1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By
Last Modified: சனி, 14 பிப்ரவரி 2015 (13:00 IST)

காதல் நோயின் அறிகுறிகள் என்ன?

காதலில் வீழ்வது என்பது ஒருவித ரசாயன விவகாரம். அது நம் மனித ஜீவராசியின் இனவிருத்தியை உத்தரவாதப்படுத்தும் வகையில் உடலில் தொடர்ச்சியான பலவித ரசாயன மாற்றங்களை உண்டுபண்ணுகிறது என்கின்றனர் அறிவியலாளர்கள்.



வியாதியை ஒத்ததுதான் காதல் ( காலை அரும்பிப் பகலெல்லாம் போதாகி மாலை மலரும் இந்நோய் , ஞாபகம் வருகிறதா? ) . எனவே, ஒரு நோய் ஏற்பட்டால் என்ன விதமான அறிகுறிகள் உடலில் தோன்றுமோ அதே போல, தெளிவாகத் தெரியும் உடல் ரீதியான அறிகுறிகள் காதல் நோயாலும் ஏற்படும் என்கின்றனர் விஞ்ஞானிகள்.
 
இந்த அறிகுறிகள் என்ன ? - வியர்க்கும் கைகள், பசியின்மை ("பாலுங்கசந்ததடி சகியே படுக்கை நொந்ததடி") , முகம் உணர்ச்சிப்பெருக்கில் உப்புவது , இதயத்துடிப்பு அதிகமாதல் போன்றவை இவை .
 
காதலுக்கு பல கட்டங்கள் உண்டு. ஒவ்வொரு கட்டமும் ஒரு விதமான ரசாயனப் பொருட்களால் தூண்டப்படும் உடல் ரீதியான மாற்றங்களால் ஆட்டுவிக்கப்படுகின்றது.
 
முதலில் காமம் தோன்றும் ஒரு கட்டம் -- இது அடிப்படையான பாலியல் ரீதியான ஒரு வேகம்.
 
இது ஈர்ப்பு நிலைக்கு இட்டுச் சென்று பின்னர் உணர்வு ரீதியாக ஒன்று சேரும் நிலைக்கும் பின்னர் அதுவே நீண்ட கால உறவுக்கும் வழி வகுக்கிறது.
 
ஆனால் இவை எல்லாம் ஒரு குறிப்பிட்ட வரிசைக் கிரமத்தில் வரவேண்டியதில்லை என்கிறார் ஆராய்ச்சியாளர் ஹெலன் ஃபிஷர். இவர் அமெரிக்காவின் நியூ ஜெர்சியில் உள்ள ரட்ஜர்ஸ் பல்கலைக்கழகத்தில் பணிபுரிகிறார்.
 
"உங்கள் அலுவலகத்தில் வேலை பார்க்கும் சகாவுடனோ அல்லது கல்லூரியிலோ அல்லது உங்கள் சமூக வட்டத்தில் இருப்பவர் ஒருவருடனோ உங்களுக்கு ஏற்படும் ஒரு வித ஆழமான பற்றை , நேசத்தை நீங்கள் உணரலாம். இது மாதங்கள் அல்லது சில ஆண்டுகளுக்குப் பின்னர், மேலும் கனிந்து மாற்றம் பெற்றும் திடீரென நீங்கள் அவர் மீது காதல் வயப்படுவீர்கள்" என்று ஃபிஷர் பிபிசியிடம் கூறினார்.
 
எனவே பற்று முதலில் வருகிறது. அதன் பின்னர் மிகவும் ஆழமான காதல் , பின்னர் பாலியல் வேகத்துடன் தொடர்புள்ள உணர்வுகள் .... அல்லது நீங்கள் ஒருவரால் பாலியல் ரீதியாகக் கவரப்படலாம், அவர் மீது அதற்கு பின்னர் காதல் ஏற்படலாம், அதன் பின்னர் அவர் மீது ஆழமான பற்று அல்லது உணர்வுகள் ஏற்படலாம்.... அல்லது முதலில் ஒருவருடன் பாலியல் உறவு கொள்வதற்கு முன்னரேயே அவர் மீது நீங்கள் கண்மூடித்தனமாகக் காதல் கொள்ளலாம்" என்கிறார் அவர்.
 
இந்த ஒவ்வொரு கட்டத்திலும், ஒவ்வொருவிதமான ரசாயனப் பொருட்கள் உடலில் மாற்றங்களை ஏற்படுத்துவதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
 
காதல் படிகள்!
 
1. காமம் :காமம் என்பது செக்ஸ் ஹார்மோன்களான டெஸ்டொஸ்டீரோன் (Testosterone), மற்றும் ஈஸ்ட்ரோஜென் (Oestrogen) போன்றவற்றால் உந்தப்படுகிறது. டெஸ்டொஸ்டீரோன் என்ற ஹார்மோன் ஆண்களுக்கு மட்டும் சொந்தமானது அல்ல. அது பெண்களின் பாலியல் உணர்வுகளிலும் பெரும் பங்கு வகிப்பதாக நிரூபிக்கப்பட்டுள்ளது.



