வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. »
  3. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  4. »
  5. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By
Last Updated : புதன், 7 மே 2014 (18:31 IST)

தாய்லாந்து பிரதமர் இங்லுக் ஷினாவத் பதவி பறிப்பு

தாய்லாந்து நாட்டின் பிரதமர் இங்லுக் ஷினாவத் அவர்கள் பதவி விலக அரசியல் சாசன நீதிமன்றம் உத்தரவிட்டதை அடுத்து, புதிய பிரதமராக நிவ்வத்தம்ராங் போன்சாங்பைசாங் நியமிக்கப்பட்டுள்ளார்.

இங்லுக் ஷினாவத் பதவியிலிருந்த போது, அதிகாரத் துஷ்பிரயோகம் செய்தார் என அரசியல் சாசன நீதிமன்றம் கண்டறிந்துள்ளது.
 
கடந்த 2011 ஆம் ஆண்டு ஒரு மூத்த அதிகாரியை பதவி மாற்றம் செய்ததன் மூலம் ஷினாவத் அவர்கள் நாட்டின் அரசியல் சாசனத்தை மீறியுள்ளார் என்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
 
அந்த அதிகாரியை பதவியிலிருந்து மாற்றியதன் மூலம், தனது உறவினருக்கு உதவும் வகையில் இங்லுக் ஷினாவத் செயல்பட்டுள்ளார் என்று நீதிபதிகள் தமது தீர்ப்பில் கூறியுள்ளனர்.
 
பிரதமர் மட்டுமல்லாமல், அந்த பதவி மாற்றத்துக்கு உடந்தையாக இருந்த அமைச்சர்களும் பதவி விலக வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
 
இதையடுத்து எஞ்சியுள்ள அமைச்சர்கள் கூடி, தற்போது வர்த்தக்துறை அமைச்சராக இருக்கும் நிவ்வத்தம்ராங் போன்சாங்பைசாங் அவர்களை இடைக்காலப் பிரதமராக நியமித்துள்ளனர்.
 
இந்தத் தீர்ப்பு ஒரு புது வகையான ஆட்சிக் கவிழ்ப்பு என யிங்க்லுக் ஷினாவத்தின் கட்சி கூறியுள்ளது.
 
தாய்லாந்து கடந்த ஆறு மாதங்களாகவே அரசியல் நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறது என்பது குறிப்பிடத்தகுந்தது.