வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Annakannan
Last Modified: புதன், 17 செப்டம்பர் 2014 (20:37 IST)

ஸ்காட்லாந்து சுதந்திரம்: இறுதிக் கட்ட பிரசாரம் அனல் பறக்கிறது

ஸ்காட்லாந்துக்கு சுதந்திரம் குறித்த கருத்தறியும் வாக்கெடுப்பு நாளை வியாழக்கிழமை நடக்கவுள்ள நிலையில், இது குறித்த இரு தரப்பு பிரசாரம் உச்சகட்டத்தை எட்டியிருக்கிறது.

 
ஸ்காட்லாந்து மக்கள் தங்கள் எதிர்காலத்தை தங்கள் கைகளிலேயே எடுத்துக்கொள்ள வேண்டும் என்று ஸ்காட்லாந்து முதல் அமைச்சரும், ஸ்காட்லாந்து சுதந்திரத்துக்கான பிரசாரத்துக்கு தலைமை தாங்குபவரான , அலெக்ஸ் சால்மண்ட் கோரியிருக்கிறார்.
 
ஸ்காட்லாந்து சுதந்திரம் பெற்றாலும், அது பவுண்டையே தனது நாணயமாக வைத்துக்கொள்ளும் என்று அவர் பிபிசியிடம் பேசுகையில் கூறினார்.
 
எஞ்சியிருக்கும் பிரிட்டனுடன் பவுண்டை பொது நாணயமாக வைத்துக்கொள்வது என்பது குறித்த ஒரு பொதுப் புத்தியின் அடிப்படையிலான உடன்பாடு ஒன்றை பிற பிரிட்டிஷ் அரசியல் தலைவர்களுடன் எட்டலாம் என்றும் அவர் கூறினார்.
 
ஸ்காட்லாந்து பிரிந்துபோகக் கூடாது என்று வாதாடும் அணியின் தலைவரான, அலிஸ்டர் டார்லிங், ஸ்காட்லாந்து ஐக்கிய ராச்சியத்தின் ஒரு பகுதியாகவே இருக்கவேண்டும் என்று கோருவதில் தேச பக்தியற்ற செயல் ஏதுமில்லை என்றார்.
 
போட்டி மிகவும் கடுமையாக இருப்பதாக கருத்துக் கணிப்புகள் காட்டுகின்றன.
 
சமீபத்தில் வெளிவந்த மூன்று வெவ்வேறு கருத்துக் கணிப்புகள் ஸ்காட்லாந்து பிரிவினைக்கு எதிரான தரப்புக்கு சுமார் நான்கு புள்ளிகள் வித்தியாசத்தில் கூடுதல் ஆதரவு இருக்கிறது என்றும் ஆனால் இன்னும் சுமார் 8லிருந்து 14 சதவீத வாக்காளர்கள் எந்த முடிவும் எடுக்காமல் இருக்கிறார்கள் என்றும் காட்டின.
 
'ஸ்காட்லாந்து ஐரோப்பிய ஒன்றியத்தில் சேர மீண்டும் விண்ணப்பிக்க வேண்டும்'
 
இதனிடையே, இத்தகைய கருத்தறியும் வாக்கெடுப்புகள், ஐரோப்பிய ஒன்றியத்துக்கு நல்லதல்ல என்று ஸ்பெயின் பிரதமர் மரியானோ ரஜோய் கூறியிருக்கிறார்.
 
இவை பொருளாதார மந்தநிலையையும் வறுமையையும்தான் விளைவிக்கும் என்றும் அவர் கூறினார்.
 
ஸ்காட்லாந்து சுதந்திரம் பெற்றால், அது ஐரோப்பிய ஒன்றியத்தில் சேர திரும்ப விண்ணப்பிக்க வேண்டியிருக்கும் என்று அவர் மீண்டும் கூறினார்.
 
ஆனல் ஸ்காட்லாந்து சுதந்திரம் பெற்றால் அதன் ஐரோப்பிய ஒன்றிய உறுப்புரிமையை இழக்கக்கூடும் என்று சொல்லப்படுவதை பிபிசியிடம் பேசிய ஸ்காட்லாந்து முதல் அமைச்சர் அலெக்ஸ் சால்மண்ட் நிராகரித்தார்.
 
ஓய்வு பெற்ற ராணுவத் தளபதிகள் அறிக்கை
 
ஸ்காட்லாந்து ஐக்கிய ராச்சியத்திலிருந்து பிரிந்து போவதென்பது சம்பந்தப்பட்ட எல்லோரையும் பலவீனப்படுத்தும் என்று பிரிட்டிஷ் ராணுவத்தில் பணி புரிந்து ஓய்வுபெற்ற 14 உயர் அதிகாரிகள் கூறுகிறார்கள்.
 
ஸ்காட்லாந்து மக்களுக்கு, பிரிட்டனின் 'சன்' பத்திரிகையின் மூலம் எழுதிய வெளிப்படையான கடிதத்தில், இந்த ஓய்வு பெற்ற ஜெனெரல்கள், அட்மிரல்கள் மற்றும் விமானப் படைத் தளபதிகள் , வரலாற்றிலேயே மிகவும் வெற்றிகரமான கூட்டணியான ஐக்கிய ராச்சியம், இந்தப் பிரச்சினையால் உடைந்து, அதன் மூலம், ஒரு சிக்கலான உலகில், மக்களை அபாயத்தில் ஆழ்த்திவிடும் என்று கூறினர்.
 
ஆனால், ஸ்காட்லாந்து தேசியவாதிகளின் தலைவரான, அலெக்ஸ் சால்மண்ட், இந்த ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரிகளின் தலையீட்டை விமர்சித்தார். தங்களது ராணுவ சேவையை அரசியல் காரணங்களுக்காக இவர்கள் பயன்படுத்தக் கூடாது என்றார் சால்மண்ட். இந்த சேவை என்பது ஜனநாயகத்துக்கு, மகாராணிக்குமானது என்றார் அவர்.