வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Mahalakshmi
Last Modified: வியாழன், 23 ஜூலை 2015 (14:02 IST)

இலங்கை இறகுப்பந்து சங்கத்தை இடைநீக்கியது உலகச் சம்மேளனம்

இறகுப்பந்து விளையாட்டுக்கான உலகச் சம்மேளனம் இலங்கை இறகுபந்துச் சங்கத்தை இடைநீக்கம் செய்துள்ளது.
இந்த இடைநீக்கம் உடனடியாக அமலுக்கு வருகிறது என சர்வதேச சம்மேளனம் இன்று அறிவித்துள்ளது. இலங்கையின் இறகுபந்து விளையாட்டு சங்கம் எப்படி நிர்வகிக்கப்படுகிறது என்பது தொடர்பில் கடந்த 18 மாதங்களாக சர்வதேச சம்மேளனத்துடன் இடம்பெற்றுவந்த தகவல் பரிமாற்றங்களின் பின்னரே இந்த இடைநீக்க நடவடிக்கை வந்துள்ளது.
 
இலங்கை இறகுப்பந்து விளையாட்டுச் சங்கத்தின் சட்டவிதிமுறைகள், சர்வதேச சம்மேளனத்தின் உறுப்பினராக தொடரும் வகையில் இல்லை என தாங்கள் தீர்மானித்துள்ளதாக உலகச் சம்மேளனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
 
இலங்கைச் சங்கத்தில் அரசியல் தலையீடுகளும் கட்டுப்பாடுகளும் உள்ளன, நாட்டின் விளையாட்டுச் சட்டங்களையும் தேசியச் சங்கத்தின் மீது அரசு திணிப்பதால், அதனுடைய சுயாதீனத் தன்மை பாதிக்கப்பட்டுள்ளது என்று தாங்கள் தீர்மானித்துள்ளதாக இறகுபந்து விளையாட்டுக்கான உலகச் சம்மேளனம் தெரிவித்துள்ளது.
 
இலங்கைச் சங்கம் சுயாதீனமான வகையில் தனது நிர்வாகத்தை முன்னெடுத்துச் செல்ல முடியவில்லை என்பதால், தமது சட்டவிதிகளுக்கு அமைய அச்சங்கத்தின் உறுப்புரிமையை இடைநீக்கம் செய்யவேண்டியதாயிற்று என உலகச் சம்மேளனம் கூறுகிறது. இதையடுத்து இடைநீக்க காலத்தில் உறுப்பினருக்கான அனைத்து உரிமைகளையும் இலங்கைச் சங்கம் இழக்கும்.
 
இதையடுத்து இலங்கையைச் சேர்ந்த எந்தவொரு விளையாட்டு வீரரும் இறகுப் பந்து விளையாட்டுக்கான உலகச் சம்மேளனம் நடத்தும் எந்தப் போட்டியிலும் கலந்துகொள்ள இயலாது. அதுமட்டுமன்றி இலங்கையிலும் எந்தவொரு போட்டியை நடத்த அனுமதியும் வழங்கப்படாது. உலகச் சம்மேளனத்தின் பொதுக்குழு கூட்டத்திலும் இலங்கையால் பங்குபெற முடியாது. இந்த நடவடிக்கை குறித்து இலங்கை இறகுப்பந்துச் சங்கத்தின் கருத்துக்கள் கிடைக்கவில்லை.