 
2. ஈர்ப்பு: இந்தக் கட்டம் காதலில் வீழ்ந்து மற்ற எல்ல விஷயங்களையும் காதலர்களால் சிந்திக்கக்கூட முடியாத நிலை. அவர்கள் உண்மையில் பசியை இழப்பார்கள். தூக்கம் தேவைப்படாது. தங்கள் காதலரைப் பற்றியே பகல் கனவு கண்டு கொண்டிருப்பார்கள்.
 
இந்த ஈர்ப்பு கட்டத்தில் "மோனோமைன்கள்" (monoamines) என்றறியப்படும் நரம்புகள் மூலம் செய்திகளைச் சொல்லும் ஹார்மோன்கள் முக்கிய பங்காற்றுகின்றன.
 
டோபோமைன் (Dopamine) இது ஒரு வகை ரசாயனம். இது கோக்கெயின் மற்றும் நிக்கோட்டினோரெபின்ப்ரின் என்றவைகளால் தூண்டப்படுகிறது. இதற்கு அட்ரினலின் என்ற மற்றொரு பெயரும் உண்டு. இதுதான் காதலர்கள் உடலில் வியர்வையை உருவாக்குவது, இதயத்தை படபடக்கச் செய்வது போன்ற வேலைகளைச் செய்யும் பொருள்.
 
செரொட்டோனின் என்ற மற்றொரு ரசாயனம் காதல் விவகாரத்தை ஏற்படுத்தும் ரசாயனங்களில் மிகவும் முக்கியமானது. இதுதான் காதல் வயப்பட்டவர்களை தற்காலிகமாக பைத்திய நிலைக்குத் தள்ளும் வில்லன் !
 
3. பற்று , பாசம் : இந்த கட்டம் ஈர்ப்புக் கட்டத்துக்கு அடுத்து ஏற்படுவது. அந்த உறவு நீடிக்கவேண்டுமென்றால் இந்த பற்று மிகவும் அவசியம். ஈர்ப்பு நிலை தொடர்ந்து நீடித்துக்கொண்டே இருந்தால், குழந்தைகளைத் தவிர வேறொன்றும் உற்பத்தி ஆகாது.
 
இந்தப் பற்று என்பது மேலும் நீண்ட காலம் நீடிக்கும் ஒரு உறுதிப்பாடு என்று சொல்லலாம். இந்தப் பிணை அல்லது பந்தம்தான் காதலர்களை ஒன்றாகப் பிணைத்து வைத்து, அவர்கள் குழந்தைகள் பெற்றெடுக்க உதவுகிறது.
 
இந்த "பற்று" கட்டத்தில், இரண்டு ஹார்மோன்கள் உடலில் சுரக்கின்றன. நரம்பு மண்டலத்தில் சுரக்கும் இந்த இரு ஹார்மோன்கள் சமூகப் பற்றை உருவாக்குவதில் முக்கிய பங்காற்றுகின்றன.
 
இது தவிர வேறு இரண்டு ரசாயனன்கள் உடலில் விளையாடுகின்றன.
 
வேசோப்ரெஸ்ஸின் (Vasopressin) : நீண்ட கால உறவு என்ற கட்டத்தில் ஒரு முக்கிய ரசாயனம் இது. இந்த ரசாயனம் ஆண்களால் அடக்கப்படும்போது, காதலர்களுக்கிடையே நிலவும் பந்தம் உடனடியாகக் குறைகிறது.

 
விசுவாசம் இழப்பது, துணைவரை( அல்லது துணைவியை) புதிய காதலர்களிடமிருந்து பாதுகாக்கத் தவறுவது போன்றவை இதனால் ஏற்படுகின்றன.
 
ஆக்ஸிடோசின் (Oxytocin) என்ற இந்த ரசாயனம் ஹைபொதலாமஸ் என்ற சுரப்பியால் வெளியிடப்படுகிறது. இது குழந்தைப் பேறு காலத்தின் போது சுரக்கிறது. இதுதான் தாய்ப்பால் உருவாக உதவுகிறது. இது தாய்க்கும் குழந்தைக்கும் இடையே ஒரு பந்தம், பிணைப்பு ஏற்பட உதவுகிறது.
 
இது காதலர்கள் அல்லது தம்பதியர் இருவர் உடலுறவு கொள்ளும்போது ஏற்படும் "பாலியல் உச்சகட்ட" நிலையிலும் வெளியாகிறது. இதுதான் வயது வந்தவர்களுக்கு இடையே பிணைப்பு ஏற்பட உதவுவதாகக் கருதப்படுகிறது.
 
அதிகம் உடலுறவு கொள்ளக் கொள்ள, தம்பதியருக்கிடையே பிணைப்பு ஆழமாகிறது என்கிறது இந்தக் கருத்தாக்கம் !
 
"ஆதலினார் காதல் செய்வீர் உலகத்தீரே", எனலாமா?