1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By
Last Modified: புதன், 11 டிசம்பர் 2019 (20:11 IST)

குடியுரிமை சட்டத் திருத்த மசோதா: அசாம் மக்களின் போராட்டமும், பின்னணியும்

இந்திய அரசின் குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிராக அசாமில் இரண்டாவது நாளாக போராட்டங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய நாடுகளிலிருந்து இந்தியாவில் குடியேறிய முஸ்லிம் அல்லாத சிறுபான்மையினருக்கு குடியுரிமை வழங்க வழிவகை செய்யும் குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை நேற்று (செவ்வாய்க்கிழமை) நிறைவேற்றிய மத்திய அரசு, இன்று (புதன்கிழமை) மாநிலங்களவையில் நிறைவேற்றுவதற்கு முனைப்பு காட்டி வருகிறது.

மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வரும் வேளையில், மற்றொருபுறம் அசாம் மாநில மக்கள், குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.

நேற்றைய தினம், அசாமின் பல்வேறு பகுதிகளில் கடையடைப்பு செய்யப்பட்டு, மாநிலம் தழுவிய அளவில் மிகப் பெரிய போராட்டங்கள் நடைபெற்றன. இந்நிலையில், குடியுரிமை சட்டத் திருத்த மசோதா மீது இன்று (புதன்கிழமை) மாநிலங்களவையில் விவாதம் நடைபெற்று வரும் நிலையில், அம்மாநிலத்தில் இரண்டாவது நாளாக போராட்டங்கள் தொடர்ந்து வருகின்றன.
கெளகாத்தியில் நடைபெற்று வரும் போராட்டத்தால் அங்கு இன்று மாலை 6.15 மணியிலிருந்து தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கெளகாத்தியில் போராட்டக்காரர்களை கலைக்க கண்ணீர் புகை குண்டுகளும் பயன்படுத்தப்பட்டன.

இதுகுறித்து ஏஎன்ஐ செய்தி முகமையிடம் பேசிய கெளகாத்தி காவல்துறை ஆணையர் தீபக் குமார், கெளகாத்தியில் இயல்பு நிலை திரும்பும் வரை தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

சில பகுதிகளில் பேருந்துகள் தீ வைக்கப்பட்டு கொளுத்தப்பட்டன.

மேலும் ஒரு சில மாவட்டங்களில் போராட்டங்களை தடுக்கும் வகையில் அமல்படுத்தப்பட்ட 144 தடையையும் மீறி ஆர்ப்பாட்டக்காரர்கள் குவிந்ததால், காவல்துறையினர் தடியடி நடத்தினர். இந்நிலையில், வடகிழக்கு மாநிலங்களில் தீவிரமடைந்து வரும், குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிரான போராட்டத்தை தடுக்கும் வகையில், மத்திய அரசு ஜம்மு, காஷ்மீரில் முகாமிட்டுள்ள துணை ராணுவப்படையினரை அசாமுக்கு அனுப்பியுள்ளதாக ஏ.என்.ஐ. முகமை செய்தி வெளியிட்டுள்ளது.


குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நேற்று மக்களவையில் தாக்கல் செய்ததற்கு முன்பும், பின்பும் எதிர்க்கட்சிகள் கடுமையான வாதத்தை முன்வைத்தன. எனினும், பலத்த எதிர்ப்பையும் மீறி, அந்த மசோதா நேற்று பல மணிநேர விவாதத்துக்கு பின்னர் மக்களவையில் நிறைவேறியது.

அசாம் மக்களின் எதிர்ப்புக்கு காரணம் என்ன?

பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய நாடுகளிலிருந்து மத ரீதியிலான துன்புறுத்தல் காரணமாக இந்தியாவில் குடியேறிய முஸ்லிம் அல்லாத சிறுபான்மையினருக்கு குடியுரிமை வழங்க வழிவகை செய்யும் குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை அசாமை பூர்விகமாக கொண்டவர்கள் எதிர்ப்பதற்கு வேறுபட்ட காரணம் உள்ளது.

1971இல் நடைபெற்ற இந்தியா-பாகிஸ்தான் போர், வங்கதேச விடுதலை போர் ஆகியவற்றின்போது, ஒரு கோடிக்கும் அதிகமான வங்கதேச மக்கள் இந்தியாவின் அசாம், மேற்கு வங்கம், திரிபுரா உள்ளிட்ட மாநிலங்களில் குடியேறினர். காலப்போக்கில் அவர்களுக்கு இந்திய குடிமக்களுக்கு வழங்கப்படும் வாக்குரிமை உள்ளிட்ட பல்வேறு உரிமைகள் வழங்கப்பட்டன.
 
இந்நிலையில், அசாமில் குடியேறிய வங்கதேசத்தவர்களால் தங்களது வேலைவாய்ப்பு, அரசியல், கல்வி, பொருளாதாரம் உள்ளிட்ட உரிமைகள் பாதிக்கப்படுவதாக கூறி அசாமை பூர்விகமாக கொண்டவர்கள், பல்வேறு இயக்கங்களின் கீழ் அன்றைய காலத்தைத் தொட்டே போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதையடுத்து, 1971ஆம் ஆண்டு மார்ச் 24ஆம் தேதி அன்றோ அல்லது அதற்கு முன்னதாகவோ அசாமுக்கு வந்தவர்களுக்கு மட்டும் இந்திய குடியுரிமை அளிக்க முடிவு செய்து, 1951ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட தேசிய குடிமக்கள் பதிவேட்டை புதுப்பிக்கும் பணிகள் நடைபெற்று அதன் இறுதிப்பட்டியலும் சில மாதங்களுக்கு முன்னர் வெளியிடப்பட்டது.

இதையடுத்து, சட்டவிரோதமான முறையில் அசாமில் குடியேறிய வங்கதேசத்தவர்கள் வெளியேறுவார்கள் என்று அம்மாநிலத்தில் போராட்டத்தை முன்னெடுத்த இயக்கங்கள் நினைத்த நிலையில், தற்போது புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவின் மூலம் வங்கதேசத்திலிருந்து அசாம் உள்ளிட்ட மாநிலங்களில் குடியேறிய முஸ்லிம் அல்லாதோருக்கு இந்திய குடியுரிமை கிடைக்க வழிவகை ஏற்படுத்தும் என்ற காரணத்தினால் அம்மாநிலத்தில் மீண்டும் போராட்டங்கள் வெடித்துள்ளன.