வாழ்க்கை மீதான பொறுப்பை ஏற்றுக்கொள்ள முடிவெடுத்தேன். காரணம், அடுத்தமுறை எனக்கென ஒரு உறவு அமையும்போது, அதில் வெற்றியாளனாக வர விரும்பினேன்."
 
"ஐந்து ஆண்டுகளாக பாலுறவு கொள்ளாமல் இருக்கிறேன். இதுதான் என் வாழ்நாளில் நான் எடுத்ததிலேயே மிகச்சிறந்த முடிவு. தற்போது, நான் என்னை முழுமையான மனிதனாக ஒரு நோக்கத்துடனும், திட்டத்துடணும் இருப்பவனாக உணர்கிறேன். என்னுடைய ஒட்டுமொத்த சக்தியையும் வேலை மற்றும் தனிப்பட்ட முன்னேற்றத்துக்காக பயன்படுத்தி கொண்டேன்."
 
தற்போது ஒரு பெண்ணை டேட் செய்வதாக கூறும் டேன், அவரை திருமணம் செய்யப்போவதாகவும், ஆனால் இதுவரை அந்த பெண்ணுடன் உடலுறவு கொண்டதில்லை என்றும் கூறுகிறார்.
 
பாலுறவு கொண்டதற்கு வருந்துகிறேன்
 
17 வயதாகும்போது தான் பாலுறவு வைத்துகொள்ள ஆரம்பித்ததாக கூறும் 21 வயதாகும் எலினா, அப்போதெல்லாம் பிறர் தன்னை பயன்படுத்தி கொண்டதாகவே உணர்ந்ததாக தெரிவித்துள்ளார்.
 
"பிறரோடு பேசும்போது திடீரென ஓர் எண்ணம் எழும், அவர்கள் நம்முடன் பாலுறவு வைத்துகொள்வதற்காகத்தான் நம்முடன் பேசுகிறார்களோ என்ற சந்தேகம் வரும். அளவுக்கதிமாக சிந்திக்கத் தொடங்கிவிட்டேன். என்னை விரும்பி பேசுகிறார்களா அல்லது என் உடலுக்காக பேசுகிறார்களா என்ற அச்சம் எழுந்தது. இந்த எண்ண ஓட்டங்கள் என் தலையை சுற்றி சுற்றி வந்ததால், பிறரோடு நெருங்கி பழகுவதை நிறுத்திக் கொண்டேன்," என்கிறார் எலினா.
 
தான் சிலரோடு கொண்ட உடலுறவுக்காக இப்போது வருந்துவதாக கூறும் எலினா, சிலரை திருப்திபடுத்துவதற்காக அவர்களுடன் நான் ஏன் பாலுறவு வைத்துகொள்ள வேண்டும் என்ற உணர்ந்ததாகவும், தொடர்ந்து பலருடைய பாலியல் விருப்பங்களை புறக்கணித்து ஒட்டுமொத்தமாக பாலுறவை விட்டே ஒதுங்கிவிட்டதாகவும் எலினா கூறுகிறார்.
 
"தற்போது என்னுடைய வாழ்க்கையில் பாலுறவு இல்லாமல் என்னுடைய தனிப்பட்ட விஷயங்களில் நான் அதிகம் கவனம் செலுத்துகிறேன். எனக்கு பிடித்தவர்களுடன் நான் பேசும்போது, அந்த நட்புறவை சுலபமாக வளர்க்க முடியும் என்ற எண்ணம் மேலோங்கி நிற்கிறது," என்கிறார் எலினா