வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Murugan
Last Modified: திங்கள், 27 மார்ச் 2017 (19:49 IST)

ரஜினியின் இலங்கை பயணம் ரத்தானதற்கு எதிராக யாழ்ப்பாணத்தில் ஆர்ப்பாட்டம்

இடம்பெயர்ந்த மக்களுக்கென வவுனியா சின்னடம்பனில் லைக்கா நிறுவனத்தினால் புதிதாக அமைக்கபட்டுள்ள வீடுகளைப் பயனாளிகளுக்குக் கையளிக்கும் நிகழ்வில் கலந்து கொள்வதற்காக இலங்கைக்கு வருகை தரவிருந்த நடிகர் ரஜினிகாந்தின் வருகை ரத்து செய்யப்பட்டமைக்கு எதிராக யாழ்ப்பாணத்தில் இன்று திங்கள்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.


 

 
இதற்கான அழைப்பை ஈழத்துக் கலைஞர்கள் என்ற அமைப்பு விடுத்திருந்தது.

 
யாழ்ப்பாணம் நல்லூரில் இடம்பெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், நடிகர் ரஜினிகாந்த் இலங்கை வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்திருந்த விடுதலைச் சிறுத்தைக் கட்சிகள் தலைவர் தொல்.திருமாவளவன் மற்றும் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் தி.வேல்முருகன் ஆகியோரைக் கண்டித்து இந்த ஆர்ப்பாட்டத்தின் போது குரல் எழுப்பப்பட்டது.
 
இலங்கைப் பயணத்தை ரத்து செய்தார் ரஜினிகாந்த்:
 
'லட்சக்கணக்கான தமிழ் மக்கள் உங்களைக் காண ஆவலுடன் காத்திருக்கின்றோம். வா தலைவா வா!' என்ற வாசகத்துடன் திருமாவளவன், வேல்முருகன் ஆகியோரைக் கண்டிக்கும் வாசகங்கள் அடங்கிய சுவரொட்டிகள் முன்னதாக யாழ் நகர வீதிகள் எங்கும் ஒட்டப்பட்டிருந்தது.
 
இதேவேளை, நடிகர் ரஜினிகாந்தின் விஜயம் குறித்து கருத்து வெளியிட்டிருந்த தமிழ் தேசிய கூட்டமைப்பின் கட்சிகளில் ஒன்றாகிய ஈபிஆர்எல்எவ் கட்சியின் தலைவரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமாகிய சுரேஸ் பிரேமச்சந்திரன், வடமாகாணத்தில் பொதுமக்களின் காணிகளை ராணுவம் பிடித்து வைத்திருப்பது, வலிந்து காணாமல் ஆக்கப்பட்டுள்ளவர்கள் தொடர்பில் பாதிக்கப்பட்ட மக்கள் பல இடங்களிலும் தொடர்ச்சியாகப் போராட்டங்களை நடத்தி வருகின்ற ஒரு சூழலில் புதிதாகக் கட்டப்பட்ட வீடுகளைக் கையளிப்பதற்காக வருகின்ற நடிகர் ரஜினிகாந்த், இந்திய அரசுடன் தனக்குள்ள அரசியல் செல்வாக்கைப் பயன்படுத்தி,இந்திய அரசின் ஊடாக இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுத்து, இங்கு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கு, வழி செய்வார் எனில், அது வரவேற்கத்தக்கதாக இருக்கும் என தெரிவித்திருந்தார்.
 
இடம்பெயர்ந்துள்ள வீடுகளற்ற மக்களுக்கு வெறுமனே 150 வீடுகளைத் திறந்து வைப்பதற்காக நடிகர் ரஜினிகாந்த் வருகை தருவதாக இருந்தது, அவருக்கு உள்ள அரசியல் செல்வாக்கின் மூலம் பாதிக்கப்பட்ட மக்களுடைய பிரச்சினைகள் தீர்வதற்கு வழி கிடைக்குமானால் அதுவே சிறப்பானதாக இருக்கும் என்றும் அவர் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
ஆயினும், நடிகர் ரஜினிகாந்த் போன்ற கலைஞர்கள் வருவதன் ஊடாக பாதிக்கப்பட்ட மக்களின் பல்வேறு தேவைகளை பூர்த்தி செய்வதற்கான வாய்ப்புக்கள் கிட்டும். அதேநேரம் இலங்கைக்கு வருகை தருகின்ற நடிகர் ரஜினிகாந்த் போன்றவர்களை இலங்கைக்கு வரக் கூடாது என்று கூறுவதற்கு எவருக்கும் உரிமை இல்லை என ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டிருந்தவர்கள் தெரிவித்திருக்கின்றனர்.