வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Ashok
Last Updated : ஞாயிறு, 11 அக்டோபர் 2015 (19:29 IST)

60 வீதமான குடும்பங்களுக்கு இந்திய வீடுகளை பெறத் தகுதி இல்லை

இலங்கையின் கிழக்கே திருகோணமலை மாவட்டம் சம்பூர் பிரதேசத்தில் மீள்குடியேற்றத்தின் பின்னர் இந்திய-உதவி வீடுகளை பெறுவதற்கு தெரிவான குடும்பங்களில் 59 வீதமான குடும்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.


 
வீடுகளை பெற விதிக்கப்பட்டுள்ள தகுதிகள் மற்றும் புள்ளிகளின் அடிப்படையிலேயே இந்த குடும்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகளினால் அறிவிக்கப்பட்டுள்ளது.
சம்பூர் பிரதேசத்தில் அதிகாரபூர்வமாக 344 குடும்பங்கள் 9 ஆண்டுகளின் பின்னர் தற்காலிக குடியிருப்புகளை அமைத்து மீளக்குடியேறியுள்ளன.
 
அப்பகுதியில் அரச முதலீட்டு வலயத்திற்கு என சுவீகரிக்கப்பட்டு பின்னர் முதல் தொகுதியாக விடுவிக்கப்பட்டுள்ள காணிகளில் மட்டும் 204 குடும்பங்கள் மீளக்குடியேறியுள்ளன.
இந்த குடும்பங்களே முன்னுரிமை அடிப்படையில் இந்திய உதவி வீடுகளுக்கு பிரதேச செயலக அதிகாரிகளினால் தெரிவாகியிருந்தன.
 
இந்திய உதவி வீடமைப்பு திட்டத்தை செயல்படுத்தும் யு. என். ஹபிட்டாஸ் வெளியிட்டுள்ள பட்டியலில் 84 குடும்பங்கள் மட்டுமே அந்த வீடுகளைப் பெற தகுதி பெற்றுள்ளதாக கூறப்படுகின்றது.
 
இது பற்றிய கூட்டமொன்றில் யு. என் ஹபிட்டாஸ் உட்பட அதிகாரிகளினால் மக்களுக்கு அறிவிக்கப்பட்ட போது அனைத்து குடும்பங்களும் அதற்கு ஆட்சேபனை தெரிவித்து, நிபந்தனைகள் அல்லது புள்ளிகள் தொடர்பில் தாங்களுக்கு விதி விலக்கு அளிக்க வேண்டும் என்று அதிகாரிகளிடம் வலியுறுத்தியாக கிழக்கு மாகாண சபை உறுப்பினரான குமாரசாமி நாகேஸ்வரன் தெரிவிக்கின்றார்.
 
2008, 2009ம் ஆண்டுகளின் மதிப்பீடுகளின் அடிப்படையில் தற்போது வழங்கப்படுகின்ற 5 இலட்சத்து 50 ஆயிரம் ரூபா தொகை போதுமானதாக இல்லை என்பதால் அதனை குறைந்தபட்சம் 7 இலட்சம் ரூபாவாக அதிகரிப்பதில் இந்திய அரசு கவனம் செலுத்த வேண்டும் என்ற கோரிக்கையையும் மக்கள் அதிகாரிகளிடம் முன் வைத்துள்ளதாகவும் அவர் கூறுகின்றார்.