வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Murugan
Last Modified: செவ்வாய், 6 செப்டம்பர் 2016 (20:55 IST)

மூளையை பாதிக்கும் வாகனப்புகை: புதிய ஆய்வு எச்சரிக்கை

நகரங்களின் நுண்ணிய வாகன மாசுத்துகள்கள், மூளைக்குள் செல்வதாகவும் மூளையில் ஏற்படும் அல்சைமர்ஸ் நோய்க்கான காரணிகளில் ஒன்றாக அது இருக்கலாம் என்றும் புதிய ஆய்வின் முடிவுகள் குறிப்புணர்த்துகின்றன.



ஐக்கிய ராஜ்ஜிய விஞ்ஞானிகள் மேற்கொண்ட இந்த ஆய்வின் முடிவுகள் நகரவாழ்வின் சுகாதார ஆபத்துக்கள் குறித்த புதிய கேள்விகளை எழுப்பியுள்ளன.

வாகனபுகையால் மூச்சுத்திணறல், இதயநோய், அகால மரணம் போன்றவை ஏற்படும் என்பது நன்கு தெரிந்த செய்தி.

தற்போதைய இந்த புதிய ஆய்வு, வாகனப்புகை மூளைக்குள் சென்று பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என்று கவலையளிக்கும் சாத்தியத்தை கண்டுபிடித்திருக்கிறது.

சாதாரண கண்களுக்கு புலப்படாத சின்னஞ்சிறு இரும்புத்துகள்கள் மூளையில் படிந்திருப்பதை இந்த ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

ஒருகிராம் மனித மூளைத்திசுவில் மில்லியன் கணக்கில் இவை படிந்திருக்கின்றன. எனவே மூளைச்செல்களுக்கும் மூளைக்கும் சேதம் ஏற்படுவதற்கு மில்லியன் கணக்கான சாத்தியங்கள் இருக்கின்றன என்கிறார்கள் இந்த ஆய்வாளர்கள்.

இந்த துகள்கள் மேக்னடைட் என்று அறியப்படுகின்றன.

வாகனப்புகையில் இருக்கும் மாசின் பெரிய துகள்கள் மூக்குவழியாக உள்வாங்கப்படும். அவற்றில் சிறியவை நுரையீரல் மூலம் ரத்தத்துக்குள் நுழையும். அதனிலும் சிறியவை, மூக்கை மூளையுடன் இணைக்கும் நரம்புகள் மூலம் மூளைக்குள் செல்வதாக இந்த ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளன.

மூளைச்செல்களுக்கு இடையிலான தொடர்பாடலை தடுக்கும் பாசி அல்லது மாசு மூளைக்குள் வளர இந்த மேக்னடைட் துகள்கள் தூண்டுகோலாக இருக்கலாம் என்றும் மூளையை பாதிக்கும் அல்சைமர்ஸ் போன்ற நோய்கள் உருவாக இவையும் ஒரு காரணியாக அமையலாம் என்றும் கருதப்படுகிறது.

ஆனால் இது ஆரம்பகட்ட ஆய்வு மட்டுமே. இந்த மேக்னடைட் துகள்களுக்கும் அல்சைமர்ஸ் நோய்க்கும் நேரடித்தொடர்பு இருக்கிறதா என்கிற கேள்விக்கான தெளிவான பதில் இந்த ஆய்வில் கிடைக்கவில்லை.

அதேசமயம், வாகன நெரிசலுக்கும் மனித மூளை மாசடைதலுக்கும் இடையிலான தொடர்பு குறித்து புத்தம்புது ஆய்வுகளத்திற்கான துவக்கமாக இந்த முடிவுகள் பார்க்கப்படுகிறது.